Tuesday, August 28, 2012

சூஃபியும் காஃபியும்



இயைபான சொற்களில் ஓர் ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆங்கிலம் தமிழ் அரபி உருது என்று செவியில் கிடைத்த மொழிகளில் எல்லாம் இயைபுச் சொற்களை அறிந்து பரவசப்படுகிறான் என் பிள்ளை. அப்படி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதில் ஒருநாள் சிக்கியது சூஃபி-காஃபி என்னும் ஜோடி!

காஃபியின் வாசத்திற்கு நான் ரஸிகன். லாட்டே, மோக்கா என்று சகதர்மினி அவ்வப்போது ஒரு சாண் உயரப் பீங்கான் கோப்பையில் ஆவி பறக்கக் கொண்டு வந்து தரும் தருணங்கள் வாழ்வில் வரம். அதிலும் பரபரப்பில்லாத விடுமுறை நாளென்றால் கேட்கவா வேண்டும். மேலும், மழைநாள் எனில்... உச்சம்!

சூஃபி-காஃபி என்னும் இயைபு வெறும் வார்த்தையளவில் மட்டும் ஜோடி அல்ல. மெய்யாலுமே அப்படித்தான்.

தமிழக வாழ் அல்லது இந்தியத் திருநாட்டின் முஸ்லிம்கள்தான் ச்சாயாப் பிரியர்களாக, அதாவது டீ ரசிகர்களாக இருக்கிறார்கள். “இத்தனைக்கும் டீ பச்சை நிறத்தில் கூட இல்லை” என்று நாகூர் ரூமி கிண்டல் செய்வார். எங்கள் வீட்டு வட்டாரங்களிலும் அப்படித்தான். ”தேத்தண்ணி தேத்தண்ணி” என்னும் சப்தம் சகஜமான ஒன்று.

ஆனால் காஃபி என்பது தமிழகத்தைப் பொருத்தவரை பிராமணர்களின் பானம் என்றே ஆகிவிட்டது. நானும்கூட நல்ல காஃபி சுவைக்கப் பழகியது, என் பால்ய வயதில், எங்கள் குடும்ப நண்பராக இருந்த கல்யாணி மாமி வீட்டில்தான். அவர் போட்டுத் தரும் டிக்காஷன் காஃபியின் மணம் மூக்கில் இழையும் போதே நாக்கில் ஜலம் ஊறும்.

இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது? கலாச்சாரப் பிணைப்புகள். தாவோ / ஜென் ஞானிகள் கண்டுபிடித்த டெ / ச்சாய் என்னும் டீ – தேநீர் இங்கே முஸ்லிம் சமூகத்தின் பானம் என்பது போல் ஆகிவிட்டது. சூஃபிகள் கண்டுபிடித்த காஃபி இங்கே பிராமணர்களின் பானம் என்பது போல் ஆகிவிட்டது.

டீ, காஃபி இரண்டுமே ஆன்மிக பானங்கள். அதாவது, தியானம் செய்வதற்காகக் கண்டறியப்பட்ட பானங்கள். தேநீரை போதிதர்மர் கண்டுபிடித்தார் என்னும் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இப்போது காஃபியின் கதையைக் காண்போம்.
காஃபியின் பிறப்பிடம் அபிசீனியா தேசம்.அதாவது, இன்றைய எத்தியோப்பியா. ஹழ்றத் பிலால் (ரலி) அவர்களின் தாய்நாடு.


காஃபி பிறந்த காலகட்டம் 13-ஆம் நூற்றாண்டு எனப்படுகிறது. அது பிறந்த விதம் ஒரு சிறு கதையாகச் சொல்லப்படுகிறது:

எத்தியோப்பியாவில் ஃகாலித் என்று ஒரு இடையன் இருந்தான். ஊருக்கு வெளியே உள்ள வனப்பகுதிகளில் ஆடுகளை மேய விட்டு அழைத்து வருவது அவனின் அன்றாட வேலையாக இருந்தது. ஆடுகள் ஒரு குறிப்பிட்ட செடியின் கனிகளை விரும்பி உண்பதை ஒருநாள் கவனித்தான். அந்தக் கனிகள் செந்நிறத்தில் இருந்தன. அவற்றைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்து சமைத்தான். கனிகள் வெந்த நீர் சுவையாக இருந்தது. இப்படித்தான் தோராயமான காஃபி உருவாயிற்று, டிக்காஷனோ காஷனோ இல்லாமல் காஷுவலாக.

ஃகாலித் வடித்த பானம் இன்றைய அர்த்தத்திலான காஃபி அல்ல. ஏனெனில் அது (புலவர்களின் பாஷையில் கூறுவதெனில்) கொட்டை வடிநீர் அல்ல, கனி வடிநீர் ஆகும். காஃபியில் முக்கியம் கனியின் சதை அல்ல, அதன் விதைதான் என்பது கண்டறியப்பட சில கால ஆராய்ச்சிகள் தேவைப்பட்டிருக்கும்.

காஃபி என்பது 13 – 15-ஆம் நூற்றாண்டுகள் வாக்கில் ஷாதிலிய்யா சூஃபிப் பள்ளியைச் சேர்ந்தவர்களால் அரபு தீபகர்ப்பம் முழுவதும் பிரபலமாக்கப் பட்டது என்கிறது வரலாறு. ஷாதிலிய்யா தரீக்காவில் ஒரு குருவான அபுல் ஹசன் அலீ இப்னு உமர் எத்தியோப்பியாவை ஆண்டு கொண்டிருந்த சுல்த்தான் சலாஹுத்தீனின் அவையில் சிறிது காலம் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு காஃபி பானம் அறிமுகமாகியது. சுடச்சுட அருந்திய அந்தப் பானம் மூளையைச் சுருசுருப்பாக்கி தூக்கம் நீக்கி விழிப்பை ஊக்கியதை அனுபவித்து அறிந்த அவர் அதனை யமன் தேசத்திற்கு எடுத்துச் சென்றார்.


ஷாதிலிய்யா தரீக்காவினர் உலக வாழ்விலும் மிக வேகமாக இயங்கி வந்தார்கள். மிகச் சிறந்த வணிகர்களாக இருந்தார்கள். அவர்கள் கையில் காஃபி பயிர்த்தொழிலும், பான தயாரிப்பும் பொருள் கொழிக்கும் வணிகமாக யமனிலும் அரேபியாவிலும் பரவின. இன்றளவும் காஃபித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் ஆதரவு நாயகராக ஞானி அபுல் ஹசன் அலீ இப்னு உமர் அவர்களே கருதப்படுகிறார். அல்ஜீரியாவில் காஃபி ‘ஷாதிலிய்யா’ என்றும் அழைக்கப்படுகிறது!

யமனிலும் அரேபியாவிலும் காஃபி ‘கஹ்வா’ என்று அழைக்கப்பட்டது. முன்பு அது மதுவுக்குரிய பெயர்களில் ஒன்றாக இருந்தது. அதனால்தான் பின்னாளில் காஃபி ஐரோப்பியாவிற்குத் துருக்கியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட போது அது ‘இஸ்லாத்தின் மது’ (Wine of Islam) என்று அழைக்கப்பட்டது.

யமன் நாட்டில் காஃபி ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய மையமாக இருந்த துறைமுகத்தின் பெயர் ’மோக்கா’ (Mocha). இன்று அப்பெயர் சாக்லேட் கலந்த காஃபியின் நாமகரணம்!

ஷாதிலிய்யா தரீக்காவினரால் காஃபி, அவர்களின் தியான நிகழ்வுகளில் பயன்படுத்தப் பட்டது. இரவெல்லாம் விழிப்புடன் தியானத்தில் ஈடுபடுவதற்கான ஒரு காரணியாக அது பயன்பட்டது. காஃபி பருகுவதால் உண்டாகும் விழிப்பு நிலைக்கு அவர்கள் ஒரு பெயர் சூட்டினார்கள்: ‘மர்க்கஹா’. ஷாதிலிய்யா பள்ளியின் ஞானியருள் ஒருவரான அபூபக்ரிப்னு அப்துல்லாஹ் அல்-ஐதரூஸ் (ரஹ்) அவர்கள் காஃபியின் பெயரால் ஒரு கஸீதா (நெடுங்கவிதை) பாடியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது!

