Sunday, April 30, 2017

நான் விளக்கைப் படைத்தேன் - part 2


Image result for esoteric quran

இனி, உருவகமான திருவசனங்களின் உள்ளுறை அர்த்தங்களை (தஃவீல், Interpretations) யாரறிவார் என்பதை இத்திருவசனத்தின் மூன்றாம் பகுதி சொல்கிறது: “அறிவதில்லை அதன் உட்பொருளை, அல்லாஹ் மற்றும் அறிவில் உறுதிப்பட்டோர் தவிர (வேறு எவரும்), அவர்கள் சொல்கிறார்கள் ’அதுகொண்டு நம்பினோம், அனைத்தும் எம் ரட்சகனிடமிருந்தே’. இதயத்தின் மையங்களுடையோர் அன்றி வேறெவரும் தியானிப்பதில்லை” (குர்ஆன்: 3:7)

இப்பகுதிக்கு நான் அளித்திருக்கும் மொழியாக்கம் இத்திருவசனத்தை நான் புரிந்து கொண்ட முறையில் செய்யப்பட்டதாகும். இதுவே இந்தத் திருவசனத்தில் மிகவும் சிக்கலான பகுதி. சூஃபிகளை மறுப்போர் இத்திருவசனப் பகுதியை வேறு வகையில் அர்த்தம் கொள்கிறார்கள். அது எப்படி எனில்,  

“அறிவதில்லை அதன் உட்பொருளை, அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரும்).  மேலும், அறிவில் உறுதிப்பட்டோர் சொல்கிறார்கள் ’அதுகொண்டு நம்பினோம், அனைத்தும் எம் ரட்சகனிடமிருந்தே’. இதயத்தின் மையங்களுடையோர் அன்றி வேறெவரும் தியானிப்பதில்லை” (குர்ஆன்: 3:7)

இருவிதத்தில் பொருள் கொள்ளப்பட்டிருக்கும் திருவசனப்பகுதி அரபி மூலத்தில் இவ்வாறு உள்ளது: ”வ மா யஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹு வர்ராஸிஃகூன ஃபில் இல்மி யகூலூன ஆமன்னா பிஹி குல்லும் மின் இந்தி றப்பினா”

இதனை இரண்டு விதமான தொடரியல் அமைப்பில் (syntax) அணுக இருவேறு விதமான அர்த்தங்கள் வருகின்றன.

சூஃபிகளை மறுப்போர், வஹ்ஹாபிகள் இதனை, ”வ மா யஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹு” என்பதில் நிறுத்திப் பொருள் கொள்கிறார்கள். எனவே அவர்களிடம், ”உருவகங்களின் உட்பொருளை யார் அறிவார்?” என்னும் கேள்விக்கு “அல்லாஹ் மட்டுமே அறிவான். வேறு யாரும் அறியமாட்டார்கள்” என்பது பதிலாகிறது. ”அப்படியானால் அறிவில் உறுதிப்பட்டோரின் நிலை என்ன?” என்னும் கேள்விக்கு “அவர்களும் அதன் உட்பொருளை அறியமாட்டார்கள், ஆனால் ’அதைக்கொண்டு நம்பினோம். அனைத்தும் எமது ரட்சகனிடமிருந்தே’ என்று கூறுகிறார்கள்” என்பதே அவர்களின் பதிலாகிறது.

இம்முறையில் இத்திருவசனத்திற்குப் பொருள் கொள்ளும்போது பல இடர்ப்பாடுகள் நேர்கின்றன. இந்த அர்த்தங்கொள்ளல் பல கேள்விகளுக்கு விடை கூறப் போதுமானதாக இல்லை. எப்படி என்று காண்போம்.

முதலாவதாக, இந்த வேதம் யாருக்கு அருளப்பட்டதோ அந்தத் திருநபி முஹம்மத் (ஸல்) அவர்களின் நிலையை இப்புரிதல் கேள்விக்குள்ளாக்குகிறது. இத்திருவசனத்தில் “அல்லாஹ்வும் அறிவில் உறுதிப்பட்டோரும்” என்றுள்ளதால் “அறிவில் உறுதிப்பட்டோர்” என்பதில்தான் முஹம்மத் (ஸல்) அவர்களின் இடம் அமைகிறது. அறிவில் உறுதிப்பட்டோர் முதஷாபிஹாத் வசனங்களின் உட்பொருளை அறியமாட்டார்கள் என்றால் முஹம்மத் (ஸல்) அவர்களும் அறியமாட்டார்கள் என்றாகிறது. எனில், குர்ஆனை முழுமையாக அவர்கள் அறியமாட்டார்கள், அதாவது குர்ஆனில் அவர்கள் அறியாத பகுதியும் உண்டு என்றாகிறது. தனக்கு அருளப்பட்ட ஒரு வேதத்தை முழுமையாக விளங்கியிருப்பதே ஓர் இறைத்தூதருக்குப் பொருத்தமானது. மாறாக, அதில் சில பகுதிகளை அவரே விளங்கிக்கொள்ள முடியாது என்று கூறுவது சரியல்ல.

மேலும், உருவகமான வசனங்களை அல்லாஹ்வை அன்றி வேறெவரும் அறியவே முடியாதெனில் அவற்றை அவன் மனிதர்களைப் பார்த்து ஏன் கூறவேண்டும்? ஒருவருமே விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றைப் பேசுவதில் என்ன நோக்கமிருக்க முடியும்? இக்கேள்விக்கு, “அவர்களின் ஈமான் (இறைநம்பிக்கை) அவ்விதம் சோதிக்கப்படுகிறது. அறிவில் உறுதிப்பட்டோர் அதனை விளங்காவிட்டாலும் நம்புவார்கள்” என்பது பதிலாக இருக்குமெனில், ”அது ’ராஸிஃகூன ஃபில் இல்ம்’ என்பவர்கள் செய்யும் காரியம் மட்டுமல்லவே, அறிவில் உறுதிப்படாத பாமர முஸ்லிம்களும் செய்யும் காரியம்தானே?” என்னும் கேளவி எழுகிறது. அந்நிலையில் இத்திருவசனம், “அதனைக்கொண்டு நாங்கள் நம்பினோம் என்று விசுவாசிகள் கூறுவார்கள்” என்றல்லவா இருந்திருக்கும்? குர்ஆனின் உருவகத் திருவசனங்களும் அனைவரிடமும்தானே வந்துள்ளது. இதில் தனிச்சிறப்பில் உள்ள ஒரு வகையினரைக் குறிப்பிட வேண்டியது ஏன்? 

”’உருவகமானவற்றை அல்லாஹ்வும் அறிவான் அறிஞர்களான மனிதர்களும் அறிவார்கள்” என்றால் அது இணைவைப்பு ஆகிவிடாதா?” என்னும் அசட்டுத்தனமான (கலப்பற்ற வஹ்ஹாபிய ரகமான) கேள்வியும் கேட்கப்படலாம். ”(அல்லாஹ்) ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும் கற்பித்தான்” (வ அல்லம ஆதமல் அஸ்மாஅ குல்லஹா – குர் ஆன்:2:31) என்பதை நோக்குக. அல்லாஹ் தானறிந்த அனைத்துப் பெயர்களையும் ஆதமுக்குக் கற்பித்தான். கற்பித்த பின் ஆதம் அவை அனைத்தையும் வானவரிடம் சொல்லிக் காட்டினார்கள். (இதை ஏன் அல்லாஹ் நடத்தினான்? அவ்வகையில் வஹ்ஹாபிய சிந்தனைக் கோணல் வானவர்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதவன் திருவுளம் போலும்!) அதாவது, அல்லாஹ் அறியும் அனைத்துப் பெயர்களையும் ஆதமும் அறிவார்கள் என்றாயிற்று. இதில் ஷிர்க் என்னும் இணைவைப்பு எங்கே வந்தது? வருமெனில் அதை அல்லாஹ் நடத்தியிருக்கவே மாட்டானே? (ஒரு சிறிய ஆனால் மிகவும் அடிப்படையான புரிதல்: அல்லாஹ் சுயமாக அறிவான், ஆதம் அவன் கற்பித்து அறிவார்கள். எனவே ஷிர்க் என்னும் இணைவைப்பு நிலை உண்டாகவே மாட்டாது, அவன் அறிவதை எல்லாம் இவர்கள் அறிந்தாலும்.) அதேபோல், உருவகமான திருவசனங்களின் அர்த்தங்களை அல்லாஹ்வும் அறிவில் உறுதிப்பட்டோரும் அறிவார்கள் என்று சொல்வதால் இணைவைப்பு ஏற்படாது. ஏனெனில் அல்லாஹ் சுயமாக அறிவான், அறிஞர்கள் அவன் கற்பித்துத் தருவதால் அறிவார்கள்.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது: “அறிவில் உறுதிப்பட்டோர் அதனை அறிவார்கள் எனில் பிறகு ஏன் அவர்கள் ‘ஆமன்னா பிஹி’ அதனைக்கொண்டு நம்புகிறோம்’ என்று சொல்கிறார்கள்?”

நம்பிக்கை என்பதே அறியாத, விளங்காத ஒன்றின் மீது ஏற்படுவதுதான் என்னும் புரிதலில் இக்கேள்வி எழுகிறது. இந்தப் புரிதலே அடிப்படையில் தவறானது. நம்பிக்கை என்பது நாம் அறிந்த ஒன்றின் மீதும் இருக்கலாம், நாம் அறியாத ஒன்றின் மீதும் இருக்கலாம். இதைப் புரிந்து கொண்டால் மேற்காணும் கேள்வி எழ வாய்ப்பில்லை.

Related image

பொதுநிலையில் உள்ள பெருந்திரள் முஸ்லிம்கள் உருவகமான ஆயத்களின் பொருளை விளங்காத நிலையில் அவற்றின்மீது நம்பிக்கை கொள்கிறார்கள்; அறிவில் உறுதிப்பட்டோரான தேர்ந்த குழுவினர் (ஃகவாஸ்ஸ்) உருவகமான ஆயத்களின் அர்த்தங்களை அறிந்த நிலையில் அவற்றின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். இதில் சங்கடம் என்ன?

இது ஒரு பதில். இன்னொரு பதிலும் இருக்கிறது. ”வர்ராஸிஃகூன ஃபில் இல்மி” (மேலும் அறிவில் உறுதிப்பட்டோரும்) என்னும் பகுதியானது அதன் முன்னும் பின்னும் எப்படி இருநிலைகளிலும் பொருந்திப் பொருள்தருகிறது என்று காணும்போது விரியும் விளக்கம் அது. 

அப்பகுதியை அதற்கு முன் உள்ள அல்லாஹுவுடன் சேர்த்து முதலில் பொருள் கொள்ளும்போது “அறிவதில்லை அதன் உட்பொருளை, அல்லாஹ் மற்றும் அறிவில் உறுதிப்பட்டோர் தவிர (வேறு எவரும்)” என்று அர்த்தப்படுகிறது. அல்லாஹ் சுயமாகவும் அவனால் கற்பிக்கப்பட்ட நிலையில் அறிவில் உறுதிப்பட்டோரும் (அதாவது இறைத்தூதரும் இறைநேசர்களும்) அறிந்தார்கள் என்பதாக. இந்த அர்த்தத்திற்கு இச்சொற்றொடரைத் தொடர்ந்து வரும் வார்த்தைகள் வலு சேர்க்கின்றன.

அப்பகுதியை அதற்குப் பின்னுள்ள சொற்றொடருடன் பொருத்திப் பார்க்க, “மேலும், அறிவில் உறுதிப்பட்டோர் சொல்கிறார்கள் ’அதுகொண்டு நம்பினோம், அனைத்தும் எம் ரட்சகனிடமிருந்தே’. (குர்ஆன்: 3:7).

