Monday, July 10, 2017

காலை நடை

Related image

உன்னிடம் அடைந்துகொண்டோம்
இந்த வைகறைப் பொழுதினை யாம்
நபியுரை மந்திரம் ஓதி
அதிகாலை நடைக்குக் கிளம்பினேன்

இன்னமும் வெய்யில் வந்து தீண்டா
முன்னமே நடை காண்கின்றார் பலரும்

பருமனைக் குறைக்க வேண்டி
வேகு வேகென்று நடக்கின்றார்
ஆண்களும் பெண்களுமாய்

நாளின் தேன்பொழுது இதுவெனக் காணாது
சர்க்கரை அளவினைக் குறைப்பதே குறிக்கோளாய்
எந்தையும் அவரின் வயதொத்த பிறரும்
நடக்கின்றார் தினமும் ஐந்தாறு கி.மீ.

ஆண்களின் குழு எனில்
அரசியலும்
தம்பதிகள் எனில்
குடும்ப நடப்பும்
பேசிக்கொண்டேதான் போகிறார்கள்

காலை எழுந்தவுடன் (டியூஷன்) படிப்பென்று
நவீன சைக்கிள்களில்
விரையுமிப் பிள்ளைகள்தாம் அறியுமோ
கனிவு கொடுக்கும் நல்ல பாடல் ஏதேனும்

கண்ணதாசனின் தத்துவப் பாடலோ
வேறெதுவும் பக்திப் பனுவலோ
செல்பேசியில் கேட்டபடி
நடை பயில்வோரையும் அன்றாடம் காணலாம்

விடியற்போதிலேயே
விரைந்தோடும் இவ்வுலகை வியந்தபடி
நானும்தான் போகிறேன் காலை நடை
ஒருநாளாவது கூடிவரவேண்டுமே
கொஞ்சமேனும் வேகம்?

கருமை வெண்மை நீலம் செம்மை என
நிறங்களின் மாயம் காட்டும்
வானத்துக் காட்சியெல்லாம்
வான்காவின் ஓவியம்

அக்கணத்தில்தான் பால் செசான்
தீட்டி வைத்தது போன்ற
ஆவாரம் பூக்களின் மஞ்சளும்
அருகம் புற்களின் பச்சையும்

கண்டு கண்டு பரவசமாவதில்
என் நடையின் கதியில்
உருக்கொண்டுவிடுகிறது
ஒரு களிமகனின் காலலைவு

‘இப்படி அன்ன நடை நடந்தால்
தொப்பை எப்படிக் குறையும்?
எனக் கவல்கிறாள் அவள்

நானென்ன செய்ய?
இந்தப் பொழுதும்
இந்த நடையும்
வாய்த்திருப்பது
நிறைவதற்கே அல்லவா?







No comments:

Post a Comment