ஷைகிப்னு இஸ்மாயீல் பா-அலவி அல்-ஷிஹ்ரி அவர்கள் காஃபியை தியானத்தில் பயன்படுத்துவது பற்றிப் பேசியுள்ளார்கள். தூய மனத்துடன், இறை தியானம் செய்வதற்கான விழிப்பிற்காக என்னும் நோக்கில் காஃபியை அருந்தும்போது அது கஹ்வா மஃனவிய்யா என்றும் கஹ்வா சூஃபிய்யா என்றும் சொல்லப்படும் உன்னதமான நிலைக்கு இட்டுச் செல்லும் என்று அவர்கள் கூறினார்கள். அதாவது, சூஃபிகள் தியானத்தின் ஆழத்தில் பெறும் இறையனுபவ நிலைக்கு இட்டுச் செல்லும் துணைக்கருவி காஃபி!


அரேபியாவில் காஃபி பரவிய பின் அது தியான சபைகளில் பருகப்பட்டு வந்ததை ஜஸீரி பதிவு செய்துள்ளார். “மக்காவின் புனிதப் பள்ளியில் அது பருகப்பட்டு வந்தது. காஃபி பரிமாறப்படாத மவ்லித் சபையோ தியான சபையோ அப்போது இருக்கவில்லை” என்று அவர் எழுதுகிறார்.

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் காஃபி எகிப்து நாட்டிற்கு அறிமுகமாகி விரைவிலேயே மக்களிடம் பரவலாகப் பழக்கமாகிவிட்டது. கெய்ரோ நகரில் உள்ள அல்-அஜ்ஹர் பல்கலைக்கழகத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்த சூஃபி தியான மடங்களிலும் நிகழ்வுகளில் காஃபி பரிமாறப்பட்டது. இப்னு அப்துல் கஃப்ஃபார் என்பவர் அத்தகைய ஒரு தியான சபையை வருணிக்கிறார்: “ஒவ்வொரு (அரபுக் கணக்குப் படியான) திங்கள் மற்றும் வெள்ளி இரவுகளில் காஃபி அருந்தப் பட்டது. அது ஒரு பெரிய செந்நிற மண்-பானையில் தயாரிக்கப்பட்டது. சபையின் தலைவர் அதனை ஒரு சிறிய குவளையில் மொண்டு வலது புறமாக ஒவ்வொருவருக்கும் வழங்கி வந்தார். அப்போது அவர்கள் அனைவரும் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ முதலிய மந்திரங்களை ஒலித்திருந்தார்கள்.”

காஃபி தயாரிப்பு ஒரு பெரிய வணிகமாக ஆனபோது எகிப்தின் ஆளுநராக இருந்த அஹ்மத் பாஷா காஃபி நிலையங்களை அரசின் செலவில் நிறைய கட்டினார். அதில் பணியாளர்கள் அமர்த்தப்பட்டனர். அவை மக்கள் கூடும் இடங்களாக மாறின. கி.பி.17-ஆம் நூற்றாண்டில் காஃபி துருக்கியின் தலைநகரான இஸ்தான்பூலில் அறிமுகமானபோதும் அங்கே காஃபி நிலையங்கள் கட்டப்பட்டன.

ஒரு சில நூற்றாண்டுகளில் காஃபிக்கு எதிரான மதப் போக்கும் உருவானது. மூளையைப் புத்துணர்ச்சியாக்கி விழிப்பைத் தருகிறது எனில் அது எப்படி மதப் பண்டிதர்களின் சோதனைப் பார்வையை விட்டுத் தப்பும்? அது ஆகுமானதா ஆகாததா – ஹலாலா? ஹராமா? என்னும் விவாதங்கள் எழுந்தன. காஃபியின் மீது கண்டனங்களும் ஃபத்வா என்னும் மார்க்கத் தீர்ப்புகளும் எழுதப்பட்டன.

ஆரம்பத்தில் பச்சையான விதைகளில் இருந்துதான் காஃபி வடிக்கப்பட்டு வந்தது. காஃபி விதைகளை வறுத்து அதிலிருந்து பானம் தயாரிக்கும்போது அதன் சுவையும் மணமும் மேலும் செம்மையாக வெளிப்படுகிறது என்று கண்டறிந்தவர்கள் பாரஸீகர்கள்தான். இந்தக் கோணத்திலும் காஃபிக்கு எதிராக மார்க்கத் தீர்ப்புகள் எழுதப்பட்டன. அதாவது, கரிக்கப்பட்ட பொருளை உட்கொள்வது ஆகாது என்பதாக.


பள்ளிவாசல்களை விடவும் காஃபிக் கூடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்நிலை மக்களின் சீர்கேட்டையே காட்டுவதாக மார்க்க அறிஞர்கள் கருதினார்கள். காஃபிக் கூடங்கள் புதிய சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் இருந்தது. சமயத்திற்கு மாற்றமான கருத்துக்கள் கருத்தரித்து வளரும் சூழல் அதில் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். (ஐரோப்பாவின் காஃபிக் கூடங்களில்தான் பல கலை இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் தோன்றி வளர்ந்தன என்பதை இங்கே நினைவு கூரவும்.) காஃபி அருந்துவோரின் போக்குகள் கண்காணிக்கப்பட்டன. அவர்கள் பொதுமக்களை விட வித்தியாசமாக இருப்பதாக அவதானிக்கப்பட்டது.

“காஃபியைப் பொருத்தவரை அது ஒரு பித்அத் (புதுமையான விஷயம்). அது தூக்கத்தை நீக்குகிறது. இனவிருத்தி ஆற்றலைக் குறைக்கிறது. காஃபிக் கூடங்கள் குழப்பத்தின் கூடாரங்களாக உள்ளன. காஃபி ஹராமானது என்று நிறைய ஃபத்வாக்கள் எழுதப்பட்டுள்ளன. ஏனெனில் எரிக்கப்பட்ட பொருள் எதுவும் உட்கொள்ளத் தகாதது ஆகும்” என்று எழுதுகிறார் அவ்லியா எஃப்ஃபெண்டி.

உண்மைதான். மருத்துவ ரீதியாகக் காணும்போது காஃபி என்பது ஒரு போதை வஸ்து என்றே சொல்லலாம். அதாவது அதில் உள்ள காஃபீன் என்னும் பொருள் இரத்தத்தால் உடனடியாக உறிஞ்சப்பட்டு மூளைக்குள் நுழைகிறது. அங்கே தூக்கத்தைத் தூண்டும் வேதிப்பொருட்களைத் தடை செய்கிறது. அட்ரினலின் என்னும் ஹார்மோன் அதிகமாகச் சுரக்குமாறு செய்கிறது. அது மூளையில் ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்குகிறது. இதயத் துடிப்பை அதிகமாக்குகிறது. மூளையின் செல்கள் ‘ஃபயர்’ ஆவதை அதிகமாக்குகிறது. அதாவது, மூளையின் தகவல் பரிமாற்றத்தை அதிகமாக்குகிறது. இத்தனை வேலைகளைச் செய்கிறது இந்தத் திரவம். பேஷ் பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு!

ஓரளவுக்கு மேல் போனால் தண்ணீரும்கூட உயிரை மாய்க்கும் விஷமாகிவிடும் என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. காஃபியும் அப்படித்தான். கொக்கொ கோலாவும் அப்படித்தான். இந்த அளவுகள் அததற்கு மாறலாம், அவ்வளவே. காஃபிப் பிரியர்கள் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம், அடியேனையும் சேர்த்து. கொஞ்சம் மிஞ்சினால் அது நம்மைக் காஃபி வெறியர்கள் ஆக்கிவிடும். மூளைக்கும் நிரந்தரமான பாதிப்புக்களையும் கொண்டுவரக் கூடும்.

வரலாறுக்குத் திரும்புவோம்...