இத்தொடரில் அதுகொண்டு (”பிஹி”) என்பதில் ஹி என்பது எதனைச் சுட்டுகிறது? இத்திருவசனம் குறிப்பிடுகின்ற இரண்டு வகை ஆயத்களில் இரண்டாவது வகையான “ஆயாத்தும் முஹஷாபிஹாத்” (உருவகமான திருவசனங்கள்) என்பதைக் குறிப்பதாகக் கொண்டால், “உருவகமான திருவசனங்களைக் கொண்டு நம்புகிறோம்” என்று பொருள்படும். ஆனால், அந்நிலைதான் முஃமின்கள் (இறைவிசுவாசிகள்) அனைவருக்கும் பொதுவானதாயிற்றே. எனவே பிஹி என்பதிலுள்ள சுட்டுவிகுதி (ளமீர்) இச்சொற்றொடரில் இதற்குச் சமீபமாயுள்ள ஒன்றையே குறித்து நிற்க வேண்டும். இந்தத் திருவசனப் பகுதி முதஷாபிஹாத்தான ஆயத்களின் “தஃவீல்” (உட்பொருள்) பற்றிப் பேசிச்செல்கிறது. எனவே “வ மா யஃலமு தஃவீலஹு...” (அதன் உட்பொருளை அறியமாட்டார்கள்...” என்னும் வசனப்பகுதியிலுள்ள தஃவீல் என்பதையே அது குறிப்பாகச் சுட்டுகிறது. (அதாவது, தஃவீலஹு என்பதில் உள்ள ஹு என்னும் விகுதி முதஷாபிஹாத் (உருவகத் திருவசனம்) என்னும் பதத்தைச் சுட்டுகிறது, அடுத்த நிலையில் ”பிஹி” என்பதில் உள்ள ஹி என்னும் விகுதி அந்த முதஷாபிஹாத்தின் தஃவீல் (உருவகத்தின் உட்பொருள்) என்பதைச் சுட்டுகிறது.) எனவே ”அது கொண்டு நம்பினோம்” என்று அறிவில் உறுதிப்பட்டோர் சொல்வதானது “உருவகத்திருவசனங்களின் உட்பொருளைக் கொண்டு நம்பினோம்” என்பதுதான். அதனை அவர்கள் இறைவனிடமிருந்து அறிந்துள்ளார்கள் என்பதையே இந்த விகுதிகளின் (ளமாஇர்) பயன்பாடு காட்டுகிறது.

”ராசிஃகூன ஃபில் இல்ம்” என்னும் பகுதியில் கவனம் செலுத்திச் சிந்திக்கவும். “அறிவில் உறுதிப்படுத்தப்பட்டோர்” என்பது இதன் பொருள். எந்த அறிவில்? எவ்வாறு? யார் படுத்தியது? எதற்காக? என்பன போன்ற கேள்விகளை இங்கே எழுப்பியாக வேண்டும். எந்த அறிவில்? என்னும் கேள்விக்கு, “இல்மெ பாத்தின்” என்னும் அந்தரங்கமான அறிவில் என்பதே விடை. ஏனெனில், இப்பகுதியானது வெளிப்படை அறிவை நல்கும் வெளிப்படையான ஆயத்கள் (முஹ்கமாத்) பற்றியல்லாது உட்பொருள் கொண்ட முதஷாபிஹாத் பற்றிப் பேசுகிறது. எனவே அதை கிரகித்துக்கொள்ள அந்தரங்கமான அறிவே பலப்படவேண்டியிருக்கிறது. (அவர்களுக்கு உட்பொருள் எதையும் கற்பிக்கப்போவதில்லை எனில் எதற்காக அவர்களை பலப்படுத்துவது?) அந்தரங்க ஞானத்தைத் தாங்க அபரிதமான ஆற்றல் வேண்டும். சாதாரண மனித மூளை அதனைத் தாங்காது. எனவே அல்லாஹ்வே அதனை அறிவில் உறுத்ப்படுத்திப் பின்னர் அதற்கு உட்பொருள் விளக்கத்தை வெளியாக்குகிறான்.

“ஆமன்னா பிஹி” என்னும் சொற்றொடரின் வெளிப்படையான பொருளில் “அதுகொண்டு நம்பினோம்” என்று மேலே கண்டோம். எனினும், அறியாதவர்களின் நம்பிக்கைக்கும் அறிந்தவர்களின் நம்பிக்கைக்கும் வேறுபாடு இருக்க வேண்டும். இங்கே நாம் உட்பொருளை அறிந்தவர்களின் நம்பிக்கையைப் பற்றியே பேசுகிறோம். அந்த நம்பிக்கையின் நிலை மேலானது. “அல்-ஈமானு ஹுவல் யகீன்” (நம்பிக்கை என்பது ஊர்ஜிதமே) என்று நபி (ஸல்) கூறியதன் அடிப்படையில், அறிவு, சத்தியம் மற்றும் தரிசனம் ஆகியவற்றின் படித்தரங்களில் அதனைக் குர்ஆன்  வகைப்படுத்துவதையும் (இல்முல் யகீன், ஹக்குல் யகீன், ஐனுல் யகீன்) நோக்க இங்கே ”உருவகத் திருவசனங்களின் உட்பொருளை அடைந்து கொள்வது” என்னும் விளக்கத்தைப் பெறலாகிறது. ஏனெனில், ஆமன்னா என்னும் சொல்லுக்கு நம்பினோம் என்பது மட்டுமல்லாது ‘அடைந்தோம்’ என்னும் பொருளும் உண்டு. ”ஈமான்” என்பதன் வேர்ச்சொல்லான அ-ம-ன என்பதிலிருந்து கிளைக்கும் சொற்களின் அர்த்தவெளியை அவதானித்தால் இவ்வசனப்பகுதியின் உட்கருத்து துலங்கிவரக் காணலாம்.

‘அமன்’ என்னும் சொல்லுக்கு பாதுகாப்பு என்று பொருள். சில மனிதர்களை ஹாஃபிழ்கள் (குர்ஆனை முழுவதும் மனனம் செய்தோர்) ஆக்கி அவர்களில் வைத்து அதனை அல்லாஹ் பாதுகாக்கிறான் என்பது போல் சில மனிதர்களை அறிவில் உறுதியாக்கி உருவகத் திருவசனங்களின் உட்பொருளை அவர்களின் வைத்து அல்லாஹ் பாதுகாக்கிறான்.

Image result for conferring sufi khilafat

’அமானத்’ என்னும் சொல்லுக்கு அடைக்கலம் என்று பொருள். நம்மிடம் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்ட எப்பொருளுக்கும் அதனைப் பேணுகின்ற பொறுப்பு நம் மீது உண்டாகிவிடுகிறது. பொதுவாக முஸ்லிம்கள் அனைவரிடமும் ஈமான் (இறைநம்பிக்கை) என்னும் பொறுப்பு அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குர்ஆன் சொல்வது பெரும்பாலும் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். (மலைகளே ஏற்க அஞ்சிய பொறுப்பை மனிதன் ஏற்றுக்கொண்டான் என்னும் கருத்துள்ள திருவசனம்) இங்கே இன்னும் கூடுதலான அடைக்கலம் பற்றிச் சொல்லப்படுகிறது. “உருவகத் திருவசனங்களின் உட்பொருள்” என்பதே அந்த அடைக்கலப் பொருள். அதனைப் பேணும் பொறுப்பு ஞானியர் மீது ஏற்படுகிறது. (”இழ்ஹாருஸ் சிர்ரி குஃப்ரு” – ரகசியத்தை வெளிப்படுத்துவது நிராகரிப்பாகும் என்று சூஃபிகள் சொல்கிறார்கள். ஏனெனில், ரகசியமாக வைத்துக்கொள் என்னும் பொறுப்புடன்தான் அந்தரங்க ஞானத்தை இறைவன் தருகிறான்.)

இந்த வெளிச்சத்தில் பார்க்கும் போது ”பிஹி” அச்சொற்றொடரின் அமைப்பில் தஃவீலஹு என்பதினும் இன்னும் அருகிலிருக்கின்ற ”அல்லாஹு” என்னும் சொல்லிற்கே மீளுகிறது. தஃவீலஹு என்பதன் பக்கம் மீள்வதாகக் கொள்ளும்போது “அதன் உட்பொருளைக் கொண்டு நம்புகிறோம்” என்றும், “அதன் உட்பொருளை அடைகிறோம்” என்றும் துலங்கும் பொருள், அல்லாஹு என்பதன் பக்கம் மீள்வதாகக் கொள்ளும்போது “அவனைக் கொண்டே அடைகிறோம்” (உருவகங்களின் உட்பொருள் விளக்கத்தை) என்பதாகப் பொருளாகிறது. இவ்விரு வகையிலுமே ”ஆமன்னா” என்பதற்கு அடைதல் என்னும் பொருள் பொருத்தமானது என்பதை இப்பகுதியைத் தொடர்ந்து வரும் சொற்றொடர் உறுதிப்படுத்துகிறது: “அனைத்தும் எம் ரட்சகனிடமிருந்தே (வந்துள்ளன)” (”குல்லும் மின் இந்தி ரப்பினா”). வருவதைத்தானே அடைய முடியும்? அறிவில் உறுதிப்படுத்தப்பட்டோர் தாமறியும் உட்பொருள் விளக்கங்கள் எல்லாம் இறைவனிடமிருந்தே வருவதைத் தெளிவாக அறிவார்கள் என்பதையும் அதில் அவர்களுக்குக் குழப்பமோ ஊசலாட்டமோ இருக்காது என்பதையும் இப்பகுதி காட்டுகிறது. நபியை மறுத்த யூதர்கள் அவர் இறைத்தூதர்தான் என்பதை அவர்களது மகன்களை அறிவது போல (அத்தனை ஊர்ஜிதமாக) அறிந்திருந்தார்கள் (’யஃரிஃபூனஹு கமா யஃரிஃபூன அப்னாஅஹும்’) என்கிறது குர்ஆன் (2:146; 6:20). பிராப்தமில்லாத ஒன்றையே ஊர்ஜிதமாக அறியத்தரும் அல்லாஹ் தான் நேசிக்கின்ற ஞானியருக்குத் தரும் விளக்கங்களை அஃது அவனிடமிருந்துதான் வருகிறது என்னும் ஊர்ஜிதம் இல்லாமல் குழம்ப விட்டுவிடுவானா?

இந்த அந்தரங்க அறிவை, உருவகத் திருவசனங்களின் உட்பொருள் விளகக்த்தை அறியும் வழிமுறை யாது என்னும் கேள்விக்கு இனி விடை காண்போம். முஹ்கமாத் என்னும் வெளிப்படை அர்த்தமுள்ள திருவசனங்கள் தரும் வெளிரங்க அறிவை (இல்மெ ழாஹிர்) அடைய நூற்களும் எழுத்துக்களும் பேச்சுக்களும் தருக்க நியதிகளும் சார்ந்த பகுத்தறிவுச் சிந்தனா முறை வகுக்கப்பட்டுள்ளது. வெளிரங்க அறிவை அடையும் அதே முறையில் அந்தரங்க அறிவை அடைய முடியாது என்பது சூஃபிகள் கண்ட தெளிவு. ஆழ்நிலை தியானமே அதற்கான வழிமுறை என்பதை அவர்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். இத்திருவசனத்தின் இறுதிச் சொற்றொடர் இக்கருத்தின் பக்கம் வெளிச்சமிடுகிறது: ”இதயத்தின் மையங்கள் கொண்டோரே அன்றி எவரும் தியானிப்பதில்லை” (“வ மா யத்தக்கரூ இல்லா உலுல் அல்பாப்” –குர்ஆன்:3:7). இதில் இரண்டு கலைச்சொற்கள் உள்ளன. ’திக்ரு’ மற்றும் ’உலுல் அல்பாப்’.

