Saturday, May 20, 2017

காடு பூத்த தமிழ் நிலத்தில்...

Related image

இவ்வருடக் கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. ஏறத்தாழ கடந்த ஒரு மாத காலமாகக் கம்பம் என்னும் ஊரில் இருக்கிறேன். இந்தக் குறிஞ்சித் திணை நிலத்தில் பிறந்தாளான என் சகதர்மினி நான் பிறந்த திருச்சியில் கோடைப் பருவம் கொள்ளும் உக்கிரம் தாளாள் ஆதலால், கடந்த பத்தாண்டுகளாக ஒவ்வொரு மே மாதத்திலும் இங்கே வந்திருப்பது வழக்கம். குடமிடும் உள்ளங்கைகளின் நடுவில் ஆடாது நின்றொளிரும் அகல்விளக்கின் சுடர் போல மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள ஊரிது. கேரள இடுக்கி மாவட்டத்தின் விளிம்பில் இருப்பது.

      இந்தத் தடவை விடுமுறை வாசிப்புக்கென்று நூற்களைத் தேர்ந்த போது குறிஞ்சி நிலம் சார்ந்த புனைவுகளை மனம் நாடிற்று. சென்ற இருமாதங்களுக்கு முன்புதான் ஜெயமோகன் எழுதிய ”காடு” புதினத்தைப் படித்து முடித்திருந்தேன். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசனையாலமையும் ஒரு அகநிலம் இருக்கும். Interior Landscapes என்று ஏ.கே.ராமானுஜம் குறிப்பிடுவது போல் அது மனம் வரித்துக்கொண்ட நிலம். அந்த அகநிலம் ஒருவர் பிறந்த புறநிலமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. குறிஞ்சியில் பிறந்த என் சகதர்மினிக்கு நெய்தல் நிலமே அற்புதம். அலையாடும் கடல் கண்டு தீராது அவளுக்கு. மருதத்தில் பிறந்து வளர்ந்த எனக்கோ குறிஞ்சித் திணையின் மீது பெருகி வந்தபடி இருக்குமொரு மயக்குள்ளது. மரபணுவிலேயே பதிந்து என்னிடம் வந்த ரசனையாக அது இருக்கக்கூடும். ஐந்து தலைமுறைக்கு முன்னிருந்த பெருவணிகரான எனது முதுபாட்டனார் மருத்துவப் பயன் கருதி மலையிலும் கடற்கரையிலும் ஓய்வில்லங்கள் கட்டியிருந்தார். சஞ்சீவிப் பர்வதத்தின் மென்காற்று மேனியைத் தழுவும் வகையில் நெடுஞ்சாளரங்கள் வரிசையாக வைத்த ஓய்வில்லம் கன்னியாகுமரியில் இருந்தது. என் பால்ய பருவத்தில் சென்றிருக்கிறேன். அதுபோல், மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் நடுவில் எழுந்துள்ள சிறுமலையில் தோட்டங்களும் ஓய்வில்லமும் இருந்துள்ளது. என் தாய் தனது சிறுவயதில் அங்கே சென்றிருக்கிறார். இன்றளவும் எம் குடும்பத்தினரின் ஒரு வளைவு அங்கே இருப்பதாகச் சொல்கிறார்.

 ”காடு” நாவல் தந்த பித்து இன்னமும் தணியாத நிலையில் இங்கே வந்தேன். இயற்பியலாளர் ஃப்ரிட்ஜாஃப் காப்ரா எழுதிய “The Science of Leonardo” நூலைப் பாதி படித்திருந்த நிலையில் கொண்டு வந்தேன். அத்துடன், மார்ட்டின் லிங்க்ஸ் எழுதிய “சூஃபியிசம் என்றால் என்ன?” (தமிழில் புன்யாமின்), அரவிந்தன் நீலகண்டன் மற்றும் சாந்தினிதேவி ராமசாமி இணைந்தெழுதிய “இந்திய அறிதல் முறைகள்”, ஜெயமோகன் எழுதிய காவியப் பெரும்புதினமான “விஷ்ணுபுரம்”, மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதி கே.வி.ஜெயஸ்ரீ தமிழாக்கம் செய்துள்ள புதினமான “நிலம் பூத்து மலர்ந்த நாள்” ஆகிய நூற்களையும் எடுத்துவந்தேன். விஷ்ணுபுரம் பதினைந்து நாட்களை எடுத்துக்கொண்டது. 14,15.05.2017 ஆகிய இரு நாட்களில் “நிலம் பூத்து மலர்ந்த நாள்” புதினத்தை வாசித்து முடித்தேன்.