எகிப்தில் புனித ரமலான் மாதத்தில் காஃபிக் கூடங்கள் இழுத்து மூடப்பட்டதும், பின்னர் கட்டுப்பாடுகளுடன் அவை அனுமதிக்கப்பட்டதும், காஃபிக் கூடங்களில் பிரசங்கம் செய்ய முல்லாக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மக்களுக்கு உபதேச போதனைகள் செய்ததும் அவ்லியா எஃப்ஃபெண்டியின் பதிவுகளில் உள்ளன. (அட்வைஸ் கேட்டுக்கிணே காஃபி குடிக்கணுமா? இன்னா கொடும சார் இது?)

பாரஸீகத்திலும் இதே நிலைதான் இருந்தது. ஆனால் பாரஸீகம் ஞானக் கவிதைகளின் ரோஜாத் தோட்டமாக இருந்தது. காஃபிக் கூடங்களில் அமரும் மக்கள் ஞானக் கவிதைகளின் வாசிப்பைக் கேட்டுக்கொண்டே காஃபி அருந்துவது அங்கே வழக்கமானது. அரசியல் விவாதங்களும் அங்கே சூடாக நடந்தது. மதகுருமார்களின் போதனைகளும் வழக்கமாக நடந்து வந்தன. அவ்வப்போது யாரேனுமொரு தர்வேஷ் (சூஃபித் துறவி) தடாலடியாக உள்ளே நுழைந்து உலக வாழ்வின் இழிநிலை பற்றி மக்களை எச்சரிப்பதும் உண்டு. பதினேழாம் நூற்றாண்டில் அங்கிருந்த நிலையை ஃபிரெஞ்சு யாத்ரீகர் ழீன் ச்சார்டின் இவ்வாறு வருணித்தார்.

காஃபி கி.பி.1615-இல் வெனீஸ் நகருக்குள் நுழைந்தது. 1644-இல் மார்செய்ல்ஸிலும், 1651-இல் லண்டனிலும் அறிமுகப்படுத்தப் பட்டது. எனினும் 1669-இல் துருக்குத் தூதர் சுலைமான் முஸ்தஃபா கோச்சா அதனைப் பாரீசில் பிரபலமாக்கிய பிறகே ஐரோப்பா முழுவதும் அது பரவிற்று. அங்கிருந்துதான் அது வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று உலகிலேயே அதிகமாக காஃபி விளையும் நாடு ப்ரேசில்!

ஐரோப்பாவிலும் காஃபிக்கு எதிர்ப்புகள் இருந்துள்ளன. கிறித்துவர்கள் அதனை அருந்தக் கூடாது என்று முதலில் தடை இருந்தது. போப் க்ளெமண்ட் ’எட்டு’ அவர்கள் அதனை அருந்திச் சோதித்த பின்பே அது அனுமதிக்கப்பட்டது. பிறகு காஃபிக்கு அந்தரங்கமான எதிர்ப்புக்கள் தோன்றின. அதாவது, காஃபி அருந்துவதன் விளைவாகத் தங்கள் ஆண்களின் தாம்பத்ய ஆற்றல் பாதிக்கப்படுவதால் காஃபியின் கவர்ச்சி வலையில் மயங்கி அவர்கள் மோசம் போவதை விட்டும் காப்பாற்றித் தருமாறு ஐரோப்பியப் பெண்மணிகள் அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்தது உண்டு.

இது உண்மையா என்று பதறவேண்டிய அவசியம் இல்லை. மருத்துவ ஆய்வுகளே இதில் ஒரு தெளிவான முடிவைச் சொல்லவில்லை. இப்படியும் அப்படியுமாகக் கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு கோப்பை காஃபி அருந்தும் ஆண்களின் உயிரணுக்கள் வேகமாக நீந்துகின்றன என்று ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சியின் முடிவைக் கூறியிருக்கிறார். பிறவிக் கடல் நீந்தும் நினைப்புடைய ஞானியர் கண்டறிந்த காஃபியின் கதியைப் பார்த்தீர்களா, அன்பர்களே?

காஃபியை ஒரு ழாஹிரி வஸ்தாகவே இதுகாறும் பேசி வந்தோம். இனி அதனை ஒரு குறியீடாகக் காண்போம். நாமே ஒரு காஃபிக் கொட்டைதான் என்று சொல்கிறார் ஷைக் முஹம்மத் ஷரீஃப் பாபா. தான் பிறந்த ஊரான இஸ்தான்பூலில் வசித்துவரும் இவர் துருக்கி, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் சூஃபித்துவப் பயிற்சி அளித்து வருகிறார். வட கரோலினாவில் உள்ள ச்சேப்பல் ஹில் எனுமிடத்தில் பல வருடஙளாக ரூமி விழாவின் அமைப்பாளராக இருந்து வந்துள்ளார். அவருடைய ஒரு கோப்பை காஃபியை நீங்கள் பருகி மகிழ இடம் விட்டு இத்துடன் என் உரையை நான் முடித்துக் கொள்கிறேன். இனி பாபா பேசுவார்:

“’என் சமூகத்தினரின் வளர்ச்சியில் படிக்கட்டுக்களாகும் படியான சில தவறுகள் உள்ளன’ என்று நபிகள் நாயகம் சொன்னார்கள். இதன் பொருள், நீங்கள் வெளியே சென்று தவறுகளில் ஈடுபடுங்கள் என்பதல்ல. ஆனால் நீங்கள் தவறுகள் செய்யும் போது அங்கே உடனே விழிப்புணர்வுக்கு வாருங்கள் என்பதுதான். ஒரு மனிதனால் அழ முடியவில்லை எனில் நிச்சயமாக அவனால் சிரிப்பதின் இன்பத்தையும் அனுபவிக்க முடியாது. நம் வாழ்வின் நிகழ்வுகள் நமக்குப் பயிற்சி தருகின்றன, நம்மைச் சமைக்கின்றன.

காஃபி என்னும் கனி கண்ணீரைக் குறிக்கின்றது. கண்ணீர் – அஷ்க். ஏனெனில் அது நம் இதயத்தின் குறியீடாக இருக்கின்றது. தஸவ்வுஃபில் (சூஃபித்துவத்தில்) ‘த்ஸைரி சுலூக்’ என்று ஒரு நிலை இருக்கிறது. ’தேடலின் பயணம்’ என்று பொருள். காஃபியின் பயணமும் இதுதான். ஆரம்பம் முதல் முடிவு வரை காஃபியின் த்ஸைரி சுலூக் முற்றிலும் அஷ்க் ஆகும்.

காஃபி, ஒரு மரத்தில் வளரும்போது, அது ஓடு போர்த்திய கனி. அதன் பின் அது பல நிலைகளைக் கடக்கின்றது. முதலில் அது பறிக்கப்படுகின்றது. அதன் ஓடு உடைக்கப் படுகின்றது. விதை வறுக்கப் படுகின்றது. உருட்டி உருட்டி அது எல்லாப் பக்கங்களிலும் வறுபடும்போது வேதனை தாளாது கதறிக் கொண்டுள்ளது. அப்போது அதன் கெட்ட வாசனைகள் அதனை விட்டு நீங்கிப் போகின்றன.

அதன் பின் அதை என்ன செய்கிறார்கள்? அதை எடுத்து அரவையில் போட்டு அரைக்கிறார்கள். முர்ஷித் – குருநாதரின் கையில் ஒரு முரீத் – சீடன் அரைக்கப் படுவது போல்... அது மாவாக மாறுகிறது. அதன் நிறம் மாறிவிட்டது. அதன் பெயர் மாறிவிட்டது. இப்போது அதை காஃபி என்று அழைக்கிறோம்.

அந்த அப்பாவி காஃபியிடம் அதுவரை அது அனுபவித்து வந்த வலிகள் எத்தனை எத்தனை என்று கேட்டால், அந்த நிலையும் கூட முடிவல்ல. இன்னும் அது செல்ல வேண்டிய பயண தூரம் மீதம் உள்ளது.


அதை நீரில் போடுகிறார்கள். அது நெருப்பின் மீது வைக்கப் படுகிறது. அதை இரண்டாம் நெருப்பு ஒன்று எரிக்கின்றது. அது நீரின் மீது நுரை விட்டபடி கொதிக்கின்றது... ஆனந்த நடனம்! அதன் பின் நண்பன் அதனை அருந்துகிறான்!