திக்ரு என்பது நினைவுகூர்தல் (Remembrance) என்று பொருள்படும். தியானம் (Meditation) என்பதையே அப்படிச் சொல்லப்படுகிறது. பெருந்திரள் முஸ்லிம்கள் செய்யும் நாமதியானம் (தஸ்பீஹாத்) என்பதை இவ்வசனம் குறிப்பதாகச் சொல்ல முடியாது. ஏனெனில் இது சிறப்பு நிலை பெற்றவர்களான ‘உலுல் அல்பாப்’ என்போரின் தொடர்பில் சொல்லப்படுகிறது. எனவே அதன் தன்மை (Quality) அதனைச் செய்வோரை வைத்தே நிர்ணயிக்கப்பட வேண்டும். பெருந்திரள் முஸ்லிம்களின் தியானம் (திக்ரு) மேம்போக்கானதுதான், நாவுச் சேவைதான். அதிகபட்சம் அதில் அவர்களின் வாழ்க்கைச் சூழல் சார்ந்த உணர்ச்சிபாவங்கள் இருக்கலாம். (துக்கம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ் என்று கதறுவான். துக்கம் நீங்கிவிட்டால் இறைவனை மறந்துவிடுவான். காண்க குர்ஆன்:16:53,54). இங்கே ”ஆழ்நிலை தியானம்” என்பதுதான் சொல்லப்படுகிறது. ஏனெனில், செய்வோர் லுப் உடையவர்கள் என்று சுட்டப்பட்டுள்ளது. அரபியில் “லுப்” என்றால் ‘இதயத்தின் மையம்’ (Core of the heart) என்று பொருள். அதன் பன்மை அல்பாப் என்பது. உலுல் அல்பாப் இதயத்தின் மையங்கள் கொண்டோர். அதாவது இதயத்தின் மையம் வரை அவர்களின் தியானம் ஆழ்ந்திருக்கும். எனவே இவ்வசனத்தில் வரும் திக்ரு என்பது ஆழ்நிலை தியானம் என்பதைக் குறிக்கிறது.

Image result for aamir kaleemi shah noori zikr
Sayyiduna Noori Shah (rah) with his disciples of Sufism

இச்சொற்றொடரின் தொனியைப் பாருங்கள்: “உலுல் அல்பாப்களைத் தவிர வேறெவரும் தியானிப்பதே இல்லை”. அதாவது இவர்களின் ஆழ்நிலை தியானம் இறைவனுக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்றால் இதர முஸ்லிம்கள் மேம்போக்காகச் செய்யும் திக்ருகளை எல்லாம் திக்ரு என்று சொல்வதற்கே தகுதி உள்ளதாக அவன் காணவில்லை! (தன் கருணையால் நமது ஓட்டை உடைசல் திக்ருகளுக்கும் நற்கூலி (ஸவாப்) தருவான் என்பது வேறு விஷயம்). எனில், உலுல் அல்பாப்களுக்கு – ஆழ்நிலை தியானிகளுக்கு அவன் என்ன தருவான்? சிறப்பாக ஏதாவது தரவேண்டுமல்லவா? அதுதானே நியாயம்? அந்தச் சன்மானம் என்ன என்பதைத்தான் இந்தத் திருவசனம் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, அவர்களுக்கு அவன் தன்னிலிருந்து அந்தரங்க ஞானத்தை, உருவகத் திருவசனங்களின் உட்பொருள் விளக்கத்தைத் தருகிறான்.


உலில் அல்பாப் என்பது தகுதிப்பாடாகவும் திக்ரு (ஆழ்நிலை தியானம்) என்பது வழிமுறையாகவும் ராசிஃகூன ஃபில் இல்மு (அறிவில் உறுதிப்பட்டோர்) என்பது எய்தப்பெறும் படித்தரமாகவும் தஃவீலி ஆயாத்தும் முத்தஷாபிஹாத் (உருவகமான திருவசனங்களின் உள்ளர்த்தங்கள்) என்பது அருளப்படும் சன்மானமாகவும் இருக்கிறது. எத்தனை உயர்ந்த இனிய நிலை! அதற்கென்று தான் தேர்ந்து கொள்ளும் சீதேவிகளின் கூட்டத்தில் அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக! ஆமீன்.

to be continued...

நான் விளக்கைப் படைத்தேன் - part 1

       
       அடியேன் மார்க்க ஞானம் பேசுகிறேன் என்னும் வதந்தி பரவி கணினித்துறைப் பேராசிரியர் ஒருவர் சந்திக்க வந்திருந்தார். எழுபத்திரண்டு கூட்டங்கள் அவரவரின் பிரதியாக முன்னிறுத்தும் இஸ்லாமில் என்னை என்னவாக ஊகித்துக் கொண்டு அவர் வந்தாரோ யானறியேன். அரைமணி நேரம் உரையாடிக்கொண்டிருந்தவரிடம் நான் மொழிபெயர்த்த “சூஃபிக் கோட்பாடுகள்” என்னும் தண்டியான நூலை விற்றனுப்பினோம் (பதிப்பக உரிமையாளரான சக பேராசிரியரும் சேர்ந்து). தியரியுடன் செய்முறையும் வேண்டும் என்று வலியுறுத்தி வாராந்திர தியானக் கூட்டத்திற்கு வருமாறு அவரிடம் சொல்லியிருந்தேன். ஓரிரு வாரங்கள் ஓடிய நிலையில் வாகன நிறுத்தத்தில் அவரை மடக்கி உசாவியபோது “குர்ஆனை விஞ்ஞான ரீதியாக விளக்குவதுதான் எனக்குப் பிடிக்கிறது” என்று முத்தாய்ப்பாகச் சொல்லிவிட்டார். (நமக்கும் கொஞ்சம் விஞ்ஞானம் வரும் என்றாலும் அது மெய்ஞ்ஞானத்தின் உபநிலை மட்டுமே என்பதுதான் நமது புரிதல். அதைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட நம்மால் ஆகாது தோழரே! சலாம்!).

      இஸ்லாமியச் சமூகத்தின் விரைவு வண்டிகளே மற்ற வண்டிகளைக் காட்டிலும் சற்றுத் தாமதமாகத்தான் வந்து சேர்கிறது. மேற்குலகில், விஞ்ஞானத்தின் எல்லைகளைத் தாண்டி விரியும் சிந்தனைகள் மெய்ஞ்ஞானத்தில் விடைகள் தேடிக்கொண்டிருக்கும் இந்நாளில், நாம் இப்போதுதான் விஞ்ஞான விளக்கம் என்று பேசத் தலைப்பட்டிருக்கிறோம். எனினும், அறிவியல் ரீதியாக விளக்குகிறேன் பேர்வழி என்று மேடை போட்டு தன்மேல் வெளிச்சம் பாய்ச்சிக்கொள்ளும் ‘மேதாவி’களுக்கு அந்த அறிவியலின் எல்லைகள் நன்றாகவே தெரியும். (விஞ்ஞானம் என்பதே அறிவுநிலை என்பதான ஒரு பார்வையை ஆங்கிலேயக் கல்வி இங்கே கிழக்கு முழுவதிலும் பொதுப்புத்தியில் உண்டாக்கி வைத்திருப்பதால் முஸ்லிம்களிடையே அதனை வாகனமாகக் கொண்டு தமது கொள்கைகளை எளிதாகக் கொண்டு சேர்க்க மதப் பரப்புநர்கள் முனைகிறார்கள்.) “குர் ஆன் என்பது விஞ்ஞான நூல் அல்ல; அது அடையாளங்களின் நூல்” (Quran is not a book of science; it is a book of signs) என்று வஹ்ஹாபிய வறட்டுச் சித்தாந்தி ஜாகிர் நாயக் ஒரு கூட்டத்தில் நயம்பட உரைத்ததை நினைவுகூர்கிறேன்.

      அவர் சொன்னதில் உள்ள எச்சரிக்கையுணர்வு கவனிக்கத்தக்கது. ’குர்ஆனில் விஞ்ஞானம் உள்ளது. ஆனால் அது முற்றிலும் விஞ்ஞானம் பேசும் நூல் அல்ல’ என்பதே அது. எனவே எல்லாத் திருவசனங்களுக்கும் விஞ்ஞான ரீதியான விளக்கத்தைக் கேட்காதீர்கள் என்று பொருள். (இங்கே நான் விஞ்ஞானம் என்னும் சொல்லையே தெரிந்து கையாள்கிறேன். ஏனெனில் விஞ்ஞானம் என்பதும் அறிவியல் என்பதும் ஒன்றல்ல. அறிவு இயல்வது எல்லாமே அறிவியல்தான். விஞ்ஞானம், கலைகள் உட்பட அனைத்துத் துறைகளுமே அறிவியல்தான்.) நாயக்கின் மேற்சொன்ன கூற்று முஸ்லிம்களிடையே (குறைந்தபட்சம் அவரின் ரசிகரிடையே) மிகப் பிரசித்தம். அடியேனுக்கு அதில் உப்புச்சப்பு இல்லை என்றால் என் செய்ய? சூஃபிகள் இந்த நிலைகளை எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடந்துவிட்டார்கள். மனதிற்குள்ளாகவே அந்த ஷோமேனிடம் சொல்லிக்கொண்டேன், “We are neither concerned with the science in the Quran, nor with the science of the Quran, but we are concerned with the conscience of the Quran” (யாம் குர்ஆனில் உள்ள விஞ்ஞானம் பற்றியோ குர் ஆனின் அறிவியல் பற்றியோ கவனம் கொள்ளவில்லை, ஆனால் குர்ஆனின் பிரக்ஞையைப் பற்றிக் கவனம் கொள்கிறோம்) குர்ஆன் மீதான சூஃபிகளின் முதல் நிலைப்பாடு இதுவே என்பதாக நான் புரிந்து வைத்துள்ளேன்.

