Wednesday, December 16, 2009

புழுதி படிந்த புனித நூல்



" இந்தியா எங்களுக்கு அருவருப்பூட்டுகிறது. இந்தியாவில் சுத்தமே இல்லை. எங்கள் ஊரில் ஒரு ஈ கூட இல்லை. ஒரு கொசு கூட இல்லை."
சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த உறவினரின் சிறுமகள் இப்படிச் சொன்னாள். அவளின் வயதில் அப்படிப் பார்ப்பது தவறில்லை. ஆனால் இந்த மனப்பான்மை புலம் பெயர்ந்து அயல் நாட்டில் வாழும் பெற்றோர்களால் தங்கள் பிள்ளைகளின் மனதில் உருவாக்கப்படுகிறது என்பது ஆரோக்கியமானதன்று. இது சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது.
இந்தியாவில் பிறந்து கால் நூற்றாண்டு காலம் இங்கேயே வளர்ந்து  பின்பு தொழில் நிமித்தம் வெளிநாட்டிற்குச் சென்ற ஒரு 'தமிழனின்' மனதில் தன தாய்நாடு பற்றிய பிரக்ஞை இத்தனை மோசமாக இருப்பதன் காரணம் என்ன. சுத்தம், சுத்தமின்மை என்பதைத் தாண்டி ஒரு நாட்டின் மீது செலுத்துவதற்கு வேறு பார்வை எதுவுமே இவர்களிடம் இல்லை. தன சந்ததிக்குக் கொடுப்பதற்கும் இவர்களிடம் இருப்பது இந்த ஒற்றைப் பார்வைதான். 
முப்பது வருஷங்கள் இம்மண்ணில் வளர்ந்த ஒரு மனிதனின் மனம் இந்நாட்டின் தனித்தன்மை எதனையும் உள்வாங்காமல் வெற்றுப்பாத்திரமாகவே இருந்துள்ளது. இது எப்படிச் சாத்தியம் என்பது வியப்பையே தருகிறது. அத்தனை மழுங்கிய / மழுக்கிய மூளையா? 
   பல்லாயிரம் வருட வரலாற்று மரபு
 கொண்ட நாட்டில் வளர்ந்தும் வெறுமையாக உள்ள ஒரு மனம் ஐம்பது வருட வரலாறு கூட உருப்படியாக இல்லாத ஒரு காலனியாதிக்கத் தயாரிப்பு நாடு வழங்குகின்ற ஆழமில்லாத மதிப்பீடு ஒன்றை உடனடியாகப் பெற்றுக்கொண்டு அதையே தன மேதாவிலாசமாக முன்வைக்கிறது. இது எத்தனைப் பெரிய அபத்தம் என்பது அதற்க்கு உரைப்பதில்லை. அதற்குத் தேவையெல்லாம் பகட்டுத்தனம் நிறைந்த நாகரிகம் மட்டுமே. 
சிங்கப்பூர் மட்டுமல்ல. இதுதான் வரலாற்று மரபு இல்லாத அமெரிக்கா போன்ற நவீன நாடுகள் உருவாக்கும் பார்வை. 
இந்தியா போன்ற மரபுச் செழுமை உள்ள நாடுகள் புழுதி படிந்த புனித நூல். நவீன நாடுகள் அட்டை பளபளக்க கடையில் கவர்ச்சியுடன் தொங்கும் பத்திரிக்கை ஏடுகள்.
இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது. 
இந்தியாவிற்கு 'தேசம்' என்று பெயர். 'தேசு' என்றால் ஒளி.
நாம் இம்மண்ணில் காண்பது தேசு.
சிலர் இம்மண்ணில் காண்பது தூசு.  


Monday, November 23, 2009

உரைநடை - நடந்துதான் பார்க்கலாம்!

"பிரபஞ்சக்குடில் போட்டிருக்கிறீர்கள். நான் கொட்டாரவாசி. குடிலுக்கு எப்போதாவதுதான் விருந்தாளியாக வருவேன்." என்று நண்பர் மௌலா அப்துல் காதிர் கூறினார். அதன் அர்த்தத்தையும் அவரே சொன்னார், "கவிதைகள் எனக்கு விளங்குதல் கடினம். உரைநடையே பழக்கம்." 
விருந்தினருக்கு எது பிடிக்குமோ அதைச் சமைத்து வைப்பதுதான் முறை. "இது எங்க ஊரு பதார்த்தம். சாப்பிட்டுப் பாருங்க" என்று கூறி சில பல வகைகளை வைப்பதும் உண்டல்லவா? அதுபோல், கொட்டாரவாசிகளுக்கும் இதர வட்டாரவாசிகளுக்கும் அவ்வப்போது கவிதைகளைப் பரிமாறிக்கொண்டே உரைநடைப் பதிவுகளை  வழங்கலாம்  என்று பத்து நாள் யோசனைக்குப் பிறகு முடிவாகிவிட்டது.
"வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்" என்று ஓஷோவின் நூல் ஒன்று உண்டு. ஏறக்குறைய அதே நிலைதான். வண்டி வண்டியாக வார்த்தைகளைக்  கொட்டி எழுதும் பழக்கம் எனக்கில்லை. சொல்லப்போனால் நான் கவிதை எழுத ஆரம்பித்ததே சொல் சிக்கனத்துக்காகத்தான். சுருங்கக் கூறி விளங்க வைத்தல் என்பார்களே, அதுபோல. அல்லது சுருங்கக் கூறி குழப்பி வைத்தல் என்றாலும் எனக்குச் சம்மதமே.
மனதிற்குள் மௌனம் குடி கொள்ள வேண்டி என்ன பாடுகள்? வார்த்தைகள் மறைய நாளெல்லாம் தியானத்தில் ஒற்றைத் திருப்பெயர் மட்டும் மூச்சில் இழையும் லயம் கண்டிருத்தல் அனுபவித்தபின் வார்த்தைகளின் வெள்ளப்பெருக்கு சகிக்கக் கூடியதன்று. இதில் நான் தமிழ் விரிவுரையாளன் வேறு!
வலம்புரி ஜான் அவர்களுக்கு "வார்த்தை வங்கி" என்று ஒரு பட்டம் யாரோ சூட்டியிருந்தார்கள். என் வங்கியோ
 திவாலாகிக்கொண்டிருப்பதையே விரும்புகிறேன்.
"வேதம் கண் போன்றது. அதற்குக்  கூறப்படும் உரை கண்ணுக்கு மை இடுதல் போல் இருக்க வேண்டும். அதிகமாகிவிட்டால் அசிங்கமாகிவிடும். லேசாகத் தீட்டவேண்டும்." என்பது பாரதியின் "வேதத் திருவிழியாள்" என்னும் பாடலின் கருத்து.
என் உரைநடை அதுபோலத்தான் அமையும் என்று நினைக்கிறேன்.

Monday, October 26, 2009

இதோ புத்துணர்ச்சி தரும் ஹைகூ ஒன்று


சும்மா இரு
வசந்தம் வருகிறது
புல் தானாகவே வளர்கிறது.

Sunday, October 25, 2009



பிரபஞ்சக்குடில்


நாம்

தனிமையில் இருந்தபோது

பிரபஞ்சம் அடங்கியது

குடிலுக்குள்.



ஒரு சூபிக் கவிதை

"நீ

என்னுடன் இருந்தாய்

இரண்டாம் நபர் யாரும்

இல்லாதபோது."

- மூமின் கான் மூமின்