அஷ்க் அப்படித்தான். அது முதலில் இதயத்தில் ஆரம்பிக்கிறது. காஃபியைப் போன்றே. அதனைச் சுற்றிலும் ஓடு மூடியிருக்கிறது. வேறு வார்த்தையில் சொல்வதெனில் ‘கஃப்லத்’ – மறதி. இறைவனை மறந்த நிலை. அந்த ஓட்டினை முதலில் நீங்கள் உடைக்க வேண்டும். அதன் பின் அது சூரியனின் கீழே வைக்கப்பட வேண்டும். அது முர்ஷிதின் பார்வை ஆகும். முர்ஷித் உங்களைப் பார்க்கும் போது, அந்தப் பார்வை...

ஆனால் அப்போதும் அது கடினமாகத்தான் இருக்கிறது. அதைக் கடிக்க முயன்றால் பல்லை உடைத்துக் கொள்வீர்கள். அதை நீங்கள் நெருப்பில் போடுகிறீர்கள்.

அங்கே அவன் மக்களின் அன்பில் ஈடுபடுகிறான். மக்களின் அன்பிற்குள் நீ நுழையும் போது உன் தன்முனைப்புடன் நுழைகிறாய். அங்கே நீ கொய்யாச் செடியை நட்டு வைக்கிறாய். ஆனால் முடிவில் நீ திராட்சையைப் புசிக்கப் போகிறாய்.

அதன் பின் நீ அரவைக்குள் போடப்படுகின்றாய். முர்ஷித் உனக்குத் தருகின்ற பாடங்கள், வாழும் முறைமைகள் அதன் நிகழ்வுகள் எல்லாம் உன்னை அரைத்து விடுகின்றன. அங்கே நீ பணிவையும் பொறுமையையும் கற்றுக் கொள்கிறாய். ஹலீம் சலீம் – மென்மையாக அமைதியாக இருக்கவும், மௌனமாக இருக்கவும் கற்றுக் கொள்கிறாய். அவசரமாக இல்லாமல் இருக்கவும், ஒவ்வொன்றையும் அதனதன் நேரத்தில் செய்யவும் கற்றுக் கொள்கிறாய். இவை எல்லாம் நம் வாழ்வின் நிகழ்வுகளில் வைத்து அரைக்கப்பட வேண்டும். இது சொல்வதற்கு மிக எளிது. ஆனால், வாழ்வதற்கு மிகவும் கஷ்டமானது. இரண்டு பாறையுருளைகளுக்கு  இடையில் அரைபடும் காஃபி விதையைப் போல் உங்கள் இதயம் அரைக்கப்படும். பிறகு அந்தக் கடினமான காஃபி மென்மை ஆகிவிடுகிறது.

அதன் பின் அது நீரில் இடப்படுகிறது. எனினும் நீ இன்னும் கமாலிய்யத் என்னும் பூரண நிலையை அடையவில்லை. உனக்குக் கீழே அஷ்க்கின் தீ எரிய வேண்டும். உண்மையான அஷ்க் அப்போதுதான் ஆரம்பம் ஆகிறது. ஆனால், அதன் பின் ஓர் அற்புதமான கருணை பொங்கி அகில உலகையும் அனைத்து மக்களையும் அரவணைத்துக் கொள்கின்றது.
அத்தகைய ஒரு மனிதனை நீங்கள் அடித்தால் தன் வாயில் உள்ள உணவையும்கூட கையில் எடுத்து உங்களுக்குத் தருவான். அஷ்க் உங்களை அந்த உன்னத நிலைக்குக் கொண்டு வருகிறது. நபியின் நிலை எப்படி இருந்தது? ‘ரஹ்மத்தல்லில் ஆலமீன்’ - அகில உலகிற்குமான அருட்கொடையாக அவர்கள் இருந்தார்கள். அதுதான் அஷ்க்கின் உன்னத நிலை. இந்த அஷ்க்கில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் சிறகுகளின் கீழ் மக்களை எடுத்துச் செல்வான். இதுதான் காஃபி. அதனால்தான் நீங்கள் காஃபியை மிகவும் விரும்புகிறீர்கள். உணவுக்குப் பிறகு எப்போதும் நாம் காஃபி அருந்துகிறோம், சிறிய கோப்பைகளில்.”




Sunday, August 19, 2012

பேப்பர் கப்




பேப்பர் கப் ஒன்றினைக் கையில் வைத்துக் கொண்டு விளையாடியிருந்தான் மகன். மூன்றாம் வகுப்பு பயிலும் மூளையில் ஒரு குறுகுறுப்பு. எல்லோரையும் ஒரு கேள்வி கேட்டுக் கிண்டல் செய்து கொண்டிருந்தான். என்னிடமும் கேட்டான்: “இது கப்பா? பேப்பர் கப்பா?” நான் “பேப்பர் கப்” என்று சொன்னேன். உடனே சிரித்துக் கொண்டே கேட்டான்: “கப் இங்க இருக்கு. பேப்பர் எங்கே இருக்கு?”

மாற்றியும் கேட்கலாம்: “பேப்பர் இங்கே இருக்கு; கப் எங்கே இருக்கு?” இது அவரவர் பார்வையில் எது படுகிறது என்பதைப் பொருத்த விஷயம். ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’ என்னும் அதே தத்துவம்தான். ’மரத்தை மறைத்தது மதயானை. மரத்தில் மறைந்தது மதயானை’ – திருமூலர் கையாளும் உவமை.

சிரிப்போடு போய்விடும் விஷயம் அல்ல இது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனுடைய இந்தக் கேள்வியின் மூலம் எது என்று நான் அறியேன். அவனுக்கே தோன்றியதோ, யாராவது சொல்லிக் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால் இந்தக் கேள்வி மிக ஆழமான தத்துவம் ஒன்றினை விளக்க எழுந்த கேள்வி; சூஃபிகளின் சிந்தனை மரபில் உள்ள கேள்வி. இதே கேள்வியை ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள் ’ஸ்டீல் டப்பி’யை முன் வைத்துக் கேட்பார்கள் என்பதை நினைவு கூர்ந்தேன்.

’பேப்பர் எங்கே இருக்கிறது?’ கப் எங்கே இருக்கிறதோ அங்கேயேதான் பேப்பர் இருக்கிறது. பேப்பரை விட்டுப் பேப்பர் கப் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை. எனினும் பேப்பர் என்பது கப் அல்ல. கப் என்பது பேப்பர் அல்ல. பேப்பர் ஒருபோதும் கப்பாக மாறிவிடாது. கப் ஒருபோதும் பேப்பராக மாறிவிடாது. பேப்பர் பேப்பர்தான்; கப் கப்தான்.

இதே போல் ஸ்டீல் டப்பியை வைத்தும் விளக்கலாம். நீங்களே சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள். “ஸ்டீல் எங்கே இருக்கிறது?” டப்பி எங்கே இருக்கிறதோ அங்கேயேதான் ஸ்டீல் இருக்கிறது… சிந்தனையைத் தொடருங்கள்.

இந்த இடத்திலேயே பலருக்கும் தலை சுற்றிவிடுகிறது, என்ன செய்ய? “பேப்பர் ஒருபோதும் கப்பாக மாறிவிடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியென்றால் பேப்பரில் கப்பே செய்ய முடியாது என்றல்லவா அர்த்தப்படும்? பேப்பர்தான் கப்பாக மாறியிருக்கிறதே? அதனால்தானே பேப்பர்-கப் கிடைத்திருக்கிறது?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.


ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள் சொல்லும் ஒரு கருத்து இங்கே நியாபகம் வருகிறது: “ஞானம் இல்லாதவன் ஸ்டீலை டப்பியாக்கி விடுவான், டப்பியை ஸ்டீலாக்கி விடுவான்.”
கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். பேப்பர் கப்பாக மாறிவிட்டது என்றால் அங்கே பேப்பர் இருக்கக் கூடாது. கப் மட்டும்தான் இருக்க வேண்டும். அல்லது கப் பேப்பராக மாறிவிட்டது என்றால் அங்கே கப் இருக்கக்கூடாது பேப்பர் மட்டும்தான் இருக்க வேண்டும்.