”குர்ஆனின் பிரக்ஞை” என்னும் சொற்றொடரை எவ்வர்த்தத்தில் நான் கூறுகிறேன் என்பதைச் சற்று விளக்கவேண்டும். குர்ஆன் என்னும் மறைவெளிப்பாட்டை ஏற்று உள்வாங்கி இவ்வுலகிற்கு வெளிப்படுத்தித் தந்த இறைத்தூதரின் பிரக்ஞை நிலை என்று அதன் பொருள் விரியும். அதாவது Conscience of the Prophet who received in him the Scriptural Revelation of the Divine. எனவே குர்ஆனை நாம் விளங்கிக் கொள்வதற்கு இறைத்தூதரது பிரக்ஞை நிலைக்கு உபநிலையாக உள்ள ஓர் பிரக்ஞை நிலை அவசியமாகிறது. ஏனெனில் மறை வெளிப்பாடு என்பது மனிதர்கள் எழுதும் நூற்களைப் போன்றதல்ல. இறைத்தூதரின் பிரக்ஞை நிலை குர்ஆனை உள்வாங்கும், கிரகிக்கும், விளங்கும் நிகழ்வை ”வஹி” என்னும் அரபுச் சொல் குறிக்கிறது. (குறிப்பு: இதனை “Inspiration” என்று ஆங்கிலத்தில் முதலெழுத்தைப் பெரிய எழுத்தாக்கிக் குறிப்பர். ஆனால் அரபி மொழியில், தமிழைப் போலவே, பெரிய /  சிறிய எழுத்துக்கள் என்னும் வேறுபாடு இல்லை. தேனீக்களுக்கும் வஹி அறிவிக்கப்படுவதாகக் குர்ஆன் கூறுகிறது. இறைத்தூதரின் நிலையிலிருந்து தேனீயின் நிலையைப் பிரித்துக் காட்ட ஆங்கிலத்தில் அதனை ‘inspiration’ என்று சிற்றெழுத்து கொண்டு குறிப்பர்.  வஹி என்பதை அதன் நேரடி அர்த்தத்தில் inspiration என்று ஆங்கிலத்தில் பெயர்ப்பது போல் அல்லாது அதன் இன்னொரு அர்த்தபாவமான revelation என்னும் தொனியிலேயே இறையறிவிப்பு அல்லது வேத வெளிப்பாடு என்று மொழிபெயர்க்கின்றனர். ‘inspiration’ என்னும் தொனியில் அதனை அகவெழுச்சி எனலாம். Inspiration என்னும் இறைத்தூதருக்கான வஹியை அகப்பேரெழுச்சி என்று சொல்லலாம்.) இறைத்தூதர் நம்மிடம் அளித்த திருமறையை நாம் உள்வாங்கி கிரகித்து விளங்குவதற்குத் தேவையான பிரக்ஞை நிலையை சூஃபிகள் இல்ஹாம் என்று அழைக்கின்றனர். இல்ஹாம் என்பது வஹி என்பதன் உபநிலை. பொதுவாக நமது பிரக்ஞையானது நமது மனவோட்டங்களால், பருவுலக எண்ணங்களால் குழம்பியோ மூட்டமிடப்பட்டோ இல்லாத தெளிந்த நிலை, மனத்தின் அடுக்குகளில் நாம் அன்றாடச் சிந்தனையடுக்கான conscious mind-ஐ விட்டு இன்னும் ஆழ்ந்து subconscious mind என்னும் நிலையில் இருப்பது கனவு காணும்போதாகும். ஆழ்ந்த தியானம் இந்த நிலைக்கே விழிப்புடன் நம்மை இட்டுச் செல்கிறது. (Alpha State of Brain Activity என்று இதனை நவீன மருத்துவ விஞ்ஞானத் துறையில் சொல்கிறார்கள்) “நற்கனவு என்பது இறைத்தூதுத்துவத்தில் நாற்பதில் ஒரு பங்காகும்” என்று நபிகள் நாயகம் சொல்லியிருப்பதை இங்கே நினைவுகூர வேண்டும். (மேலும், “அவர் சுய மனோ இச்சையிலிருந்து பேசுவதில்லை; நிச்சயமாக அது அகப்பேரெழுச்சியான வஹியே அல்லாது வேறில்லை” (”மா யன்தி(க்)கு அனில் ஹவா, இன் ஹுவ இல்லா வஹ்யு(ன்)ய் யூஹா” –குர்ஆன்:53:4) என்னும் திருவசனமும் நினைவுகூர்க.) வஹி என்பதற்கொரு உப பிரக்ஞை நிலை இருக்கிறது என்பதையும் அது எத்தகைய நிலை என்பதையும் இந்த ஹதீஸ் குறிப்புக்காட்டுகிறது. அது யாரை நோக்கிச் சொல்லப்பட்டதோ அவர்கள் அதனைச் சரியாகவே பிடித்துக்கொண்டார்கள். இறைவேதமான குர்ஆனை நேர்ப்பட விளங்கவும் அதில் பொதிந்திருக்கும் அந்தரங்கமான ஞானங்களை அடையவும் அந்த உப பிரக்ஞை நிலை இன்றியமையாத ஒன்று என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். நற்கனவு ஏற்படும் மன / பிரக்ஞை நிலை என்ன?  அந்நிலையை விழிப்புடனேயே அடைவதற்கான வழிமுறைகள் என்ன என்பதைத் தேடி அடைந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தமது அணுக்கத் தோழர்களுக்கு அளித்த பயிற்சிகளின் வழியே உருவான ஞானியர்க் கொடிவழியில் (சில்சிலாவில்) அதனைக் கண்டடைந்தார்கள். தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் வாழுமியக்கமாக அது ஆயிற்று. பின்னாளில் அதற்கு சூஃபித்துவம் (தஸவ்வுஃப்) என்று பெயர்.

Image result for omar khayyam scientist
Planetarium of Omar Khayyam, the poet-scientist.

குர்ஆனில் உள்ள விஞ்ஞானம் (Science in the Quran) என்பது என்ன? விஞ்ஞானத் துறைகளான இயற்பியல், உயிரியல், புவியியல், வானியல், வேதியல், மருத்துவம் போன்றவற்றின் நோக்கில் திருக்குர்ஆன் கூற்றுக்களை விளக்குவது. (ஆங்கிலேயக் கல்விப்பரவலின் விளைவால் இன்று அவ்வழியில் ‘படித்த’ முஸ்லிம்களிடையே இப்போக்கின் அலை ஓங்கியுள்ளது.) இந்நோக்கில் திருமறை மற்றும் ஹதீஸ்களை ஆய்ந்த கூட்டத்தை இஸ்லாமிய வரலாற்றில் நெடுகிலும் காணலாம். இப்னுல் ஹைத்தம், அல்-குவாரிஸ்மி, உமர் ஃகய்யாம், அல்-ஃபாராபி, இப்னு சீனா, இப்னுர் ருஷ்து, இப்னுல் கய்யிமல் ஜவ்ஸிய்யா போன்ற பெயர்களாக அப்பட்டியல் நீளும். எனினும் இக்குழுவினர் இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பக் கட்டங்களில் இல்லை என்பது அவதானிக்க வேண்டிய ஒன்று. காரணம் என்னவெனில், குர்ஆனையும் ஹதீஸையும் விஞ்ஞான நோக்கில் ஆய்ந்தறிவது என்பது மார்க்கத்தின் முதன்மையான அம்சம் அல்ல என்பதுதான். வேண்டுமெனில் அஃதொரு துணைமை அம்சமாகக் கொள்ளப்படலாம். எனவேதான் நபியோ நபித்தோழர்களோ ஆடிகளும் தொலைநோக்கிகளும் கொண்ட ஆய்வுக்கூடங்களை நிறுவவில்லை.

Image result for study of quran

குர்ஆனின் அறிவியல் ”Science of the Quran” (அரபியில் ”உலூமுல் குர்ஆன்”) என்பது (text of the Scripture) திருமறைப் பிரதியினைச் சார்ந்த அறிவுத்துறை. குர்ஆனின் மொழியியல் சார்ந்த அரபுமொழி இலக்கணங்கள் (நஹ்வு சர்ஃபு போன்றன), தஃப்ஸீர் என்னும் குர்ஆன் விரிவுரைக் கலை, தர்ஜுமா என்னும் குர்ஆன் மொழிபெயர்ப்புக் கலை, தஜ்வீது என்னும் ஒலிப்பு முறைமைக் கலை, கிராஅத் என்னும் ஓதுமுறைக் கலை இத்தியாதிகள் இதனில் அடங்கும். இப்பொருண்மையை விளக்கி ”'Ulum Al-Qur'an: The Sciences of the Qur'an : a Study in Methodology and Approach” என்னும் நூலினை அப்துர் ரஹ்மான் தூயி எழுதியிருக்கிறார். (இவர் 1933-இல் குஜராத்தில் பிறந்தவர். கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.ஏ.ஜே.ஆர்பரியின் நெறியாள்கையில் டாக்டர் பட்டம் பெற்றவர். நைஜீரிய நாட்டில் மூன்று பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். 1999-இல் சிங்காரச் சென்னையில் இறந்து அங்கேயே அடக்கப்பட்டார்.) இந்த அறிவியல்களைக் கற்பவர்கள் மார்க்க அறிஞர்கள் (உலமாஅ) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் கற்றுள்ள அறிவுகளின் தன்மையை நோக்கி உலமாயே ழவாஹிர் (புறவயமான அறிஞர்கள்) என்று வகைப்படுகிறார்கள். இத்துறையிலும் பேரறிஞர்கள் இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்திலிருந்தே செயல்பட்டு வந்திருக்கின்றனர். அவர்களால்தான் மேற்சொன்ன அறிவுத்துறைகள் வளர்ந்து பரிணமித்தன. ஃபிக்ஹு என்னும் மார்க்கச் சட்டத்துறை இதிலிருந்தே உருவாகி வந்தது. இமாம் அபூஹனீஃபா, இமாம் ஷாஃபிஃ, இமாம் மாலிக், இமாம் அஹ்மதிப்னு ஹம்பல் ஆகிய நாற்பெரும் சட்டத் துறைத் தலைவர்களும், இமாம் தபரீ, இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி, ஸமக்‌ஷரீ, ஃபக்ருத்தீன் ராஜி, அபூபக்ரு இப்னுல் அரபி போன்ற விரிவுரைஞர்களும் இதில் அடங்குவர்.

Image result for sufi consciousness

குர்ஆனின் பிரக்ஞை “Conscience of the Quran” என்பது குர்ஆனை அணுகுவதற்கான சரியான பிரக்ஞை நிலையைக் குறிப்பதாகும் என்பதை மேலே கண்டோம். அதனை அடையும் வழிமுறைகள் ஓர் தனித்துறையாகப் பரிணமித்து தஸவ்வுஃப் (சூஃபித்துவம்) என்று வழங்கப்பட்டது. ’வஹி’ என்னும் மறைவெளிப்பாடு நிகழும் பிரக்ஞை நிலை ’நுபுவ்வத்’ (இறைத்தூதுத்துவம்) என்று குறிக்கப்படுகிறது. இல்ஹாம் என்னும் உள்ளுதிப்புத் தன்மை கொண்ட, அதன் உப பிரக்ஞை நிலை ‘விலாயத்’ எனப்படுகிறது. இதனைக் குறித்தே, “வஹி என்னும் மறைவெளிப்பாட்டின் அனுபவத்தைப் புரிந்துகொள்வதற்கு இல்ஹாம் என்னும் உள்ளுதிப்பின் அனுபவம் மிகவும் அவசியம். அது சூஃபிகளிடமே இருக்கிறது” என்று இமாம் கஸ்ஸாலீ அவர்கள் தனது “அல்-முன்கித் மினழ் ழலால்” (‘பிழையிலிருந்து விடுதலை’) என்னும் நூலில் எழுதியுள்ளார்கள். பிரதான நபித்தோழர்கள் தொட்டு, சய்யிதினா ஹசன் பசரீ, ஜுனைதுல் பக்தாதி, அபூபக்கர் ஷிப்லி, பாயஜீது பிஸ்தாமி, மௌலானா ரூமி, இப்னுல் அரபி, இமாம் கஸ்ஸாலீ, முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, ருஜ்பிஹான் பக்லீ, ஃபக்ருத்தீன் இராக்கீ, ஃக்வாஜா முய்னுதீன் சிஷ்தி, நாகூர் நாயகம் போன்ற மகான்கள் எல்லாம் இத்துறையைச் சேர்ந்தவர்களே. இவர்களை அவ்லியா (இறைநேசர்கள்), ஆரிஃபீன் (மெய்ஞ்ஞானிகள்), வாசிலீன் (யோகியர்), காமிலீன் (பூரணர்) போன்ற அடைமொழிகளால் குறிப்பர். இவர்களிடம் உள்ள அறிவின் தன்மையை நோக்கி ‘உலமாயே பாத்தின்’ (அந்தரங்க அறிஞர்கள்) என்று வகைப்படுத்துவர்.