Image result for nilam poothu malarntha naal tamil

இக்காலகட்டத்தில் மூன்று முறை கேரள மலைப்பகுதிகளில் பயணித்து வந்ததும் உள்ளும் புறமும் ஒத்திசைந்து வாசிப்பனுபவத்தை ஆழப்படுத்தின. மலையாள மொழியும் கேரள மலைப்பகுதிகளும் என்றைக்குமாக என்னை ஈர்த்து வந்துள்ளன. (சூஃபி வழியில் எனது குருநாதரின் குருநாதரான “ஜுஹூரிஷாஹ்” அவர்களின் அடக்கத்தலம் (தர்கா) மலப்புரத்தில் கருவாரக்குண்டு என்னும் சிற்றூரில் அமைந்துள்ளதும்கூட தற்செயல் அல்ல என்பதென் உள்ளுணர்வு.) அந்த ஈர்ப்பிற்கான காரணங்கள் கேட்பீராயின் இரண்டினைச் சொல்வேன்: இயற்கை மற்றும் தமிழ்.

இத்தகைய ரசிகனான என் கையில் தன் மரபின், பண்பாட்டின் வேரினைத் தமிழில் தேடியடைந்திருக்கும் ஒரு மலையாளப் புதினத்தின் நல்ல தமிழாக்கம் கிடைத்தால் எத்தகைய செல்வம் கிடைத்ததாக மகிழ்ந்திருப்பேன் என்பதை நீங்கள் உய்த்துணரவே என் தனிப்பட்ட பின்னணியை சற்றே நீளமாக எழுதலாயிற்று. ஆம், “நிலம் பூத்து மலர்ந்த நாள்” நாவல் கிடைத்ததை, அந்நாவலில் வரும் பாணரும் கூத்தரும் பொருநரும் புரக்கும் வண்மை திகழ் மன்னனிடம் பரிசு பெறுகையில் அடையும் உவகையோடே நான் கொண்டாடுகிறேன்.

ஞான் மலையாளம் படித்தறியேன். சரளமாகப் பேசவும் வராது. ஆசையால், பேசுவோரின் வாய் பார்த்திருப்பதுண்டு. அந்த மொழியோட்டத்தில் விரவியுள்ள தூய தமிழ்ச்சொற்களைப் பிடித்தென் மனதில் அடைகாப்பதில், ஓடை நீர்க் குடைந்தாடி சிறுமீன் பிடித்து மகிழ்வதான விளையாட்டின் உவகை கொள்வேன். அத்தகையதொரு செயற்பாடு இம்மொழியாக்கத்திலும் நிகழ்ந்துள்ளதாக நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார்: “மலையாளம் என்பது ஆதித் தமிழே என்பதறிவேன். மலையாளச் சொற்களை, அதன் ஆதித் தமிழ்ச் சொற்களைக் கண்டெடுத்து மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்துவது இந்த நூலின் வலு.” இம்மொழியாக்கம் எந்த அளவு மூலத்துடன் ஒத்திசைந்து நிகழ்ந்துள்ளது என்பதையும் அவர் சொல்கிறார்: “இஃதோர் மலையாள மூல நாவலின் தமிழ்ப் பெயர்ப்பு. மூலத்தின் இதன் தலைப்பு ‘நிலம் பூத்து மலர்ந்ந நாள்’. தமிழாக்கத்தில் கே.வி.ஜெயஸ்ரீ அளித்த தலைப்பு ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’. தலைப்பின் இயல்பான மொழிமாற்றம் போலவே, மொத்த நாவலின் மொழிமாற்றமும் எந்த நெருடலும் இன்றி, பூ உதிர்வது போல நடந்திருக்கிறது.”

Image result for manoj kuroor
manoj kuroor photo on back side of the book.

