Tuesday, March 25, 2014

கஸல் துளிகள்


மீனுக்குள் விழுந்த
யூனுஸ் நபியைப் போல்
உன்
கண்ணுக்குள் விழுந்தேன்

கரையற்ற கடலின்
மீனான உன் கண்ணில்
காலத்தின் எல்லை வரை
கரையாமல் இருப்பேன்!
*

திரும்பும் திசையெல்லாம்
நிறைந்திருக்கும் முகம்
தென்பட்டது
உன் முகத்தில்

உச்சி முதல் பாதம் வரை
கண்ணாடி ஆகிவிட்டேன்
காதலின் சுகத்தில்!
*

உன் காதலில்
புன்னகைகள் விற்றுக்
கண்ணீர் வாங்கினேன்

ரோஜாக்கள்
மண்ணில் உதிர்கின்றன
பனித்துளிகள்
விண்ணில் எழுகின்றன
*

என்னில்
உன்னைக் காட்டி
உன்னில் நீ
என்னை ஒளித்தபோது...

மறைந்த பொக்கிஷம்
ஆகிவிட்டேன்
*

உன்னைக் காதலிக்கும் முன்புவரை
வெறும் கோட்டோவியமாய் இருந்தேன்

நீயே வண்ணங்களாய்
நிரம்பிவிட்டாய் என்னில்!

3 comments:

  1. வார்த்தை ஓவியம்

    ReplyDelete
  2. நீயே வண்ணங்களாய்
    நிரம்பிவிட்டாய் என்னில்!

    ReplyDelete
  3. நீயே வண்ணங்களாய்
    நிரம்பிவிட்டாய் என்னில்!

    ReplyDelete