குர்ஆனின் திருவசனங்கள் ஆயத் (பன்மையில் ஆயாத்) என்று அரபியில் சொல்லப்படுகின்றது. அத்தியாயம் என்பதற்கு ”சூரா” எனப்படும் (உதாரணமாக, குர்ஆனின் முதல் சூராவில் ஏழு ஆயாத் உள்ளன.) (குறிப்பு: தமிழ்க்கூறு நல்லுலகின் முஸ்லிம் பெருமக்கள் ஆயத்கள் சூராக்கள் என்னும் ரீதியில் தமிழ் மரபு சார்ந்து ’கள்’ சேர்த்துப் பன்மைப் படுத்துவது வழக்காக இருக்கிறது.) ஆயத் என்பதை அத்தாட்சிகள் (Proofs) என்பதாகச் சில இடங்களில் மொழிபெயர்க்கப்படுவதுண்டு. அதேபோல் அடையாளங்கள் (Signs) என்பதாகவும் சில இடங்களில் மொழிபெயர்க்கப்படும். உண்மையில் இவை குர்ஆனின் வார்த்தைகள் (கலிமாத்) சுட்டிக்காட்டும் வெளிப்பொருட்கள் (things, அஷ்யா) ஆகும். (உதாரணமாக, வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும் – ல ஆயாத்தில் லி-உலில் அல்பாப் – இதயத்தின் மையங்கள் கொண்டோருக்கு ’ஆயாத்’ (அடையாளங்கள் / அத்தாட்சிகள்) இருக்கின்றன என்று குர்ஆன் சொல்கிறது (3:190). இதில் வானங்கல் பூமிகள் இரவு பகல் ஆகியன பருவுலகிலான பொருட்கள் (things, அஷ்யா) ஆகும். எனினும், ஆழ்ந்து சிந்தித்து அறிவுக்கண் கொண்டு நோக்கும்போதே அதில் இறைவனின் அடையாளங்கள் அத்தாட்சிகள் புலப்படும். அப்படி, வெளிப்பொருள்களைக் கூர்ந்து சிந்தனையுடன் நோக்குமாறு கட்டளையிடும் திருவசனங்களும் இருக்கின்றன. (உதாரணமாக, “ஒட்டகங்கள், வானம், மலைகள் மற்றும் பூமி ஆகியவற்றைக் கூர்ந்து நோக்குமாறு ஆணையிடும் வசனங்கள் – குர்ஆன்:88:17-20).
குர்ஆன் வசனங்களின் தன்மைகளை அலசிவரும் இப்பின்னணியில் குறிப்பாக ஒரு திருவசனத்தை இங்கே நாம் கவனிக்க வேண்டியுள்ளது. சிறப்பு நிலையில் அமைந்த திருவசனங்களின் வகைப்பாடு பற்றி இவ்வசனம் குறிப்புக் காட்டுகிறது: ”(நபியே!), அவனே உம்மீது மறைநூலை இறக்கியுள்ளான். அதில் மறையின் ஊற்றான தெளிந்த வெளிப்பட்ட திருவசனங்களும் உருவகமான பிறவும் உள்ளன.” (குர் ஆன்:3:7).

குர்ஆனின் திருவசனங்கள் இரண்டு வகைப்படும் எனப்தாக இத்திருவசனம் சுட்டுகிறது: முஹ்கமாத் மற்றும் முதஷாபிஹாத். அவற்றுக்கு அரபியின் மூலத்தில் உள்ள சொற்கள் தரும் அர்த்த விரிவுகளைக் கொஞ்சம் காண்போம்.

முஹ்கமாத்: ஒருமையில் முஹ்கம். இதனை, ’தெளிந்த வெளிப்பாடுகள்’ (‘clear revelations’ - Pickthall), துல்லியமான வசனங்கள் (‘verses precise’ – Sahih International), ’(நிறுவப்பட்ட அர்த்தமுள்ள) அடிப்படை வசனங்கள்’ (’verses basic or fundamental (of established meaning)’ – Yusuf Ali), ‘தீர்மானமான வசனங்கள்’ (‘verses are decisive’ – Shakir) என்பதாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

முஹ்கம் என்பதன் வேரிலிருந்து வரும் இன்னொரு வார்த்தை ”ஹுக்ம்” என்பதாகும். அதற்கு ஆணை / கட்டளை என்று பொருள். முஹ்கமாத் என்னும் இவ்வகையின் திருவசனங்கள் எல்லாம் பெரும்பான்மை இறைவனிடும் ஆணைகளாக இருக்கின்றன. அந்த ஆணைகளும் இருவகைப்படும்: ஏவல் மற்றும் விலக்கல். இறையாணைகள் நல்வினைகளை ஏவவும் தீவினைகளைத் தடுக்கவும் செய்கின்றன. செய் / செய்யாதே எனும்படி அமைந்த திருவசனங்கள். இவ்வகைத் திருவசனங்கள் ”பொருள்விளக்கங்களை ஏற்காதவை” (’which accept no interpretation’) என்கிறார் முஹம்மத் சர்வர்.

ஒரு கட்டளைக்கு மேற்சொன்ன மொழிபெயர்ப்புகள் தரும் அனைத்து அம்சங்களும் இருக்க வேண்டும் என்பதை அன்றாட வாழ்வின் நிகழ்வுகளிலிருந்தே நாம் கண்டுகொள்ளலாம். ஒரு கட்டளை என்பது தெளிவாக, துல்லியமாக, ஒற்றை அர்த்தமுள்ளதாக, தீர்மானமானதாக, பொருள் விளக்கம் தேவையற்றதாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதனைச் செயல்படுத்துவதில் குழப்பமும் தவறும் ஏற்படும்.

மேலும், இந்த வகைத் திருவசனத்தைக் குறிப்பிடுகையில் இதனொரு தன்மையை இறைவன் விளக்குகிறான்: ”ஹுன்ன உம்முல் கிதாப்”. இத்தொடரை, ”நூலின் அடித்தளம்” (’Foundation of the Book’ – Sahih International, Yusuf Ali, Mohsin Khan), ‘நூலின் பொருண்மை’ (‘Substance of the Book’ – Pickthall), ’நூலின் அடிப்படை’ (’basis of the Book’ – Shakir), ’நூலின் அடிக்கருத்துக்கள்’ (’fundamental ideas of the Book’ – Muhammad Sarwar), ’நூலிம் சாராம்சம்’ (‘Essence of the Book’ – A.J.Arberry) என்றெல்லாம் மொழிபெயர்த்திருக்கிறார்கள். எனினும் இத்தொடரில் உள்ள சொற்களின் நேரடி அர்த்தத்தில் இந்த மொழிபெயர்ப்புக்கள் எதுவுமே அமையவில்லை.

“ஹுன்ன” என்பது பெண்பால் பன்மை சுட்டுவிகுதி (ளமீர் Pronoun). இங்கே அது குர்ஆன் ஆயத்களைச் சுட்டி நிற்கிறது. ஆனால் பன்மையான அச்சொல்லைத் தொடர்ந்து ”உம்ம்” என்னும் பெண்பால் ஒருமைப் பெயர்ச்சொல் இடம்பெற்றுள்ளது. அதற்கு அரபியில் நேரடி அர்த்தம் ‘தாய்’ என்பதே. கிதாப் என்றால் நூல் என்று பொருள். இங்கே அது குறிப்பாக வேதத்தை, இறைமறையைச் சுட்டுகிறது. ஹுன்ன என்பது அஃறிணையான திருவசனங்களைக் குறிப்பதால் அஃறிணைக்கும் ஆண் பெண் பால்விகுதி தரும் அரபியிலக்கணத்தைப் பின்பற்றவியலா நிலையில் தமிழில் “அவை” என்று பெயர்த்துக்கொண்டு “ஹுன்ன உம்முல் கிதாப்” என்பதை “அவை நூலின் தாய்” என்ற பொருளையே நேரடியாக நாம் அடைகிறோம். இங்கே ’தாய்’ என்பதை ’தோன்றுமிடம்’ / ‘தோற்றுவாய்’ என்பதாகப் பொருள்படுத்த வேண்டும். ஏனெனில் ஒரு குழந்தை தாயிடமிருந்தே வருகிறது. அதனடிப்படையில் ஒன்றின் தோன்றுமிடத்தை, மூலத்தை, ஊற்றுக்கண்ணைத் ’தாய்’ என்று அழைப்பது மரபு. அந்நோக்கில், ‘ஹுன்ன உம்முல் கிதாப்’ என்பதை ‘அவை நூலின் தோற்றுவாய்’ என்றும் ‘அவை நூலின் மூலம்’ என்றும் ‘அவை நூலின் ஊற்றுக்கண்’ என்றும் பொருள்கொள்ளலாம். இவற்றுள், “நூலின் ஊற்றுக்கண்” என்பதே என்னை மிகவும் கவர்கின்ற அர்த்தபாவமாய் இருக்கிறது, ஏனெனில் இச்சொற்றொடர் எதனை விளக்குகிறதோ அந்த ‘முஹ்கமாத்’ என்னும் சொல்லின் அர்த்தபாவங்கள் அனைத்தும் இதில் பொருந்திவருகின்றன. ஊற்றுக்கண் என்பது பொதுவாக ஒரு நதியின் பிறப்பிடத்திற்குச் சொல்லப்படும். நதிநீர் ஊற்றெடுத்துத் தோன்றுமிடத்தில் ”தெளிவாக”, “கலங்குதல் இன்றி”, தூய்மையாகவே இருக்கும். எனவே, “ஆயாத்தும் முஹ்கமாத்துன் ஹுன்ன உம்முல் கிதாப்” என்னும் திருவசனத் தொடரை ”தெளிந்த திருவசனங்கள் அவை நூலின் ஊற்றுக்கண்” என்று பொருட்படுத்தலாம்.

Related image
Surah Fathiha - the first chapter of Quran, having seven verses.

”உம்முல் கிதாப்” என்பது குர்ஆனின் முதல் அத்தியாயமான “சூரத்துல் ஃபாத்திஹா”வுக்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்றாகவும் உள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. எனவே இச்சொற்றொடர் பொது நிலையில் குர்ஆன் நெடுகிலுமுள்ள தெளிந்த திருவசனங்களையும் சிறப்பு நிலையில் அதன் திறப்பு அத்தியாயமான ஃபாத்திஹாவையும் குறிக்கிறது எனலாம். ஃபாத்திஹாவின் ஏழு திருவசனங்களில் குர்ஆனின் அனைத்துத் திருவசனங்கள் நுவலும் கருத்துக்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று சொல்லப்படும் கருத்தையும் இது தருகின்றது.

முதஷாபிஹாத்:  ஒருமையில் “தஷ்பீஹ்”. இதனை, ‘குறிப்பற்றவை’ (‘unspecific’ – Sahih International), ‘உருவகமானவை’ (‘allegorical’ – Pickthall, Yusuf Ali, Shakir), ‘பல அர்த்த சாத்தியங்களுள்ளவை’ (’verses may have several possibilities’ – Muhammad Sarwar), ‘முழுத்தெளிவு அற்றவை’ (’not entirely clear’ – Mohsin Khan), ‘பலபொருட்படுபவை’ (’ambiguous’ – A.J.Arberry) என்பதாக மொழிபெயர்ப்பிகள் வழங்கியுள்ளனர்.

தஷ்பீஹ் என்பதன் நேரடி அர்தத்தை நோக்கின் ‘உருவகம்’ (allegory) என்னும் மொழிபெயர்ப்பே மிகச் சரியானது. எனவே முதஷாபிஹாத் என்பதை உருவகமானவை என்றே நாம் விளங்கவேண்டும். உருவகம் ஒன்றைப் போல் இருக்கும் வேறொரு பொருள். இங்கே, குர்ஆனின் சூழலில் (context) அதன் வெளிப்பொருள் ஒன்றாகவும் உள்ளுறையும் மெய்ப்பொருள் வேறாகவும் இருக்கும் என்பதாம். எனவே அத்தன்மைத்தான திருவசனங்களுக்கு வெளிப்படையாய்த் தோன்றும் பொருளை, நேரடிப் பொருளை (literal meaning), அகராதிப் பொருளை எடுத்துக்கொள்ளக் கூடாது. எடுப்பின் வழிகேடுறும்.

முதஷாபிஹாத் என்பது நேரடிப்பொருள் அற்றது என்பதால் அதன் எதிர்மறை அம்சமாக (anti-thesis) முஹ்கமாத் என்பதை நேரடிப்பொருள் உள்ளது என்று கொள்ள வேண்டும். எனவே, நேரடியானவை மற்றும் உருவகமானவை என்று இவ்விரு வகைகளைக் கூறலாம்.