தலைப்பை நோக்க, மலையாளத்திற்கும் தமிழுக்கும் ஒரேயொரு எழுத்துத்தான் வேறுபாடு. சொல்வதெனில், தமிழாக்கத்தின் தலைப்புக் கூட ‘கே.வி.ஜெயஸ்ரீ அளித்த தலைப்பு’ அல்ல. அது மனோஜ் குரூர் தந்த தலைப்பேதான். புனத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய “ஸ்மாரகசிலகள்” (நினைவுக்கற்கள்) என்னும் புதினத்தை குளச்சல்.மு.யூசுப் “மீஸான் கற்கள்” என்று தமிழில் தலைப்பிட்டது போன்று அல்ல இது. ”பாத்துமாயுடே ஆடு” என்பதும் ”தோட்டியுடே மகன்” என்பதும் ”செம்மீன்” என்பதும் மலையாளம் எனில் மலையாளம், தமிழெனில் தமிழே! அதுபோன்றே இந்நூலின் தலைப்புமாம்.

மலையாளம் என்பது ஆதித் தமிழே என்று நாஞ்சில் நாடன் சொல்கிறாரே, இதனைப் பிற திராவிட மொழிகள் நோக்கிச் சொல்ல முடியாமை நினையத் தகும். அந்த உறவல்லவா இந்நாவலின் மூலத்தையும் மொழியாக்கத்தையும் சாத்தியப் படுத்தியுள்ளது? அவ்வுறவு மேலும் மேலும் இத்தகய கொடைகளைத் தரவேண்டும் என்பதென் ஆசை. கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு என் மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.

இப்புதினம் பற்றி குறுஞ்செய்தி கொண்டு நண்பருக்கு அறிமுகப்படுத்த வேண்டுமெனில் இதன் முன்னுரைகளின் தலைப்புக்களையும் சில வரிகளையும் தந்தாலே போதும், இவை போல:
“மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்”
“நாவலின் களம் பாணர் கூத்தர் பொருநர் வாழ்வியல் மரபு”
”ஆதித் தமிழ் மண்ணின் வாழ்வு”

ஒரு புதினத்தை இரண்டு அணுகுமுறைகளில் அசை போடலாம். ஒன்று அது தரும் அகவெழுச்சியின் திசையில். மற்றொன்று அறிவியங்கும் கோட்பாடுகளின் திசையில். இப்புதினத்தை வாசிப்பதற்கென்று நானொரு சூழலைத் தேர்ந்துகொண்ட போதே அகவெழுச்சியின் அணுகுமுறையிலேயே இதனை வாசிப்பதென்று முன்முடிவாகிவிட்டதை இப்போது அவதானிக்க முடிகிறது. வியப்பேதுமில்லை, ஜெயமோகன் தன்னிலையாகச் சொல்வதும் இதுவாகவே இருக்கக் கண்டேன்: “இந்த நாவலைத் தத்துவப் போக்கிலும், உணர்வு நிலையிலும் பல்வேறு விதங்களில் விவரிக்கவும், விவாதிக்கவும் என்னால் முடியும். ஆனால் இதொரு பாவனை மட்டுமேயெனவும், வெறுமொரு கனவு மட்டுமேயெனவும் சிந்திக்கத்தான் இப்போது விரும்புகிறேன்.”

இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், வாசிக்கும்போதே மனம் தன் ஓரவிளிம்பில் குறித்து வைத்துக்கொண்ட சில பகுதிகளின் மீது திறனாய்வு நோக்கில் விவாதிக்கவியலும். அது தேவைதானா என்றெழும் எண்ணத்தையும் மீறி சில சொல்லத்தான் வேண்டும். அவை கராரான விமரிசனங்கள் அல்ல. விளக்கம் தேடும் ஐயப்பாடுகள் என்று சொல்லலாம்.