பேப்பர் ஒருபோதும் கப் ஆகிவிடாது என்னும் நிலையும் கப் ஒருபோதும் பேப்பர் ஆகிவிடாது என்னும் நிலையும் இருப்பதால்தான் பேப்பர் கப் என்பதே சாத்தியமாகிறது.
உவமையை மட்டுமே சொல்லிக்கொண்டு போகிறோம், உவமேயத்தையும் சொல்லி விடுவோம். பரம்பொருளும் படைப்பும் – ஹக்கும் ஃகல்க்கும். (ஓர் எச்சரிக்கை: இந்த உவமைகள் முற்றுவமைகள் அல்ல. அதாவது உவமையின் எல்லா அம்சங்களையும் உவமேயத்தின் மீது பொருத்திப் பார்க்கக் கூடாது. இவை பிலா தஷ்பீஹ் – ஒப்புமை இன்றிக் கூறப்படுகின்றன என்பதை நினைவில் நிறுத்தவும்.)

இதே விஷயத்தை முன்பு ஒருமுறை தங்கநகை என்பதை வைத்து விளக்கியிருக்கிறேன். அது ஜோய் அலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ், எல்கேஎஸ்... எந்தக் கடையின் தங்க நகையாக இருந்தாலும் இதுதான் விதி. ஆனால் இதில் செய்கூலி இல்லை சேதாரம் இல்லை. 24 காரட் தங்கம் – அதாவது இருபத்துநான்கு மணிநேரமும் இதே நிலைதான். மாறவே முடியாது.

இதே கருத்தை நெல்லிக்குப்பம் அப்துர் ரஹ்மான் அவர்கள் இரும்பு வாள் என்னும் உவமையை வைத்து விளக்கியுள்ளதையும் விரிவாகவே முன்பு பார்த்திருக்கிறோம்

.
என் குருநாதர் அல்லாமா பிலாலி ஷாஹ் ஜுஹூரி அவர்கள் இதே கருத்தை பல உவமைகளால் விளக்கியிருக்கிறார்கள்:
“தகரப் பெட்டி என்று சொல்கிறோம். தகரம் ஜாம்ஷெட்பூரில் மட்டுமா இருக்கிறது? தகரப் பெட்டியில் தகரம் இல்லாவிட்டால் அது தகரப் பெட்டி ஆகுமா?
தங்க மோதிரம் என்று சொல்கிறோம். தங்கம் கோலாரில் மட்டுமா இருக்கிறது? தங்க மோதிரத்தில் தகரம் இல்லாவிட்டால் அது தங்க மோதிரம் ஆகுமா?
மண்-பானை என்று சொல்கிறோம். மண் பூமியில் மட்டுமா இருக்கிறது? மண்-பானையில் மண் இல்லாவிட்டால் அது மண்-பானை ஆகுமா?
அப்துல்லாஹ் என்று சொல்கிறோம். அல்லாஹ் அர்ஷில் மட்டுமா இருக்கிறான்? அப்துல்லாஹ்வில் அல்லாஹ் இல்லாவிட்டால் அவன் அப்துல்லாஹ் ஆவானா?”

ஆக, ஹக் –ஃகல்க், பரம்பொருளும் படைப்பும் உள்ள உறவுநிலை என்ன என்பதை விளக்கும் தத்துவப் பார்வைகள் இவை.


பேப்பர் ஒருபோதும் கப் ஆகிவிடாது. கப் ஒருபோதும் பேப்பர் ஆகிவிடாது.
இறைவன் ஒருபோதும் படைப்பாகிவிட மாட்டான். படைப்பு ஒருபோதும் இறைவன் ஆகிவிடாது.

“அர்றப்பு றப்புன் வயின் தனஸ்ஸல் – அல் அப்து அப்துன் வயின் தரக்கா”
(எத்தனை இறங்கிடினும் இறைவன் இறைவன்தான்; எத்தனை உயர்ந்திடினும் அடிமை அடிமைதான்.) என்கிறார்கள் இப்னுல் அரபி (ரஹ்).

பேப்பரில் கப் தெரிகிறது. அதனால் கப்பில் பேப்பரும் தெரிகிறது.
பரம்பொருளில் படைப்பு தெரிகிறது. அதனால் படைப்பில் பரம்பொருளும் தெரிகிறது.

பேப்பர்தான் கப்பைக் காட்டிக்கொண்டுள்ளது. கப் பேப்பரைக் காட்டிக் கொண்டில்லை.
பரம்பொருள்தான் படைப்பைக் காட்டிக் கொண்டுள்ளது. படைப்பு பரம்பொருளைக் காட்டிக் கொண்டில்லை.

கப் பேப்பரைக் காட்டவும் முடியாது மறைக்கவும் முடியாது.
படைப்பு பரம்பொருளைக் காட்டவும் முடியாது மறைக்கவும் முடியாது.

பேப்பர் தன்னைத் தானே காட்டிக் கொண்டு தான் அல்லாத கப் என்பதையும் தன்னில் காட்டிக் கொண்டிருக்கிறது. பரம்பொருள் தன்னைத் தானே காட்டிக் கொண்டு தான் அல்லாத கப்பையும் தன்னில் காட்டிக் கொண்டிருக்கிறது.

கப்பில் பேப்பர்தான் வெளிப்பட்டுள்ளது. கப்பில் பேப்பர் அன்றி வேறு எதுவும் வெளிப்படவில்லை. படைப்பில் பரம்பொருள்தான் வெளிப்பட்டுள்ளது. படைப்பில் பரம்பொருள் அன்றி வேறு எதுவும் வெளிப்படவில்லை.
ஏனெனில், கப்பின் மூலப்பொருள் பேப்பர் மட்டுமே. படைப்புக்களின் மூலப்பொருள் இறைவன் மட்டுமே.

பேப்பர் என்பது கப் உருவாவதற்கு முன்பே இருந்தது. கப் உருவான பின்பும் இருக்கிறது. கப் அழிந்த பின்னும் இருக்கும். (கப் என்னும் ரூபம் மாற்றப் பட்டுவிட்டாலும் பேப்பர் இருக்கும்). பரம்பொருள் படைப்புக்கள் உருவாவதற்கு முன்பே இருந்தது, படைப்புக்கள் உருவான பின்னும் இருக்கிறது, படைப்புக்கள் மறைந்த பின்னும் இருக்கும்.

இந்த இடத்தில் திருமூலரின் கருத்தை வைத்து ஒரு சிந்தனை:
மரத்தில் மறைந்தது மதயானை. ஆம், மதயானை வேறு எங்கும் மறைய முடியாது. அது தன்னைக் காட்டிக் கொண்டிருந்த மரத்தில்தான் மறைய முடியும்.
பரம்பொருளில்தான் படைப்பு மறைய முடியும்.


சுயத்தைக் கவனித்து இரண்டு பொருள்கள் உள்ளன:
(உவமை:) சுயமாக உள்ளமை கொண்ட பேப்பர் மற்றும் சுயவுள்ளமை இல்லாத கப்.
(உவமேயம்:) சுய உள்ளமை கொண்ட பரம்போருள் மற்றும் சுயவுள்ளமை இல்லாத படைப்பு.

சுயவுள்ளமை இல்லாத படைப்பு என்பதாவது இல்லாமை என்னும் சுயம் உடையது (தாத்தெ அதம்). அதாவது, பரம்பொருளின் உள்ளமையை சார்ந்து இருப்பது.

எனவே, பேப்பர் என்னும் சுயத்திற்கு அதுவே உள்ளமையாகவும் இருக்கிறது. ஆனால் கப் என்னும் சுயத்திற்கு அதற்கேயான உள்ளமை இல்லாமல் அது பேப்பரின் உள்ளமையைச் சார்ந்தே இருக்கிறது.

பரம்பொருள் என்னும் சுயத்திற்கு அதுவே உள்ளமையாகவும் இருக்கிறது. ஆனால் படைப்பு என்னும் சுயத்திற்கு அதற்கேயான உள்ளமை இல்லாமல் அது பரம்பொருளின் உள்ளமையைச் சார்ந்தே இருக்கிறது.

படைப்புக்கள் உருவாகும் முன்பே பரம்பொருள் இருந்ததால் அதன் சுயம் பூர்விகமானது (தாத்தெ கிதம்.)
படைப்புக்களுக்குச் சுயமான உள்ளமை இல்லாததால் அது இல்லாமைச் சுயம் எனப்படுகிறது (தாத்தெ அதம்)
உள்ளமை – உஜூது – EXISTENCE என்பதைக் கவனித்து ஒரே பொருள்தான் உள்ளது. பரம்பொருள் மட்டுமே உள்ளது.