முஹ்கமாத் என்பதை ஒற்றை வருணிப்பில் சுருக்கமாக விளக்கிச் செல்லும் இத்திருவசனம் முதஷாபிஹாத் என்பது பற்றிச் சற்று விரிவான விளக்கத்தைத் தருகிறது. அதில் இரண்டு முக்கியமான குறிப்புக்கள் இருக்கின்றன. அதனைக் காணும் முன் இத்திருவசனத்தின் முதற்சொற்றொடரை மீண்டும் சுருக்கமாகத் தொகுத்துப் பார்த்துக்கொள்வோம்.

குர்ஆனில் முஹ்கமாத் முதஷாபிஹாத் (நேரடியானவை, உருவகமானவை) என்று இருவகை வசனங்கள் இருக்கின்றன. நேரடியான திருவசனங்கள் இறைமறையின் (எனவே இஸ்லாமிய மார்க்கத்தின்) அடித்தளமாக, ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. ஊற்றுக்கண் இல்லையேல் நதி இல்லை. அடித்தளம் இல்லையெனில் கட்டடம் இல்லை. அதுபோல் நேரடியான இந்தத் திருவசனங்கள் இல்லை எனில் இஸ்லாம் இல்லை. இப்புரிதலின் அடியாக முஹ்கமாத்தையும் முதஷாபிஹாத்தையும் பின்வருமாறு பிரித்து விளங்கலாம்.

முஹ்கமாத்: நேரடியானவை (எனவே விளங்க எளிதானவை), அடிப்படையானவை, நியதிகளானவை, அனைவருக்குமானவை. இஸ்லாத்தின் வெளிரங்கத்தை புறப்பரிமாணத்தைக் கட்டமைப்பவை. (ஷரீஅத்)

முதஷாபிஹாத்: உருவகமானவை (எனவே விளங்க சற்றுக் கடினமானவை), சிறப்பானவை, நியதிகளற்றவை, தேர்ந்தவர்களுக்கானவை. இஸ்லாத்தின் அந்தரங்கத்தை அகப்பரிமாணத்தைக் கட்டமைப்பவை. (ஹகீக்கத்)

இதனைக் கூர்ந்து நோக்க, முதஷாபிஹாத் இல்லாது முஹ்கமாத்தை மற்றும் கொண்டுள்ள ஒருவர் இஸ்லாத்தில் இருக்கவியலும், ஆனால் முதஷாபிஹாத்தை மற்றும் எடுத்துக் கொண்டு முஹ்கமாத்தை விட்டுவிடுமொருவர் இஸ்லாத்தில் இருக்கவியலாது என்பது விளங்கும்.

ஷரீஅத் என்னும் புறத்திற்கும் ஹகீக்கத் என்னும் அகத்திற்கும் பாலமாக இருப்பதே தரீக்கத் (ஆன்மிகப் பாதை) என்னும் சூஃபித்துவம். பாலம் அமைந்திருக்க இரண்டு கரைகளுமே இருக்கவேண்டும். முதஷாபிஹாத்தான திருவசனங்களை சூஃபிகளே விளங்கிக்கொள்வார்கள் என்று சொல்லும்போது அதன் அர்த்தம் முஹ்கமாத்தை விட்டுவிடுவார்கள் என்பதன்று. ஏனெனில் அப்படி ஷரீஅத்தைத் துறந்துவிட்டுத் தம்மை சூஃபிகள் என்று சொல்லிக்கொள்வோர் மலிந்துவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். (மேற்குலகில் பெரும்பாலும் இத்தகைய போலி சூஃபிகள் பரவியிருக்கிறார்கள். கிழக்குலகிலும் சிறுபான்மை இத்தகையோருண்டு.) அவ்வாறு முஹ்கமாத்தை விட்டு முதஷாபிஹாத்தை மட்டும் தேர்ந்துகொள்வோர் வழிகேடர்கள் என்று குர்ஆனின் இத்திருவசனத்தின் இரண்டாம் சொற்றொடர் தீர்ப்பளிக்கிறது:


”இதயங்களில் பிறழ்வு கொண்டோர் குழப்பத்தைத் தேடியோராயும் சாதகப்பொருட்பாடு தேடியோராயும் அதிலிருந்து உருவகமானவற்றையே பின்பற்றுகின்றனர்.” (குர்ஆன் – 3:7). 

to be continued...

Saturday, April 29, 2017

இப்னுல் அரபியின் சமாதியில்

சையத் ஹுசைன் நஸ்ர்

Related image

(ஈரான் நாட்டில் பிறந்தவரும், அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வுத் துறையின் பேராசிரியருமான சையத் ஹுசைன் நஸ்ரு எழுதிய “With Titus Burckhardt at the Tomb of Ibn ‘Arabi” என்னும் கட்டுரையின் தமிழாக்கம் இது).

Image result for titus burckhardt
Titus Burckhardt 

      1966-ஆம் ஆண்டின் இலையுதிர் பருவத்தில், பெய்ரூட் நகரின் அமெரிக்கப் பல்கலைக்கழக நூற்றாண்டுக் கொண்டாட்ட நிகழ்வு டைட்டஸ் புக்கார்ட்டைச் சந்திப்பதற்கான வாய்ப்பை நல்கிற்று. முன்பெல்லாம் நிகழ்ந்தது போல் ஐரோப்பிய மண்ணில் அல்லாது இத்தருணம் முதன் முறையாக அவரை அரபுலகின் எல்லைக்குள் சந்தித்தேன். நவீன மற்றும் மேற்குமயமான பெய்ரூட் நகரின் சத்தமும் இரைச்சலும் தாண்டி அதன் பாங்கோசை (அதான்) கேட்டபோது, இஸ்லாமிய உலகில் நவீனமயமாதல் மற்றும் மேற்குமயமாதலின் பரவலுக்கான துறைமுகம் என்று குறிக்கப்படும் இந்த மூலையிலும்கூட இஸ்லாத்தின் உயிரோட்டம் உணரப்பட வேண்டும் என்று அவர் சொன்னார். அருகில் உள்ள பழைய மஸ்ஜிதுகள் சிலவற்றைக் காணவும், மத்திய தரைக்கடலின் நீலவான விரிவின், மத்திய கிழக்கின் தெளிந்த வானத்தின் வெளிச்சத்தில் மர்யமியத் துதிகள் சிலவற்றை ஓதி தியானித்து மத்திய தரைக்கடற் பகுதி முழுவதுமான சமயச் சூழலில் கன்னி மர்யமின் தாக்கம் பற்றிச் சிந்திக்கவும் வாய்த்தது.

      மேலும், நாங்களிருவரும் புனிதரான யஷ்ருதி சூஃபிப் பெண்மணி சய்யிதா ஃபாத்திமா அவர்களைச் சந்திக்கவும் வாய்ப்புப் பெற்றோம். (யஷ்ருதி சூஃபி வழி 1841-இல் அப்போதைய பாலஸ்தீனத் தலைநகரான அக்ரா நகரில் வட ஆப்ரிகாவிலிருந்து வந்த ஷாதுலியா சூஃபி வழியின் குருவான அலீ நூருத்தீன் அல்-யஷ்ருதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. – மொ.பெ.) சூஃபித்துவம் பற்றி அவர் எழுதிய மிகப் பிரலமான நூல் அர்-ரிஹ்லா இலல் ஹக் என்பது. தனது நூலுக்கான தலைப்பைத் தேர்ந்தெடுக்க முடியாமல் மிகவும் தவித்ததாகவும், ஒரு நாள் கனவில் இப்னுல் அரபி அவர்கள் தோன்றி அந்தத் தலைப்பை அவர்களுக்குத் தந்ததாகவும் சொன்னார். யஷ்ருதியா வழியின் நிறுவனரின் மகளான அவர் டைட்டஸ் புக்கார்ட்டின் ஆன்மிகப் பிரசன்னம் மற்றும் பிரகாசமான ஆளுமையால் மிகவும் கவரப்பட்டார். அதன் அடையாளமாகத் தனது சுயசரிதையான மசீர(த்)தி இலல் ஹக் என்னும் நூலில் டைட்டஸுக்கும் அவரின் சந்திப்புக்கும் ஒரு தனிப்பக்கம் வழங்கியிருந்தார்.

Image result for ancient damascus
damascus 

      எனினும், பெய்ரூட்டில் காண்பதை விடவும் மரபான இஸ்லாமிய வாழ்க்கை மற்றும் கலைகள் காணக் கிடைக்கும் அரபுலக அருகாமைக் கிழக்கின் மரபான இஸ்லாமியத் தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்றே டைட்டஸ் புக்கார்ட் பேரார்வம் கொண்டிருந்தார். எனவே, சில ஆசோசனைகளுக்குப் பின்னர், நாங்களிருவரும் ஒன்றாக டமஸ்கஸுக்குச் செல்ல முடிவு செய்தோம். (டமஸ்கஸ் அரபி மொழியில் திமிஷ்க் என்று சொல்லப்படும். “இப்பூமியிலொரு சொர்க்கம் உள்ளதெனில் அது இதுதான் இதுதான் இதுதான்” என்று நபிகள் நாயகம் சிலாகித்த நகர் அது. –மொ,பெ.) அமைதி மற்றும் நிற்சலனத்தின் அற்புத உணர்வுகளைத் தந்த அழகிய மலைகள் மற்றும் சமவெளிகளின் ஊடான இரண்டு மணி நேரப் பயணத்தில் இஸ்லாமியப் பண்பாடு மற்றும் மரபின் பல்வேறு அம்சங்கள் குறித்துப் பொதுவாக அவர் தனது கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு வந்தார். அந்நிலப்பகுதியானது அவர் நன்கறிந்த ஸ்பெயினின் அந்தலூசியப் பகுதி மற்றும் மக்ரிப் என்னும் ஆஃப்ரிக்க வடமேற்குப் பகுதியின் (மொரொக்கோ, அல்ஜீரியா, துனீசியா மற்றும் லிப்யா –மொ,பெ.) நிலவியலுடன் கொண்டிருக்கும் சூழலியல் மற்றும் புவியியல் ஒப்புமைகளையும், டமஸ்கஸ் மற்றும் மர்ரகஷ் போன்ற இஸ்லாமிய நகரங்கள் பலவற்றைச் சூழ்ந்துள்ள மலைகள் மற்றும் பாலைவனங்களின் ஒத்துறவையும் பற்றிப் பேசிக்கொண்டு வந்தார். அவரது கருத்து நான் அன்றாடம் பார்த்து வந்திருக்குமொரு இயற்கைக் காட்சியின் அனுபவத்திற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தந்து, நாட்டுப்புறச் சூழலின் அனுபவத்தை அகவயமாக்கிற்று. அத்தகைய ஆன்மிக விளைவு ஒரு மகானின் சகவாசத்தில் மட்டுமே நிகழ முடியும்.

Image result for sayyidah zaynab mosque damascus
Sayyidah Zaynab Tomb Damascus

      டமஸ்கஸுக்கு வந்து சேர்ந்ததும், முதலில் நபிகள் நாயகத்தின் பேத்தியான சய்யிதா ஜைனப் அவர்களின் சமாதியை அல்லது அடக்கஸ்தலத்தைக் (மகாம்) காண்பது என்றும், அதனைத் தொடர்ந்து இப்னுல் அரபியின் சமாதி, உமய்யாக்களின் பள்ளிவாசல் ஆகியவற்றைக் காண்பது என்றும் முடிவு செய்தோம். ஏனெனில், மரபான ஒழுக்கம் (அதபு) முதலில் நாம் நமது மரியாதையை ஹழ்ரத் அலீயின் மகளாரும் நபிகள் நாயகத்தின் பேத்தியுமானவருக்கே செலுத்த வேண்டும் என்பதைக் கோருவதாக டைட்டஸ் புக்கார்ட் சொன்னார். (குறிப்பு: சய்யிதா ஜைனப் அவர்கள் அடக்கப்பட்டிருப்பது அங்கே திமிஷ்க்கிலா அல்லது எகிபிதின் கைரோவிலா என்பதில் அறிஞரிடையே விவாதமுள்ளது. கைரோவில் ஒன்றாகவும் திமிஷ்கில் ஒன்றாகவும் அவரின் பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இரண்டு சமாதிகள் உள்ளன. அருகிலிருந்தும் தொலைவிலிருந்தும் மக்கட் பெருந்திரள் யாத்திரை வருமிடங்களாக அவை உள்ளன. வரலாற்றுண்மை எதுவாயிருப்பினும் அவையிரண்டுமே அவரது ”மகாம்”கள்தாம். அவற்றில் அவர் உறைகிறார், அவருடன் தொடர்புடைய பேரருளான பரக்கத்தின் வீச்சுக்கள் வெளிப்படும் மையப்புள்ளியாக அவை திகழ்கின்றன.)