Image result for jeyamohan

      ”கொற்றவை” நாவல் பற்றி விமர்சகர் ஞானியுடனான உரையாடலை நினைவு கூர்கிறார் ஜெயமோகன். அவர் ஞானியிடம் சொன்னதிலொரு பகுதி: “பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு, பல்வேறு வகையிலான போர்களால் குலைந்துபோன தமிழ் நிலப்பரப்பில் பிறந்தவர் நீங்கள். அன்னியரால் தீண்டப்படாத பரிசுத்தமான தமிழ் நிலம் கேரளம்தான்.” இவ்வரிகளில் உள்ள அவதானத்தை உருவாக்கிய வரலாற்றுப் பின்னணி என்ன என்பது ஆய்வுக்குரிய ஒன்று. அதே சமயம், இதனைத் தொடர்ந்து வரும் பத்தியில் ஜெ.மோ இப்படிச் சொல்கிறார்: “இன்றைய மலையாளிக்கு தமிழின் பழமைக்கு வருவதற்கான முக்கியமான தடையென்பது, அவன் பிறந்து விழும், சுவாசித்து வாழும் இன்றைய மலையாளமே”. இவ்விரு கருத்துக்களும் முரண்படுவதாகத் தோன்றுகிறது. முற்கருத்து உரைப்பது போல், கேரளம் என்பது அன்னியரால் தீண்டப்படாத பரிசுத்தமான தமிழ் நிலம்” என்றிருப்பின், தமிழின் பழமைக்கு வருவதற்கான முக்கியமான தடை எப்படி உருவாயிற்று? “அவன் பிறந்து விழும், சுவாசித்து வாழும் இன்றைய மலையாளமே” அந்தத் தடை என்று சொல்லும் வரி அதற்கான விடையைத் தருகிறதா? ”மலையாளம் என்பது ஆதித் தமிழே” என்று நாஞ்சில் நாடன் சொல்வதற்கும் இந்த வரிக்கும் உள்ள தொடர்பும் முரணும் என்ன? மலையாளம் என்பது ஆதித் தமிழ் எனில் இன்றைய மலையாளம் எப்படி தமிழின் பழமைக்கு வரவிடாது தடுக்கும் தடையாயிற்று? இன்றைய மலையாளம் என்பதுதான் என்ன? ஆம். நேற்றைய மலையாளம் என்பது பழந்தமிழ். இன்றைய மலையாளம் என்பது சம்ஸ்க்ருதம் அவாவிய தமிழ். இது அம்மொழி காட்டும் நிதர்சனமான உண்மை அல்லவா? எனில் அங்கேயும் ”படையெடுப்பு” ஒன்று நிகழ்ந்தேயுள்ளது. ஜெயமோகன் சூசகமாகச் சுட்டிக்காட்டும் இந்தத் தடையை மலையாளிகள் தகர்க்கவேண்டும் என்பதை இந்நாவல் எதிர்நோக்குகிறதா? அத்தகைய உளப்பாங்கை அவர்களின் கூட்டுநினைவில் இந்நாவல் சிறிதேனும் உருவாக்குமா? இந்நாவலை மலையாளிகள் பெரிதும் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறதே, அந்தக் கொண்டாட்டம் இந்நாவலை இந்நோக்கில் உள்வாங்கிச் செய்யப்படுகிறதா? இதனால், சேரருக்கும் ’பாண்டி’க்குமான உறவில் கனிவு உண்டாகுமா? அத்தகைய பெரும் விச்சு இந்த நாவலால் அங்கே நிகழ்ந்திருக்கிறதா? கட்டப்பனையில் அல்லது வண்டிப்பெரியாறில் ஏதேனுமொரு கடையில் கேட்டால்கூட அவர்களுக்கு இந்நாவலைப் பற்றித் தெரிந்திருக்குமா? (இங்கே தமிழின் நிகழ்காலப் பெரும்படைப்புக்கள் பற்றித் தமிழ்ப் பேராசிரியர்களுக்கே ஒன்றும் தெரியாதே?) என்பன போன்ற கேள்விகள் என் மனத்தில் எழுந்த வண்ணமிருந்தன. எனினும் இவற்றையெல்லாம் மிகவும் தீவிரப்படுத்திக்கொள்ள நான் முனையவில்லை.

