Wednesday, August 16, 2017

குள்ளச் சித்தனும் சூஃபிகளும்




26 ஜூன் 2017 ஞாயிற்றுக் கிழமை என்று நினைவு. ராமநாதபுரத்தில் ஒரு திருமண நிகழ்வுக்குத் தலைமையேற்பதற்காக எனது குருநாதர் வந்திருந்தார்கள். அவர்களுடன் சீடர்கள் ஒரு நாற்பது பேர் சென்றிருப்போம். சனிக்கிழமை இரவு முதல் உணவும் இராத் தங்க விடுதிகளில் வசதியான ஏற்பாடுகளையும் செய்திருந்தார் மணமகனின் தந்தையாரும் பனைக்குளம் என்னும் ஊரின் குறுநில மன்னர் எனத்தகும் மதிப்பிலுள்ளவருமான நாஃபி ஹாஜியார்.
 Image result for igloo ramanathapuram

      திருமண விருந்து முடிந்து வந்திருந்தோர் கொத்துக் கொத்தாக வெளியேறிக்கொண்டிருந்தார்கள். இரண்டாம் மூன்றாம் சுற்று ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டிருந்தது ஒரு கூட்டம். கலைந்து கிடந்த நாற்களிகளில் ஒரு மூலையில் கலீஃபா முஹய்யுத்தீன் அமர்ந்திருந்தார்கள். எனது குருநாதரின் ஆன்மிகப் பிரதிநிதிகளில் ஒருவர். இளவயதுக்காரர்தான். எனக்கு அண்ணன் என்று சொல்லலாம். அவருக்கு அருகில் அமர்ந்தேன். பாடுபட்டுக் கூட்டத்துள் புகுந்து ஒரு ஐஸ்க்ரீம் கோப்பையை அவருக்கென்று கொண்டுவந்து வழங்கினார் ஒருவர். “நீங்க ஐஸ்க்ரீம் சாப்டீங்களா?” என்று என்னை வினவினார்கள். பொய்யுரைத்தல் தகாதென்று “இல்லீங்க ஹஜ்ரத்” என்றேன். “சாப்பிடுங்கள்” என்று சொல்லி என்னிடம் தந்தார்கள். மறுக்காமல் வாங்கிக்கொண்டேன். அதனைக் கொண்டு வந்தவர் என்னை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றார், ஹஜ்ரத்துக்கு இன்னொரு ஐஸ்க்ரீம் வாங்கிவர. ஹஜ்ரத் என்னுடன் உரையாடத் தொடங்கினார்கள்.