“உள்ளது ஒன்று மற்றது அன்று” என்று சொல்லப்படுவது உள்ளமையைக் கவனித்துத்தானே அன்றி சுயங்களின் கவனிப்பில் அல்ல. எனவே அது படைப்புக்களை மறுப்பதாக ஆகாது.

”லைச ஃபில் உஜூதி இல்லா ஹுவ” என்று இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் சொன்னது இந்த அடிப்படையில்தான். இதுவே வஹ்தத்துல் உஜூது என்னும் தத்துவஞானம்.

திருக்கலிமாவிற்கு உள்ளமையின் பார்வையிலான விளக்கமும் இதுவே: “லா மௌஜூத இல்லல்லாஹ்” – உள்ளது இல்லை அல்லாஹ்வைத் தவிர.


படைப்புக்களுக்குத் தனியே உள்ளமை உண்டு என்று விளங்கினால் எத்தனைப் படைப்போ அத்தனை உள்ளமைகள் என்று ஆகிறது. அந்தப் படைப்பு அழியும்போது அதன் உள்ளமையும் அழிந்துவிடுகிறது என்றாகிறது. உள்ளமை என்பதன் பண்பையே இது கேள்விக்குரியதாக்கி விடுகிறது. உள்ளமை ஒருபோதும் இல்லாமை ஆகாது. இல்லாமை ஒருபோதும் உள்ளமை ஆகாது.

அந்தப் படைப்பு இருந்த ஒருசில காலத்திற்கேனும் அது இறைவனுக்குப் புறம்பான உள்ளமையாக இருந்தது என்றாகும் பட்சத்தில் அந்தக் காலகட்டத்தில், உள்ளமையைக் கவனித்து (ப இஃதிபாரெ உஜூத்), ’ஷிர்க்’ என்னும் இணைவைப்பைக் கொண்டுவந்து விடுகிறது. இது ஒருபோதும் உண்டாக முடியாத நிலையாகும். அதாவது ஷிர்க் என்பது எதார்த்தத்தில் ஒருபோதும் உண்டாகவே முடியாது. ஒரு நுண்கண்ம் (ஆன்) கூட இறைவனுக்கு இணை உண்டாவது சாத்தியமில்லை.

இப்படியிருக்க, இறைவனுக்கும் படைப்புக்கும் தனித்தனியே உஜூது (உள்ளமை) உண்டு என்று சொல்வதுதான் ஏகத்துவம் என்று சொல்வது அபத்தமான பிதற்றல்தான்.

உஜூது ஒன்றே என்று சொன்னவுடன் ”அப்படியானால் படைப்புக்கள் எல்லாம் இறைவன் என்று சொல்லி இணைவைக்கிறீர்களா?” என்று கேட்கிறார்கள். புத்திப் பிசகைப் பாருங்கள். உஜூதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் இவர்க்ளின் சிந்தனை தாத்தின் (சுயம்) பக்கம் தாவிவிடுகிறது.

இறைவனின் சுயம் மட்டுமே உள்ளது படைப்புக்களின் சுயம் என்று எதுவும் கிடையாது என்று சொன்னால் அதில் குஃப்ர் - நிராகரிப்பு உண்டாகும்.

இறைவனின் சுயமும் படைப்பின் சுயமும் ஒன்றுதான் என்று சொன்னால் அதில் ஷிர்க் இணைவைப்பு உண்டாகும்.

சுயத்தைக் கவனித்துப் படைப்பு என்பது படைத்தவனுக்கு அல்லதாக (ghair கைர்) இருக்கிறது.

உள்ளமையைக் கவனித்து பரம்பொருள் படைப்புக்கு ஒன்றியதாக (ஐன்) இருக்கிறது.

உள்ளமை என்பது பரம்பொருளுக்கும் படைப்புக்கும் தனித்தனியே இருக்கிறது என்று சொன்னால் இறைவனின் உள்ளமை பூரணமானதல்ல என்னும் குறை ஏற்படும். இறைவனின் உள்ளமையோ பூரணமானதாக (உஜூதெ முத்லக்) இருக்கிறது.

உஜூது ஒன்று. அது இறைவனது மட்டுமே. இதுவே ஏகத்துவம்.

(குறிப்பு: எந்த நீர்? என்னும் தலைப்பில் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் சையத் என்னும் சகோதரர் சில கேள்விகளை எழுப்பித் தன் கருத்துக்களையும் கூறியுள்ளார். சிந்தனையைத் தூண்டும் பின்னூட்டமாக இருந்தது. ”Chapter 2 Verse 255 அவனே உயிருள்ளவன் என்று சொல்வதாக நான் கருதவில்லை...” என்று தொடங்கி அவரின் கருத்துக்களை எழுதியிருக்கிறார். அதற்குப் பதில் கூற நினைத்து தட்ட ஆரம்பித்தேன். முன்னூட்டமாக இந்தக் கட்டுரை அமைந்துவிட்டது.)

Saturday, August 18, 2012

கண் திறந்த கதை (தொடர்ச்சி )


”செவி வழிச் செய்தியாக அவளைப் பற்றி அவன் அறிந்து வைத்திருந்ததை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவளை வருணித்துக் கவிதைகள் எழுதினான்.”

இறைவனைப் பற்றிய படிப்பறிவு இருக்கிறது. ஆனால் பட்டறிவு இல்லை. நூல்களின் வழியாக இறைவனைப் பற்றிய செய்திகளை அறிந்திருக்கிறான். ஆனால் அனுபவத்தில் அவன் இறைவனை அறியவில்லை. என்றாலும் இந்த அறிவிற்கும் இறைவனிடம் ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

இவன் ஆலிமே ழாஹிர் – வெளிப்படையான அறிஞனாக இருக்கிறான். ஆனால் ஆலிமே பாத்தின் – அந்தரங்க அறிஞனாக இல்லை. அதாவது ஆரிஃப் – ஞானியாக இல்லை.
கலிமா தான் – மந்திரம் அறி என்னும் நிலையில் இவன் இருக்கிறான்.

”அவற்றை அவளிடம் வாசித்துக் காட்டினான். ஆனால் அது அவர்கள் இருவருக்குமே திருப்தியாக இல்லை. ஏனெனில் அவை அனுபவத்தில் பிறந்தவையாக இல்லை.”

ஏட்டுக்கல்வி மட்டுமே வைத்திருக்கும் வெளிரங்க அறிஞனின் பேச்சு கிளியின் பேச்சுதான். அது ’தக்ரார்’ - கூறியது கூறல் எனப்படும். அது ‘பயான்’ – உள்ளுதிப்பில் பேசுதல் அல்ல.

பிறர் சொல்வதை வைத்து அவன் வருணித்தவைகள் உண்மைதான் என்றாலும் அவற்றில் அனுபவத்தின் நறுமணம் கொஞ்சமும் இல்லை. அந்தக் கோணத்தில் பார்க்கும்போது, அவன் கூறும் வாசகங்கள் உண்மையாக இருந்தாலும் அவனின் செயல் பொய் சொல்வதாக உள்ளது! அதாவது அவளின் அழகைப் பற்றி அவன் சொல்லும் சாட்சி அவன் அவளைக் காணாமல் கூறுவதால் பொய் சாட்சியாக இருக்க்றது.

இவ்வாறு பிறரிடம் கேட்டும் வெறும் ஏட்டறிவைக் கொண்டும் அவன் தன்னை வருணிப்பது அவளுக்குத் திருப்தியாக இல்லை. கருத்து உண்மையாக இருப்பினும் தன்னை அறியாமல் அவன் தன்னைப் புகழ்வது அவளுக்கு இன்பமாக இல்லை. தன்னை அறிந்து பின் அவன் தன்னைப் புகழ வேண்டும் என்று விரும்புகிறாள்.