      ”நாவலின் களம் பாணர் கூத்தர் பொருநர் வாழ்வியல் மரபு” என்று நான் எடுத்துக்காட்டியிருக்கும் வரி நாஞ்சில் நாடன் அவர்கள் நல்கியுள்ள முன்னுரையில் இருக்கிறது. அந்தக் கலைஞர்களுடன் பரணர் கபிலர் ஔவை என்னும் முப்பெரும் புலவர்களையும் பாரி நன்னன் அதியமான் ஆகிய மன்னர்களையும் மாந்தர்களாகக் கொண்டு இந்நாவலின் கதைப்பரப்பு விரிந்துள்ளது. இந்தன் காலம் சங்க காலம் என்று குறிப்பிடப்படுவது. ஒரு தமிழ்பேராசிரியன் என்ற வகையில், சங்கப் பாடல்களைப் பயிற்றுவிப்பவன் என்னும் நிலையில், இச்சொற்றொடர் என் கவனத்தை நிறுத்திற்று. ”குறுந்தொகையில் விளிம்பு நிலை மாந்தர்கள்”, “அகநானூற்றில் விளிம்புநிலை மாந்தர்கள்” என்றெல்லாம் தலைப்பு வைத்துக்கொண்டு நிகழ்த்தப்பெறும் ஆய்வுகள் என் மனக்கண் முன் தோன்றி ஒரு கணம் அச்சமூட்டின. இந்நாவல் இத்தனை உயிர்ப்புடனும் ஊக்கத்துடனும் அணுகியிருக்கும் இக்களத்தினை அத்தனை வரட்டுத்தனமாகவும் அணுகமுடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுக்கள் நமது உயர்கல்விக் கூடங்களில் குவிந்துகிடக்கலாம். தமிழனே தமிழின் பழமைக்கு வருவதற்குத் தடையாக இருப்பது எது? என்று நானும் அப்போதெல்லாம் நொந்து சிந்தித்திருக்கிறேன்.

      பாணர் கூத்தர் பொருநர்... இந்தச் சொற்றொடரை வாசிக்கும்போதே அகத்தில் அவர்கள் எழுந்து நடந்து வர ஆரம்பித்திருந்தார்கள். இவர்கள் எங்கிருந்து எழுந்து வருகிறார்கள்? அதற்கான விடை என் தேகம் முழுவதும் கரந்தும் பரந்தும் இருக்கும் மரபணுக்கள் அன்றி வேறெவை? மதத்தால் நானொரு முஸ்லிம் ஆனாலும் என் மரபணு என்பது, இறைவன் எனக்கருளிய இன-மொழி அடையாளம் என்பது தமிழல்லவா? இதனைச் சொல்லத் தயங்கினேன் எனில் அதுவே இறைஞானத்தை மறுப்பதாகாதா? இந்த ரீதியில் நான் பலகாலம் பலமுறை ஆழ்ந்து எண்ணியிருக்கிறேன். “இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்னும் பிரபலமான வரி இவண் ஞாபகம் வருகிறது. அத்துடன், “இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா?” என்று கவி.கா.மு.ஷெரீஃப் எழுதிய நூலும்.

      தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன் நான். ஒரு தமிழ்முஸ்லிமுக்கு அவனது உபநினைவுப் புலத்தில் வரலாற்றுப் பின்னோக்கு என்பது அவனது இன-மொழி அடையாளத்தின் வழியே தொல் தமிழ் நிலத்திற்குச் செல்வதாக அல்லாமல் சமய அடையாளத்தின் வழியே நபிகள் நாயகம் வாழ்ந்த அரபு நிலத்திற்குச் செல்வதாகவே பெரும்பான்மையும் நிகழ்கிறது. உதாரணமாக, உறவினர் வீட்டுத் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டேன். திக்கித் திக்கிப்பேசும் ஒரு நபரைப் பற்றி ஒருவர் விசாரித்தார். “அதாங்க, மூசா அலைஹிஸ்சலாம் மாதிரி பேசுவாரே, அவருங்க?” என்றார். (வள்ளல் எனில் தமிழ் முஸ்லிமுக்கு ஹாத்திம் தாயீ, தமிழ்ஹிந்துவுக்கு கர்ணன் என்றால் கடையெழு வள்ளலகள் எங்கே தொலைந்தார்கள்?) இங்கே, மத அடையாளங்களைத் தாண்டி தமிழடையாளங்களை முன்வைத்த உரையாடல்கள் தமிழரிடையே நிகழவேண்டிய தேவை பெரிதுள்ளது.