      ”ஆன்மிகம் என்றால் என்ன?”
      ”நீங்களே சொல்லுங்கஜி” நான் நிதானமாக ஐஸ்க்ரீமை வாயிலிடுகிறேன்.
      ”இப்ப இங்க ராமநாதபுரத்துல வெய்யில் எப்படி இருக்கு?”
      ”திருச்சியில இருக்க மாதிரித்தான், ரொம்பவும் கடுமையா இருக்கு”
      ”வேர்க்குதுல்ல...”
      ”ஆமாம். ரொம்பப் புழுங்குது. முதுகெல்லாம் எரியுது” (’குனிய வச்சு முதுகுல சால்னா ஆக்கலாம்’ என்று நண்பர் ஒருவர் முன்பு சொன்னதை நினைவு கூர்ந்தேன். நாங்கள் அமர்ந்திருந்த இடம் வேறு மண்டபத்துக்கு வெளியே அரை வட்ட வடிவில் உயரமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் கீழே.)
      ”இப்ப இதே நேரம் ஊட்டியில எப்படி இருக்கும்?”
      ”குளுகுளுன்னு இருக்கும். பதினைஞ்சு டிகிரியாவது கம்மியா இருக்கும்”
      ”இங்கிருந்து ஊட்டிக்குப் போகணும்னா என்ன செய்வீங்க?”
      ”என்ன செய்ய, பஸ்ஸேற வேண்டியதுதான். இல்லன்னா இப்ப திருச்சியிலேர்ந்து வந்த மாதிரி ஒரு காரப் புடிச்சுக்கிட்டு கும்பலா போவணும்”
      ”அதுக்கு ரொம்ப நேரம் ஆகுமே? சரி, ராமநாதபுரத்த ஊட்டி மாதிரி குளுகுளுன்னு ஆக்கணும். அதுக்கு என்ன செய்யலாம்?”
      ”அல்லாஹ்வாப் பாத்து மழயகிழய அனுப்பிச்சான்னா கொஞ்சம் கூலாகும். ஆனாலும் ஊட்டி மாதிரி அவ்வளவு குளுமையா ஆகாதே?”
      ”இல்லங்க. நாம ஊட்டிக்குப் போக வசதிப்படாதுன்னா, இங்க ராமநாதபுரத்துக்கு ஊட்டிய கொண்டு வந்துறனும். அதுதான் ஆன்மிகம்!”
      உரையாடலின் திசையே அப்போதுதான் எனக்கு மூட்டம் விலகிப் பாதை தெரிந்தது. சட்டென்று உள்ளே ஒரு விளக்குப் பற்றிக்கொண்டது. வியப்பும் பரவசமும் கலந்து அவர்களைப் பார்த்தேன். அவர்கள் மேலும் தொடர்ந்து பேசினார்கள்.
      ”எல்லோருக்கும் ராமநாதர்புரம் வெய்யில்ல வேர்த்துக் கொட்டீட்டிருக்கும். அவ்லியாவுக்கு ஊட்டில இருக்குற மாதிரி குளுகுளுன்னு இருக்கும். இருக்கணும். இப்பச் சொல்லுங்க ராமநாதபுரத்துக்கு ஊட்டிய எப்படிக் கொண்டு வர்றது?”
      சரிதான். ராமநாதபுரத்துக்கு ’ஊட்டி வருக்கி’ய வேணுமனா நான் கொண்டு வரலாம். உதகமண்டலத்தையே கொண்டு வரணும்னா ஆகுற காரியமா அது? என்று என் கமண்டலத்திற்குள் எண்ணம் ஓடிற்று.
      ”ராமநாதபுரத்துக்கும் ஊட்டிக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?” என்று முஹய்யுத்தீன் கலீஃபா கேட்டார்கள். 

      நான் இந்தப் பாடத்தில் கஜ்னி முகம்மது. என் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு எவ்வளவு தூரம் என்று யாராவது விசாரித்தாலே மாற்றி மாற்றி பதில் சொல்வேன். ஐன்ஸ்டீனின் சார்பியற் கோட்பாட்டின் அழுத்தமான தாக்கத்தில் இயங்கிக்கொண்டிருப்பது என் மனம். அவ்வப்போது தூரக் கணக்குகளை மாற உணர்ந்துகொண்டே இருக்கும். எனவே நான் ’பிருக்குப் பிருக்’கென்று முழித்தேன். அருகிலிருந்தவர் பதில் சொன்னார், “ஒரு நானூறு கிலோமீட்டர் இருக்கும்”. (உண்மையிலேயே அவர் பயண அறிஞர்தான். துல்லியமாக நானூற்றுப் பத்தொன்பது புள்ளி நான்கு கி.மீ என்கிறது கூகிள்).

      ”இதுதான். இப்படி நீங்க நெனக்கிறதத்தான் மாத்தணும். ராமநாதபுரம் இங்க இருக்கு, நானூறு கிலோமீட்டருக்கு அப்பால ஊட்டி அங்க இருக்குன்னு பாக்கறீங்க. இது நமக்குள்ள பார்வை. ராமநாதபுரம் எங்க இருக்கோ ஊட்டியும் அங்கேயேத்தான் இருக்குன்னு பாக்கணும். எல்லாமே ஒரே இடத்துல ஒரே புள்ளியிலதான் இருக்கு. இங்கே அங்கேன்னு வித்தியாசம் கிடையாது. அப்படிப் பாத்தா ஊட்டிய இங்க ராமநாதபுரத்துக்குக் கொண்டு வந்துடலாம். அப்படிக் கொண்டு வரத் தெரிஞ்சா நீங்க ஆன்மிகவாதி”

      இதைச் சொல்லிவிட்டு கலீஃபா எழுந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் சென்று மண்டப வாசலுக்குத் திரும்பும் வரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஐஸ்க்ரீமை விடவும் குளுமையான இதமான சுவையான ஞான அமிர்தத்தைப் பக்குவமாக ’ஊட்டி’விட்டுச் செல்கிறார்கள்!