”இறைநம்பிக்கை கொண்டோரே!
அல்லாஹ்வின் மீதும்
அவனது திருத்தூதர் மீதும்
நம்பிக்கை கொள்ளுங்கள்”
(4:136)
என்று இறைவன் கோருவது அதைத்தான். தக்லீதி ஈமான் – பின்பற்றுதலாக அறியாமலே பெற்ற நம்பிக்கை, தெஹ்கீகி ஈமான் – மெய்த்தேடலில் உண்டான நம்பிக்கையாக மாறவேண்டும்.

”அல்லாஹ்வை அன்றி வேறு தெய்வம் இல்லை
என்பதை அறிந்து கொள்க”
(47:19)
என்று சுட்டிக் காட்டப் படுவதும் அந்த அறிவின் பக்கம்தான்.

கலிமா கூ – மந்திரம் சொல் என்னும் இந்த நிலையில் அவனிடம் ‘இல்முல் யகீன்’ (அறிதலால் உண்டான தெளிவு) இருக்கிறது. ஆனால் ’ஐனுல் யகீன்’ (காண்பதால் உண்டாகும் தெளிவு) இல்லை.

இறைவனை அகக்கண்களால் கண்டு அறிய வேண்டும் எனில் அகப்பார்வை உண்டாக வேண்டும். அதற்கு என்ன வழி?


அகக்கண் விழிப்படைந்த ஒரு குருவிடம்தான் அதை நீ அடைய முடியும். அந்த அறிவை நூல்கள் தராது. நூல்களுக்கு நூலான இறைமறை திருக்குர்ஆனே இதைச் சொல்கிறது:
“அளவற்ற அருளாளன்
அவனைப் பற்றி
ஆழ்ந்து அறிந்தவர்களிடம் கேளுங்கள்”
(25:59)

”அர்ரஹ்மான் ஃபஸ்’அல் பிஹி ஃகபீரா” – இதில் இறைவனின் ரட்சகப் பண்பின் திருபெயர் சொல்லப்பட்டுள்ளதே அன்றி அவனது சுயத்தின் பெயரான ‘அல்லாஹ்’ என்பது ஆளப்படவில்லை. அவனின் ரட்சகத்தன்மை பற்றி அறிவதற்கே ஒரு மெய்ஞ்ஞானியின் தொடர்பு அவசியம் என்னும்போது அவனது தெய்வீகத்தன்மை (உலூஹிய்யத்) மற்றும் சுயம் (தாத்) பற்றி அறிவது வெறும் ஏட்டுக் கல்வியால் சாத்தியமா?

எப்போதும் நெருக்கமாகவே இருந்து வந்துள்ள தன் காதலியைத் தான் ஒருபோதும் கண்களால் காணாமல் இருப்பது பற்றி அவன் மனதில் வேதனை குடைந்தது.”

”நாம் அவனின் பிடரி நரம்பினும்
அவனிடம் நெருக்கமாக உள்ளோம்”
(50:16)

நமக்கு நம்மினும் நெருங்கிய நேசனைக் காணும் ஆவல் எழாமல் இருப்பது நியாயமா?

கலிமா கூ தான் – மந்திரம் சொல், அறி என்னும் நிலைகளை அடைந்தவனின் உள்ளத்தில் கலிமா பீன் – மந்திரம் பார் என்னும் நிலையை எட்டும் ஏக்கம் பிறக்கிறது.

இல்முல் யகீன் என்னும் நிலையில் இருப்பவனின் இதயத்தில் ஐனுல் யகீன் என்னும் நிலையை அடையும் ஆர்வம் உதிக்கிறது.

காதலியின் நறுமணமும் இனிய கீதமும் இதயத்தைத் தொட்ட பின்னும் தரிசனத்தின் ஆசை கொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டிருப்பவன் எவன்?

இறைவனுடன் வசனித்த மூசா நபிக்கு அவனைக் காண வேண்டும் என்னும் ஆசை உள்ளத்தில் கொந்தளிக்க வில்லையா?

”நாம் குறித்த காலத்தில் மூசா வந்த போது
அவரின் ரட்சகன் அவருடன் பேசினான்
அப்போது மூசா: ‘என் ரட்சகனே!
எனக்குக் காண்பி
நான் உன்னைக் காண வேண்டும்’
என்றார்”
(7:143)

இறை தரிசனத்தின் படித்தரங்கள் அனேகம் உள்ளன. சுருக்கமாகச் சொல்வதெனில், இறைவனின் சுய நிலையை அவனை அன்றி வேறு எவரும் காண இயலாது. அவனின் உடைமைகள், செயல்கள் மற்றும் திருப்பண்புகளின் தரிசனங்கள் உள்ளன. இவ்வுலகில் இதயத்தின் கண்களால் அவனை தரிசிக்கலாம்; மறுவுலகில் புறக்கண்களால் தரிசிப்பதும் உண்டு.

இறைவன் பகிரங்கமானவன் (அழ்ழாஹிர்). அவனின் வெளிப்பாடுதான் எங்கெங்கும் நிறைந்துள்ளது. ஒருகணமும் அவன் வெளிப்படாமல் இல்லை. ”சிருஷ்டிகள் அவனுக்கு எப்படித் திரையாகும்? அவனால் படைக்கப்பட்டவை அவனை எப்படி மறைக்கும்?” என்று கேட்கிறார்கள் ஹிகம் நூலாசிரியர் இப்னு அதாவுல்லாஹ் சிகந்தரீ (ரஹ்).


இறைவன் தன் அடையாளங்களைக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறான். அவற்றில் அவனை நாம் தரிசிக்க வேண்டும் என்றும் விரும்புகிறான்.

”நாம் அவர்களுக்கு வெளியிலும்
அவர்களின் உள்ளேயும்
நம் அத்தாட்சிகளைக்
காட்டிக்கொண்டே இருப்போம்
அது சத்தியம்தான் (ஹக்) என்று
அவர்களுக்குத் தெளிவாகும் வரை;
உம் ரட்சகன் சகல வஸ்துக்களிலும்
பிரசன்னமாக இருப்பது
உமக்குப் போதவில்லையா?”
(41:53)

இதே போல் இன்னொரு இடத்தில்:
“திடநம்பிக்கை கொண்டோருக்குப்
பூமியில் பல அத்தாட்சிகள் உள்ளன
உங்களுக்கு உள்ளேயும் உள்ளன
நீங்கள் ஆழ்ந்து பார்க்க வேண்டாமா?”
(51:20,21)

அவன் காட்டும் அத்தாட்சிகளை அடையாளங்களை அடியார்கள் ஏன் பார்க்காமல் இருக்கிறார்கள்?
“நிச்சயமாக
கண்கள் குருடாகவில்லை
ஆனால் நெஞ்சினுள் இருக்கும்
இதயங்கள் குருடாக உள்ளன”
(22:46)

மேற்கண்ட கதையில் வரும் மருத்துவர் ஆன்மிக குருநாதருக்கான குறியீடு. சூஃபி குருமகான் அகத்தின் மருத்துவர் ஆவார். அவர் தரும் பயிற்சிகள் நமக்கு அகப்பார்வையை நல்கும். மெல்ல மெல்ல நம் இதயத்தின் கண்களைத் திறக்கும்.

குரு-சிஷ்ய வழிமுறையை விளங்காதவர்கள் ஆயிரம் விதங்களில் விமர்சனம் செய்வார்கள். அவற்றைச் செவியில் போட்டுக்கொள்ளக் கூடாது. குழப்பங்கள் ஆன்மிக சிகிச்சையின் பத்தியத்தை முறித்துவிடக் கூடும்.

வெறும் ஏட்டுக்கல்வியிலிருந்து உள்ளுதிப்பின் ஞானம் மிகவும் வேறுபட்டது. திருக்குர்ஆனை எந்த ஒளியில் படித்து விளங்கினால் அது சரியாக இருக்குமோ அந்த ஒளியை இதயத்தில் நிரப்பும் பயிற்சியையே ஆன்மிக குருநாதர் தருகிறார்.

ஒருமுறை ரத்தினச் சுருக்கமாக ஆங்கிலத்தில் இப்படி எழுதி வைத்தேன்:
Ulamaae zaahir – informative ; Ulamaae baatin – transformative.