      என் மச்சானும் சக ஆன்மிகச் சீடருமான சையத் இப்றாஹீம் பிலாலியுடன் இக்கோணத்தில் முன்பு உரையாடியதும், ”தமிழனாகிய நான் எனது தொன்மையை அறிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் சொன்னபோது, அப்போது அண்மையில் நான் வாசித்துப் போற்றிய தேவநேயப் பாவாணரின் ”தமிழர் மதம்” என்னும் நூலை அவருக்கும் படிக்கத் தந்ததும் ஓர்மையாகிறது. அவர் கேட்ட அந்தத் தொன்மைதான் எனது மரபணுக்களில் நாம் சுமந்திருப்பது. அதை உணர்ந்திருப்பதால்தான் சங்க இலக்கியப் பரப்பெங்கும் என்னைக் காட்டும் ஆடிகள் நிரம்பியுள்ளன. அப்புலவரிலும் கலைஞரிலும் அரசரிலும் நான் இருக்கிறேன். இந்நாவலின் குலும்பனாகவும் சந்தனாகவும் மயிலனாகவும் பெரும்பாணனாகவும் பாரியாகவும் நன்னனாகவும் அதியமானாகவும் நான் உருக்கொண்டு வாழ முடிகிறது. என் பாரியாளின் காதற் கனிவின் மழலைக் குழைவில் ”காடு” காண் நீலியை ரசிக்கவும், இந்நாவலில் சீரையின் உணர்வெழுச்சி வருணிக்கப்படும் பக்கங்களில் சிறுமியான என் மகளின் நீர்நிறைக் கண்கள் எரியும் சினமேறிய முகத்தையே என் மனம் பிரதிபலித்துக் காணவும் செய்வததுவே.

      மனோஜ் கரூரின் இந்நாவலை “மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்” என்று குறிப்பிடும் நாஞ்சில் நாடன், “தமிழில் எழுதப்படும் இங்கிலீசு நாவல்கள்” என்பவற்றையும் ஒரு பிடி பிடிக்கிறார். முனைவர் பட்டத்துடன் சமாதி நிலை அடைந்துவிடும் தமிழ்ப்பேராசிரியர்களையும் அவரின் அங்கதம் தாளிக்கும் இடங்களில் கும்பமுனி அவரில் விழித்துக்கொண்ட சன்னதத்தைக் காணமுடிகிறது. (சத்தியம் சாற்றுகிறீர் கும்பமுனி! தமிழ்ப்பேராசிரியன் என்னும் நிலையில் நீமுரைப்பதை யாம் நன்கறிவோம்!) மொழிபெயர்ப்பில் இந்நாவலை வாசிக்கும்போது ஜெயமோகன் எழுதியிருப்பதைப் போன்றே பல இடங்களில் மயக்கமுணர்ந்தேன். சான்றாக ஓரிடம்:

      ”பிறந்து விழுந்த குழந்தையின் கண்கள் உலகத்தைப் பார்ப்பது போல வெளிச்சம் நீர்ப்பரப்பின்மீது சுழன்று நடந்தது. இடையில் ஒரு மின்னல் அடிப்பரப்புவரை பாய்ந்தபோது பெரியதொரு கண்ணாடி உருளியாக ஆறு ஒளிர்ந்தது. ஆற்றங்கரை மரங்கள் தெளிவான நீர்ப்பரப்பில் தலைகீழாக நிற்பதைக் கண்டு சீரை சன்னமாகச் சிரித்தாள்.”
      நீரென்பது கண்ணாடியாகும் இப்படிமக்காட்சி ஜெயமோகனின் புனைவெழுத்தில் மீண்டும் மீண்டும் வருகின்ற ஒன்று. மட்டுமல்ல நிலத்தில் கிடக்கும் நீரில் வானம் வரை அனைத்தும் தலைகீழ்ப் பிம்பமாதல் என்பதுமொரு தத்துவத் தொனிப்புடன் சொல்லப்படுவதையும் காணலாம். இவ்விடத்தில் தேவதேவனின் கவிதை வரிகள் ஞாபகம் வருகின்றன:
”நீரில் தெரியும் நெற்கதிர்கள்
சொர்க்கத்தின் விளைச்சல்கள்
நீங்கள் அவற்றை
நேரடியாக அறுவடைசெய்யமுடியாது”