 திமிஷ்கிகளால் ”சித் ஜைனப்” என்றழைக்கப்படும் அவ்விடம் பொதுவாக யாத்ரீகர்களால் நிறைந்து காணப்படும். ஆனால் அந்தக் காலை வேளையில் வினோதமாக நாங்கள் மட்டுமே அங்கு இருந்தோம். எங்களை அன்றி வேறு மக்கள் அங்கே இருந்தனர் எனில் அவ்விடத்தின் விதானத்தைப் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, கட்டடச் சுவரில் ஓடுகள் பதித்திருந்த இஸ்ஃபஹான் நகரத்துப் பாரசீகக் கைவினைஞர் மட்டுமே. பிரார்த்தனைகள் மற்றும் நீண்ட நேர அமைதியான தியானத்திற்குப் பின், அந்தக் கைவினைஞரின் பக்கம் எங்கள் கவனம் திரும்பிற்று. தற்கால உலகில் இஸ்லாமியக் கலை குறித்துத் தனித்தன்மையான பெரு நூற்களைத் தந்தவரான அந்த மேதையின் கவனத்தை அவர்களின் வேலை ஈர்த்திருந்தது. தமது தொழிலில் அந்தக் கைவினைஞர் கொண்டிருந்த ஆழமான பக்தி மற்றும் பணிவை புக்கார்ட் சுட்டிக் காட்டினார்.

Image result for fez morocco culture
Bab Jeloud , Fez, Morocco

அப்போது நாங்கள் ஃபேஸ் நகரை நினைவு கூர்ந்தோம். (மொரொக்கோ நாட்டின் இரண்டாவது பெருநகர் ஃபேஸ். 1925 வரை அதன் தலைநகராகவும் இருந்தது –மொ.பெ.)  ஸ்விட்சர்லாந்தில் உள்ள ’உர்ஸ் க்ராஃப் வெர்லாக்’ பதிப்பகத்திற்காக அவர் அப்போது தொகுத்துக்கொண்டிருந்த ”ஆன்மாவின் நகரங்கள்” (Cities of the Spirit) என்னும் நூல் வரிசையில் இஸ்ஃபஹான் பற்றியும் ஒரு நூலை அவர் எழுதவேண்டும் என்று நாங்களிருவரும் செய்திருந்த திட்டத்தையும் ஆலோசித்தோம். அழகிய நகரான இஸ்ஃபஹான் பற்றி எழுதப்பட்ட ஃபேஸ்-ஸ்டாட் தெஸ் இஸ்லாம் (Fes-Stadt des Islam) என்னும் நூலினைப் போலொரு நூல் வரவேண்டும் என்பது எனது ஆறாத ஆசையாக இருந்தது. அந்நகரையும் சென்று காண அவர் விரும்பினார். ஆனால் அக்கனவு ஒருபோதும் நினைவாகவில்லை. புக்கார்ட் போன்றதொரு இஸ்லாமியக் கலை விமரிசகரின் கண்களின் வழியே ஸஃபாவித் வம்சத் தலைநகரின் நுட்பமான மற்றும் வானுலகு அனைய மாளிகைகளைக் கண்டு பயனுறும் பேறு இவ்வுலகிற்கு வாய்க்கவில்லை. 
  
          சய்யிதா ஜைனபின் சமாதியில் பணியாற்றியிருந்த அந்த பாரசீகக் கைவினைஞரின் ஆளுமையிலும் தொழிலிலும் பாரசீகக் கலையை தரிசித்த அந்நிகழ்வு மற்றும் அந்த யாத்திரையின் பின்புதான் டைட்டஸ் புக்கார்ட்டும் நானும் அச்சமாதி (மகாம்) அமைந்துள்ள தெற்குச் சமவெளிகளை விட்டுக் கிளம்பி இப்னுல் அரபியின் சமாதி அமைந்துள்ள வட திமிஷ்கின் மலைச்சரிவுகளுக்குச் சென்றோம். பிரார்த்தனைகள் மொழிந்த பின், மரியாதையுடன் அந்தச் சந்நிதிக்குள் நுழைந்து, ஞானியும் மாபெரும் மீப்பொருண்மைவாதியுமான அவரின் சமாதியருகில் அமர்ந்தோம். தியானத்தின் நிற்சலனமும் நிசப்தமும் அதனைச் சூழ்ந்திருந்தது. தெய்வீகப் பெரு மையத்தின் எதிரொலியாகவும் விளிம்புலக வாழ்வின் சலனத் தோற்றத்தின் மீதான சாஸ்வதத்தின் பிரதிபலிபாயும் திகழ்கின்ற புனிதத் தலங்களில் ஒன்றான அந்தப் புனிதத் தலத்தில் அத்தருணத்தில் புக்கார்ட்டும் நானும் மட்டும் மீண்டும் தனிமையில் இருக்கிறோம் என்னும் உண்மை அதன் சூழலின் அமைதி மற்றும் தூய்மையை மேலும் துலங்கச் செய்தது.

Image result for tomb of ibn arabi
Tomb of Ibnul Arabi

      சூஃபித்துவத்தின் இதயத்தில் இருக்கும் மெய்ம்மையின் (ஹகீக்கத்) விகிதங்களை நான் சிந்தித்தபோது எனது சகாவின் முகத்தை அடிக்கடி திரும்பிப் பார்த்தேன். அவரின் மூடிய கண்கள் உள்முகமாக இதயத்தை நோக்கியிருப்பன போலும், அவரது மனமும் ஆன்மாவும் ஸ்படிகமாகி முன்னோக்கும் பேரறிவின் ஒளி அவரின் முகத்தில் பிரதிபலிப்பது போலும் இருந்தது. இப்னுல் அரபியை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தியதில் புக்கார்ட்டின் பங்களிப்பைப் பற்றி அப்போது நான் எண்ணினேன். அவரின் La Sagesse des prophetes, Vom Sufitum என்னும் நூலினை நான் நினைவுகூர்ந்தேன். (இப்னுல் அரபி எழுதிய அல்-ஃபுஸூஸுல் ஹிகம் என்னும் நூலின் ஃபிரெஞ்ச் மொழிபெயர்ப்பு. ‘மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்’ என்னும் தலைப்பில் தென்காசி ஆர்.பி.எம்.கனி அவர்களின் தமிழாக்கம் சில பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்தது. –மொ.பெ) இதனை ஃப்ரெஞ்சில் Introduction aux doctrines esoteriques de l’Islam, Cle Spiritual de l’astrology musulmane (இஸ்லாமிய அகமியக் கோட்பாடுகள் மற்றும் முஸ்லிம் வானியலின் ஆன்மிகம் பற்றிய அறிமுகம்) என்றும் De l’homme Universel (பிரபஞ்ச மனிதன்) என்றும் சொல்வார்கள். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நான் மாணவனாக இருந்தபோது படித்திருந்த அதன் ஒப்பற்ற முகவுரையையும் இப்போது நினைவு கூர்ந்தேன். பேராற்றலும் தெளிவும் கொண்டதொரு மீப்பொருண்மை மொழியில் இப்னுல் அரபி மற்றும் அவரது சிந்தனைப் பள்ளியின் போதனைகளின் சாராம்சத்தை விளக்குவதில் இந்த எழுத்துக்கள் எத்தனை அவசியமானவை! அந்த மீப்பொருண்மை மொழியானது முதலில் ரெனீ ஜினான் அவர்களால் வரையப்பட்டு ஃப்ரிட்ஜாஃப் ஷுவான் அவர்களால் அற்புதமான முறையில் செம்மையாக்கப்பட்டு, ஷைகுல் அக்பரின் (மகாகுரு இப்னுல் அரபியின்) போதனைகள் மீது தனித்த முறையில் புக்கார்ட் அவர்களால் பொருத்தப்பட்டது.

      பாரசீக நாட்டில் மரபான சூஃபி குருமார்களிடம் இப்னுல் அரபியின் பனுவல்களை பல்வேறு அரபி மற்றும் பாரசீக உரைகளுடன் பயில்வதில் நான் மூழ்கிப்போயிருந்த காலத்திலும், ’இப்னுல் அரபி அறிஞராக புக்கார்ட்டால் பாராட்டப்பட்ட டி.இஜுட்சு மற்றும் ஹென்றி கார்பின் ஆகியோருடன் அந்நூற்களை விரிவாக விவாதித்த காலத்திலும் புக்கார்ட்டின் சாதனையை நான் முழுமையாக உணர்ந்தேன். சூஃபித்துவ மரபு மற்றும் சூஃபித்துவத்தின் பரக்கத் (அபிவிருத்தி) ஆகியவற்றிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடாமல் அக்பரிய மீப்பொருண்மையை அதன் இதயத்தை அடைந்து சமகால மொழியில் அதை வெளிப்படுத்தியதில் புக்கார்ட் வெற்றி கண்டிருக்கிறார். அவரின் மொழிபெயர்ப்புக்களும் உரைகளும் ஒரே சமயத்தில் மரபுத் தன்மை கொண்டதாகவும் வாழும் ஞானமும் ஒளியும் நிறைந்ததாகவும் இருக்கின்றது. அவ்வகையில், மரபுப்பள்ளியைச் சேர்ந்தவர்களாகத் தம்மைக் கோரிக்கொள்ளும் சிலரின் பகட்டான வறட்டு மொழிபெயர்ப்புக்களை விட்டும் அவை தெளிவாக வேறுபட்டுள்ளன. அந்தப் போலிகள் சூஃபித்துவத்தை இப்னுல் அரபியிலும், இப்னுல் அரபியை செயலற்ற மீப்பொருண்மையின் சிந்தனைவாதத்திலும் குறுக்கிவிடுகின்றனர். அவர்களின் இச்செயல், இப்னுல் அரபியின் போதனைகளிலிருந்து வெளிப்படும் ஜீவ பிரசன்னத்தை விட்டும் வெகுதூரம் விலகியுள்ளது. புக்கார்ட்டின் எழுத்துக்களிலும் பாரசீகத்தில் நான் பயின்ற இப்னுல் அரபி வழியின் மரபான சூஃபி குருமார்களிடத்திலும் அந்த உயிர்த்துடிப்பை நான் கண்டிருக்கிறேன்.