அதாவது, வெளிரங்கமான மார்க்க அறிவு மட்டுமே கொண்ட அறிஞர்கள் (ஆலிம்கள்) உங்களுக்கு மேலும் மேலும் தகவல்களை மட்டுமே தர முடியும். அவர்களால் உங்களை மாற்றி அமைக்க முடியாது. அந்தரங்கமான ஞானம் கொண்ட இறை ஞானிகள் (ஆரிஃபீன்) மட்டுமே உங்களில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

இதற்கு நல்லதொரு உதாரணம் மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள். ஆயிரக் கணக்கான  மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியராக (மௌலவி) அவர்கள் இருந்தார்கள். எனினும், உள்ளுதிப்பின் ஞானம் உண்டாக அவர்கள் ஒரு குருநாதரின் அடிமை ஆக வேண்டி இருந்தது. அவர்களே சொல்கிறார்கள்:

“மௌலவி ஹர்கிஸ் ந ஷுத் மௌலாயே ரூம்
தா குலாமே ஷம்செ தப்ரேஸி ந ஷுத்”
(ஷம்ஸ் தப்ரேஸின் அடிமையாக ஆகாதவரை மௌலவியாக (மார்க்க ஆசிரியராக) இருந்த நான் ஆன்மிக வழிகாட்டியாக மாற முடியவில்லை)


ஆன்மிகத்தின் மேலான படித்தரங்களை எய்தப் பெற்ற பின் மௌலானா ரூமி நமக்குச் சொன்னார்கள்:

“ஸத் கிதாபொ ஸத் வரக் தர் நார் குன்
சீனா ரா அஸ் நூரெ யார் குல்ஸார் குன்”
(நீ புரட்டிக் கொண்டிருக்கும் நூறு நூறு நூல்களையும் தாள்களையும் நெருப்பில் போட்டுவிடு; உன் இதயத்தை நண்பனின் ஒளி கொண்டு பூஞ்சோலை ஆக்கிவிடு)


”அவனது கண்களின் நரம்புகள் பலமடைந்து வந்தன. பார்வை கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. தன் காதலியை அவன் பார்க்கத் தொடங்கினான். அவளின் உருவம் முதலில் நிழல் போல் தெரிந்தது. காலப் போக்கில் அவனின் கண்கள் முழுமையான பார்வையை அடைந்தபோது அவளின் தரிசனத்தில் அவன் சொக்கி நின்றான்.

இப்போது அவன் எழுதும் கவிதைகள் ஜீவன் கொண்டிருந்தன. ஏனெனில் அவை இரவல் தகவல்களில் இருந்து பிறக்கவில்லை. அவனுடைய நேரடி தரிசன அனுபவத்தில் இருந்து பிறந்தன. அவனின் ஒவ்வொரு சொல்லும் இப்போது அவளின் மனதில் இனித்தது. அவள் அவனை மேலும் மேலும் நேசித்தாள்.”

’ஐனுல் யகீன்’ என்னும் பார்ப்பதால் உண்டாகும் தெளிவு நிலையைச் சாதகன் அடைகிறான். இறைவனின் அடையாளங்களை அத்தாட்சிகளை அவன் காண்கிறான். இறைவனின் ஒளிச்சுடர்கள் அவன் அகப்பார்வையை விட்டு ஒருபோதும் மறைவதில்லை. அந்த தரிசனத்தில் அவனின் கண்கள் லயித்திருக்கின்றன.

அவனுடைய வழிபாடுகள் வெறும் ஒப்பித்தலாக இல்லை. அதில் ஒப்படைத்தல் உண்டாகிவிட்டது. அதாவது, இறைவனின் உதடுகளில் அவன் ஒரு புல்லாங்குழலாக இருக்கிறான். அவன் வழியே இறைவனின் மூச்சு இனிய இசையாக வெளியாகிறது.

”உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான்” என்று உமர் ஃகத்தாப் (ரலி) அவர்களைப் பற்றியும், “யமன் நாட்டிலிருந்து இறைவனின் மூச்சு வருகிறது” என்று உவைசுல் கர்னீ (ரஹ்) அவர்களைப் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் அருளிய அமுத மொழிகளை ஆய்ந்து அறிக.

”அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஐம்புலன்கள் கரையும் அனுபவங்களை அவன் அவளிடத்தில் அடைந்தான். அவன் கவித்திறன் தன் இயலாமையில் அவளின் முன் மண்டியிட்டது. அவனே அவளை வருணிக்கும் கவிதை ஆனான்.”

இதில் கலிமா ஷூ – மந்திரம் ஆகு என்னும் நிலை பேசப்படுகிறது.

ஐனுல் யகீன் என்னும் நிலை தரிசனத்தால் உண்டாகும் தெளிவு என்றால் அதைவிடவும் முழுமையான மேலான நிலை ஹக்குல் யகீன் என்பதாகும். இது இறையனுபவத்தால் உண்டாகும் தெளிவு.

கேட்டு அறிவதை விடப் பார்த்து அறிவது மேலானது. பார்த்து அறிவதை விட அனுபவித்து அறிவது மேலானது.

விட்டில் ஜோதியைப் பார்க்கிறது. அனுபவத்தை நோக்கி ஈர்க்கப் படுகிறது. தன்னை அந்த ஜோதியில் முற்றிலும் அர்ப்பணித்து விடுகிறது. குருட்டு விட்டிலுக்கோ விளக்கு இருக்கும் திசை கூட தெரியாது.


திருக்கலிமாவின் ஞானங்கள் உண்டாகும் படிநிலைகள் நான்கு என்று சூஃபி மகான் நூரீ ஷாஹ் (ரஹ்) அவர்கள் விளக்கினார்கள்:
இல்மெ லா இலாஹ இல்லல்லாஹ் – திருக்கலிமாவின் அறிவு
திக்ரெ லா இலாஹ இல்லல்லாஹ் – திருக்கலிமாவின் நியாபகம்
ஃபிக்ரெ லா இலாஹ இல்லல்லாஹ் – திருக்கலிமாவின் சிந்தனை
ஷுகலே லா இலாஹ இல்லல்லாஹ் – திருக்கலிமாவின் அனுபவம்.

வழிபாடுகள் இறைவனுக்காக என்று சொல்வதன் முடிந்த எல்லை இறையனுபவம் அடைதல்தான். ”யாஃப்தே ஹக்” என்று இதனை சூஃபிகள் சொல்கிறார்கள் (ஃபார்சி மொழியில்.)

நபி (ஸல்) அவர்களின் அருள்மொழி: “நிச்சயமாகத் தொழுகையில் அனுபவம் இருக்கிறது” (இன்ன ஃபிஸ்ஸலாத்தி ஷுக்லா – புகாரி #1199)

இந்த அனுபவம் எது? என்று கேட்பீர்களானால் தொழுகை யாருக்காக? என்பதைச் சிந்தியுங்கள். லில்லாஹி – அல்லாஹ்வுக்காக. எனவே இந்த அனுபவம் இறையனுபவம்தான்.

எத்தனை சிறந்த கவிஞனாக இருந்தாலும் அந்த அனுபவத்தை வருணித்துவிட முடியாது. அது மொழியின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அதன் சாயையான சிற்றின்பத்தையே கவிஞர்கள் இன்னும் முழுமையாக வருணித்துத் திருப்தி அடைய முடியவில்லை எனும்போது அந்தப் பேரின்பத்தை எப்படி வருணிக்க இயலும்?

இறையனுபவம் பெற்ற அடியானின் ஒவ்வொரு அசைவும் இறைவனைப் புகழ்வதாகி விடுகிறது. அவனின் இருப்பே இறைவனின் புகழ்ச்சியாக உள்ளது.

விண்ணேற்றத்தில் இறைதரிசனம் பெற்ற பெருமானார் சொன்னார்கள்:
“நீயே தூயவன்! உன்னை நீயே புகழ்ந்து கொண்டது போல் நான் உன்னை முழுமையாகப் புகழ்ந்துவிட முடியாது” (சுப்ஹானக லா அஹ்ஸ த்ஸனாஅ அலைக்க அன்த கமா அத்ஸ்னைத்த அலா நஃப்சிக்க – தஃப்ஸீர் ரூஹுல் பயான்).

நினைவில் நிறுத்துங்கள்: கலிமா கூ தான் பீன் ஷூ.