      என் இக்கட்டுரைக்கு, இந்நாவலைப் பின்பற்றி, நிலம் சார்ந்தே தலைப்பிட்டுள்ளேன்: “காடு பூத்த தமிழ் நிலத்தில்...”.  இரு காரணிகளாக நான் சொன்னதிலும் இயற்கை மற்றும் தமிழ் என்று இயற்கையை முற்படுத்திச் சொன்னேன். முசிறித் துறைமுகம் இந்நாவலில் முக்கியமானதொரு களமாக இடம்பெற்றிருப்பினும், ஆனைமலை ஏழிமலை பறம்புமலை என்பதாக மலைப்பகுதிகளான குறிஞ்சி மற்றும் கானகப் பகுதிகளான முல்லை நிலங்களிலேயே இக்கதை நிகழ்கிறது.  வேள் பாரி ஆண்ட பறம்புநாடு மூவேந்தரால் வீழ்த்தப்பட்ட சோக வரலாற்றை இந்நாவல் சொல்கிறது. பாரியின் அந்நிலப்பகுதி இன்றைய தமிழகத்தையும் கேரளாவையும் இணைப்பதாக அமைந்திருக்கும் தகவல் இந்நாவலின் பொருண்மை சார்ந்து அர்த்தம் கொண்டொரு சோகவுணர்வை மனத்தில் கிளர்த்துகிறது. தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான்மலை தொடங்கிக் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள நெடுங்காடி வரை பாரியின் நாடாக இருந்துள்ளது.

இந்த மலைப்பரப்புக்களை எல்லாம் இக்கதை மாந்தர்கள், பாணரும் கூத்தரும் பொருநருமான கலைஞர்கள், நடையாய் நடந்தலைந்து கடக்கின்றார்கள் என்பதான காட்சிகளைப் படிக்கப் படிக்க என் அகநிலத்தில் நானும் அவர்களுடன் நடந்திருந்தேன். விடுமுறை நிமித்தமாய்க் குடும்பத்துடன் இங்கே பயணித்தலைந்த பசுமையான ஊர்களெல்லாம் அதன் ஈராயிரம் ஆண்டுகள் தாண்டி இப்போது வெளியே பிரதிபலிப்பதாகத் தோன்றிற்று. மலையாளம் என்னும் பெயரே தமிழன்றோ? மலைப்பகுதிகளில் உள்ள ஊர்களின் பெயர்களெல்லாம் இயற்கை சார்ந்த தமிழ்ப்பெயர்களாகவே இருக்கின்றன. குமுளி, தேக்கடி, வண்டிப்பெரியாறு, வண்டன்மேடு, குட்டிக்கானம், புலியன்மலை, சேத்துக்குழி, கட்டப்பனை, ஐஞ்சுருளி, மொட்டக்குன்னு (வாகமன் புல்வெளிகள்), பரந்தம்பாறா (பருந்துப் பாறை என்பதன் மரூஉ), மூனாறு இத்தியாதி.

Image result for john pennycuick memorial


இந்நாவலின் முடிவில் வருமொரு காட்சி பற்றி ஒன்றுரைப்பேன். மயிலன் மொழிவதாய் அமைந்துள்ளது அப்பகுதி. பெரியாற்றுக் கரையோரமாக நடந்து ஒரு நாள் அவன் வந்து சேருமிடமிடத்தில் தம் குடும்பத்தினரைக் காண்கிறான். “உச்சத்தில் பாடப்பட்ட பாட்டைக் கேட்டுக்கொண்டே அங்கிருக்கும் ஒரு கோவிலை அடைந்தேன். கூடல் நகரைச் சுட்டெரிக்க இடமுலையைத் திருகியெறிந்த கண்ணகி கோவில்.” என்று அந்த இடத்தைச் சுட்டுகிறான். இப்பகுதியைப் படிக்கும்போது அடடா! என்றிருந்தது. அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் சித்திரா பௌர்ணமி அன்று, ஆண்டுதோறும் நடைபெறும் மங்களதேவி விழா அவ்விடத்தில் நடந்து முடிந்திருந்தது. கேரளக் காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் அவ்விழாவிற்குச் சென்றுகொண்டிருந்த தமிழ் யாத்ரீகர்களை நான் கண்டேன்.  சின்னமனூர் உத்தமப்பாளையம் கம்பம் கூடலூர் என்று நெடுகவும் அறிவிப்புச் சுவரொட்டிகளில் கண்ணகி சிலம்பேந்தி நின்று வழக்குரைக்கும் படம் இடம்பெற்றிருந்தது. கண்ணகிக் கோட்டம் எனப்படும் அந்தச் சிற்றாலயம் இருக்கும் மலையின் கீழ் “லோயர் கேம்ப்” என்னும் பகுதியில் அமைந்திருக்கும் கர்னல் பென்னிகுக் நினைவிடத்தில் சென்று அமர்ந்திருந்தேன். என் வாழ்வில், நிலம் பூத்து மலர்ந்த நாட்களில் அதுவும் ஒரு நாளாய் இருந்தது.

No comments:

Post a Comment