      இப்னுல் அரபிச் சிந்தனைப் பள்ளியில் பின்னர் நான் அடைந்த அனுபவங்கள் திமிஷ்கில் அவரது சமாதியில் டைட்டஸ் புக்கார்ட்டுடன் நான் அமர்ந்திருந்த நினைவை அவ்வப்போது கிளர்த்தியுள்ளன. ஆன்மிக மரபுகள் அனைத்தின் இதயத்தில், குறிப்பாக சூஃபித்துவத்தில் உறைகின்ற சத்தியத்தை தியானித்தபடி தன்னை மறந்து அங்கே புக்கார்ட் அமர்ந்திருப்பதைப் பார்த்தது, புனிதப் புவியியலால் தீர்மானிக்கப்படுவதும் மாபெரும் ஞானியரின் சமாதிகளுடன் பொதுவாக அடையாளம் காணப்படுவதுமான குறிப்பிட்ட மையங்களில் மர்மமான முறையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் சத்தியத்தின் முன் ஸ்படிகமெனத் திறந்தவராக, தெய்வீகப் பிரசன்னத்தின் முன் பணிந்தவராக அவரைக் கண்டது, அல்-ஹிக்மா என்னும் ஞானத்தை வெறுமனே நூலறிவாக விளங்கியிருப்பதற்கும் அனுபவித்தறிவதற்கும் இடையிலுள்ள அகண்ட இடைவெளியை உணர்த்துவதாக இருந்தது. சூஃபித்துவ உண்மையை உணராமலேயே இப்னுல் அரபியைப் பற்றி எழுதிக்கொண்டு கராரான மரபாச்சாரத்தைக் கோருவோருக்கு மாற்றமாக புக்கார்ட் தான் எழுதியதன் உண்மையை வாழ்ந்தார். அவரிலிருந்து வெளிப்பட்ட தனித்த அறிவொளி அவர் படித்த பிரதிகளின் இதயம் வரை துளைத்து, உண்மையானது மனத்தின் தளத்திலிருந்து இதயத்தின் மையத்திற்கு இறங்கி முழுமையாக அனுபவப்பட்டு ஊர்ஜிதமான ஒருவரால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய முறையில் அவற்றின் அர்த்தங்களை வெளிச்சப்படுத்தியுள்ளார்.  அசாதாரணத் தெளிவுள்ள துளைக்கும் கூர்மதியுடன் ஒழுக்கமும், எதன் கோட்பாட்டு அம்சங்களை அத்தகைய ஆழத்துடனும் புரிதலுடனும் அவர் கற்றாரோ அந்த பேருண்மையின் பிரசன்னத்தால் நிலைமாற்றம் பெற்ற ஆன்மாவும் கொண்டதொரு மகானின் பண்புகளை புக்கார்ட் அவர்கள் இப்னுல் அரபியின் சமாதியில் வெளிப்படுத்தினார்.

      சூஃபித்துவ வரலாற்றில் தனித்தன்மையதாய் இருப்பதும் பரந்த திரைச்சீலையில் பற்பல துணைக்கூறான போதனைகளின் ஊடிழைகளுடன் நெய்யும்படியாய் இப்னுல் அரபிக்கு விதிக்கப்பட்ட மிகச்சிறந்த மீப்பொருண்மைத் தத்துவத்துடன் ஒரு சிறப்பு நெருக்கத்தை உணர்ந்தவர்களாக அந்த ஞானியின் சமாதியை விட்டுத் திரும்பி வந்தோம்.

      புக்கார்ட் ஜெருசலேமுக்குக் கிளம்பினார். இப்னுல் அரபி விரிவாக விளக்கி எழுதியுள்ள நபிகள் நாயகத்தின் இரவு விண்ணேற்றம் (மிஃராஜ்) நிகழ்ந்த இடத்தைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, எவரைப் பின்பற்றி புக்கார்ட்டுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதோ அந்த இறைத்தூதரும் ஏகத்துவத்தின் பிதாமகருமான இப்றாஹீம் நபி அவர்களின் அடக்கத்தலத்தை ஹிப்ரானில் தரிசிக்க வேண்டியும்தான். (ஜெருசலேமிற்கு 30.கி.மீ தெற்கே ஜிபாலுல் ஃகலீல் என்னும் ஜூதி மலையில் அமைந்துள்ள இந்நகரம் அரபியில் அல்-ஃகலீல் என்று அழைக்கப்படுகிறது. இப்பெயர் இப்றாஹீம் நபியின் சிறப்புப்பெயர்தான். அணுக்கத் தோழன் என்று பொருள். யூத மொழியில் ஹிபர் என்றாலும் அதே பொருள்தான். அச்சொல்லிலிருந்தே ஹிப்ரான் என்னும் பெயரை இவ்வூர் அடைந்திருக்கிறது. டைட்டஸ் புக்கார்ட் பின்னாளில் இப்றாஹீம் இஸ்ஸுத்தீன் என்று இஸ்லாமியப் பெயர் சூடினார்.  – மொ.பெ.)

Image result for titus burckhardt
Titus Burckhardt in his last years

      இந்நெடும் பயணத்தில் உடன்வருமாறு அவர் என்னை அழைத்தார். ஆனால் எதிர்பாரா நிலையில் வந்த பல அலுவல்களின் அழுத்தத்தால் நான் டெஹ்ரானுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. சில மாதங்களிலேயே ஜெருசலேம் மற்றும் அல்ஃகலீல் (ஹிப்ரான்) ஆகியவற்றின் நிலை தாறுமாறாகிவிடும் என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. தனது பயணத்தின் தனிப்பட்ட அருள்கள் பற்றியும், அவை எல்லாம் அந்தவொரு அற்புத நாளில் திமிஷ்கில் சய்யிதா ஜைனப் மற்றும் இப்னுல் அரபியின் சமாதிகளில் விண்ணிலிருந்து நாங்கள் பெற்ற அருளாசிகளின் தொடர்ச்சியே என்பது பற்றியும் பின்னால் அவர் எனக்கு எழுதினார்.

      பல வருடங்கள் கழித்து, நாங்களிருவரும் ஒன்றாக கஃபாவைச் சுற்றிவந்த போது பெரு மையத்தின் பரக்கத்திற்கும் (அபிவிருத்திக்கும்) அதனைப் பிரதிபலிக்கும் சிறு மையங்களுக்கும் இடையிலான உறவிணைவின் எதார்த்தம் பற்றி மீண்டும் பேசினோம். ”மக்கத்துத் திறப்புகள்” (ஃபுத்தூஹாத்துல் மக்கிய்யா) எழுதிய அந்த மகானின் (இப்னுல் அரபியின்) சமாதிக்குச் சென்றதன் அருளாசிகள் வந்தன.

      டைட்டஸ் புக்கார்ட் இப்போது இந்த நிலையற்ற இடத்தை விட்டு ஆன்மாவின் உலகிற்குச் சென்றுவிட்டார். ஆனால், அனுபவ ஞானத்தின் விளைச்சலான அவரது எழுத்துக்கள் இன்னமும் பொதுவாக சூஃபித்துவத்திலும் குறிப்பாக இப்னுல் அரபியிலும் அக்கறையான ஈடுபாடு கொண்டோரின் பாதையைத் தனித்தன்மையான முறையில் வெளிச்சப்படுத்தி வருகின்றது. இறைவன் அவனது தேர்ந்த அருளை அவரின் மீது பொழிவானாக. ரஹிமஹுல்லாஹ்.


Friday, April 28, 2017

செடியன்

Image result for dicotyledon seedling

நெகிழிக் குழாய் கொண்டு
தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச ஆயத்தமாகையில்
கண்டேன் அதை

மதிலினும் உயரமாய் வளர்ந்துவிட்ட
சாமரப் புல்லின் நிழலடியில்
நின்றிருந்தது அது

ஒளிவிட்டுக் குழைத்த வண்ணத்தால்
இழுக்கப்பட்ட சிறு கோடு போல்
சுட்டுவிரல் உயரச் சிறு பசுஞ்செடி

சிசுவின் சருமம் போலும்
பொடித் தளிர்களிரண்டு
அதன் உச்சியில்

இசை கேட்கும் செடி போலும்
செவிப்பொறிகள் மாட்டியது போல்
பிளந்த விதைப் பாதிகள் வைத்திருந்தது

இறைவா!
விதைகளைப் பிளக்கும் நின்
கைவண்ணம் தரிசித்திருந்தேன் அதில்

மலரின் ஸ்பரிசத்தினும்
நீரின் சாயலினும்
குழந்தையின் மூச்சினும்
மெல்லிய ஞானத்தால்
அப்படிப் பிளந்திருக்கிறாய் நீ

எல்லாம் வல்ல ஏகன் என்றும்
சர்வ வல்லமை கொண்டோனென்றும்
நினைத் துதிக்கும் மானுடம் எனினும்
அச்செடியை முன்னோக்கிய தருணத்தில்
எல்லாம் மெல்ல இறைவா!
சர்வ மெல்லோனே!
என்றுனைத் துதித்தேன்

”அல்லாஹ் மெல்லோன்
மென்மையை நேசிப்போன்”
என்றார் நபியும்


ஆதன் ஔவை

Related image

’ஊரினும் பெரிய மேகம் பார்’ என்று
அழைத்துக் காட்டினேன் அவளிடம்
மேகங்களற்ற தெளிவானம்தான்
தனக்குப் பிடித்ததென்று சொல்லிப் போனாள்

அவள்
என் இடதுபாகத்து அத்திப்பூவை
என் முழுமைக்காண இணை
எனினும்
ரஸனை பேதங்கள் இல்லாமலா போகும்?

ஆதமும் ஹவ்வாவும்
இறக்கப்பட்ட ஸ்தலங்களின் பேதமது

வரனுறல் அறியாச் சோலையென்று புளகித்துக்
கபிலன் உலவியிருந்த குறிஞ்சித் திணை
என் மனத்துக்கினிய நிலம் எனில்
பெருங்கடல் தொட்டு நிற்கும் நெய்தலே
அவளின் நெஞ்சுக்கு நனி இனிது

மண்ணில் நின்றபடி தூவெளியைத் தீண்டலாகும்
ஒளி நனையும் உச்சிகளே நாட்டம் எனக்கு
அறியா ஆழம் அனுப்புகின்ற அலைகள்
மீண்டும் மீண்டும் தொட்டிருக்க வேண்டும் அவளுக்கு

பால்வெண் மேகமொன்று

Related image

பெரிதென்று என் விரல் சுட்ட முடிந்த
சிருஷ்டிகள் யாவினுக்கும் பெரியதாய்
அசைவற்று மிதந்திருந்ததொரு வெண்முகில்

பச்சை மாமலைக்கு மேல்
அதற்கான கம்பளிப் போர்வை போல் இருந்தது அது

மத்தியக் கிழக்கின் பழங்கவிஞர் யாருமிருந்தால்
நோவாவின் கப்பல் என்றதை வருணித்திருப்பார்

அதைச் சுமந்து வருதலாகட்டும்
இங்கிருந்து நகர்த்திவிடுதலாகட்டும்
காற்றால் ஆகாத காரியம் என்பதைத்
தெளிவாகச் சொல்லி நின்றது அதன் பேருரு

செம்மறிக்கூட்டம் போல் மேகங்களை
மேய்த்திருக்கும் ஓர் அந்தரங்கக் கைதான்
அதனை இங்கே கொண்டு வந்து
இப்படி நகராமல் கட்டிவைத்திருக்கிறது

ஒரு சிறு ஒலிச்சலனமும் இன்றி
மௌனமாய்த் திரண்டு உருப்பெற்றுள்ளது அது

எதுவுமே நடவாதது போல் தோன்றியுள்ள இப்பிரம்மாண்டத்தை
எதுவுமே நடவாதது போல் கவனியாதிருக்கும் மக்கள்திரள்
எதுவுமே இவர்களுக்கு ஆவதில்லை எனில் வியப்பென்ன?

தேவையொரு சிசு மனத்தின் விசும்பல்...
காய்ந்த மண்ணாய் வெடித்திருக்கின்ற
வாடிய பயிரெனத் துவண்டிருக்கின்ற
மலர் காணாப் பட்டாம்பூச்சியாய் நொந்திருக்கின்ற
வயல் சாகக் காணுமொரு உழவனின் உளைச்சலை
உணர்ந்து நையுமொரு நெஞ்சின் பிரார்த்தனை

அது சென்று தொட வேண்டும்
இப்போதே
மழைப்பால் பெருக்கிடக் காத்திருக்கும்
ஒற்றைத் தாய்முலையாய்த் திறந்துள்ளது அது

முஹம்மதின் பசித்த உதடுகள் இல்லாது
அலிமா முலையூட்டுப் படலம் இல்லை