      ஒரு மாத காலத்திற்கும் மேல் ஓடிவிட்டது. கடந்த நான்கு நாட்களாகப் புதினம் ஒன்றை வாசித்து இதோ இன்று (14.08.2017) மதியம் முடிக்கின்றேன். யுவன் சந்திரசேகர் எழுதிய முதற் புதினமான “குள்ளச் சித்தன் சரித்திரம்”. 2002-ல் முதற்பதிப்பு வெளிவந்துவிட்டது. பதினைந்து வருடங்கள் கழித்து இப்போதுதான் வாசிக்க வாய்த்திருக்கிறது எனக்கு. 2011-இல் கிழக்குப் பதிப்பகத்தார் வெளியிட்ட பிரதி எனது கையில். 
Image result for yuvan chandrasekar

      ”குள்ளச் சித்தன் சரித்திரம்” புதினத்திற்கும் எனக்குமான தொடர்பு பத்தாண்டுகளுக்கு முற்பட்டது என்றே சொல்லலாம். 2002-இல் தமிழினி பதிப்பகம் வெளியிட்ட பிரதி ஒன்று எம் துறை நூலகத்தில் இருந்தது. என்னிடம் தொலைதூரக் கல்வித் திட்டத்தின்கீழ் எம்.ஃபில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்த ‘தக்காளி’ வெங்கடேசனின் கையில் அதனைத் தந்து ‘படித்துவிட்டு வா. பேசிக்கொள்வோம்’ என்று அனுப்பினேன். அப்போது நான் அதைப் படித்திருக்கவில்லை. போனவன் போனவன்தான். இதுவரை அவன் போய்ச்சேர்ந்த மர்மம் அவிழவேயில்லை. (’தக்காளி’ என்னும் அடைமொழி கொண்டு ஆள் தளதளப்பாக இருப்பானாக்கும் என்று எண்ணற்க. கச்சலாகக் கொத்தவரங்காய் போல்தான் இருப்பான். அஃதவன் புரிந்த வியாபாரம் கருதி அமைந்த பட்டப்பெயரும் அன்று. அதற்கு வேறொரு பின்னணி இருக்கிறது. வேறு சமயத்தில் சொல்கிறேன்.)

      முஹய்யுத்தீன் கலீஃபா சொன்னதாக மேலே நான் விவரித்த ஞானம் “கு.சி.ச” புதினத்தில் இருந்தது. வாசிக்கும்போதே முதுகுத்தண்டில் மின்னல். மாய எதார்த்தம் அல்லது மாற்று எதார்த்தம் என்றழைக்கப்படுகின்ற மேஜிக்கல் ரியலிசம் என்னும் புனைவியற் கோட்பாட்டின்படி எழுதப்பட்டுள்ள இந்நாவலில் பொதுப்புரிதலான பௌதிக விதிகளை வளைத்து அல்லது உடைத்துவிடுகின்ற, மீவியற்கை என்று சொல்லத்தக்க நிகழ்வுகள் பலவற்றைப் பின்னிப் பின்னிக் கதையை நகர்த்திச் செல்கிறார் யுவன். அவரது எழுத்துக்களின் சிறப்பம்சமே அதுதானே? கால தேச வர்த்தமானங்கள் நெகிழ்ந்து திரவப் ப்ரவாகமாகும் தருணங்களால் ஆனதே இவ்வாழ்க்கை என்பதை உணரவைக்கும் தன்மை இயல்பாகவும் ஆற்றலுடனும் அவரது எழுத்துக்களில் அமைந்திருக்கிறது. 

      அருணகிரியார் என்னும் அந்தக மகானொருவரைப் பார்க்க வருகிறார்கள் ராம.பழநியப்பனும் அவரது மனைவி சிகப்பி (எ) மீனாட்சியம்மையும். அந்தகரோ சுவரைப் பார்த்துக்கொண்டே இவர்கள வீட்டினைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இந்நிகழ்வு நடந்து வெகு நாட்கள் கழித்து, பல அனுபவங்கள் பெற்ற பின் ராம.பழநியப்பன் தனது நெருங்கிய நண்பனான செய்யதுக்குக் கடிதம் ஒன்று எழுதுகிறார். அதில் அந்த நிகழ்வையும் குறிப்பிடுகிறார்:

      ”எனக்கு வேறு ஒரு கேள்வி இருக்கிறது செய்யது. கண் முன்னால் உட்கார்ந்திருக்கிற எங்களை அவரால் பார்க்க முடியாது. ஆனால், பூலாங்குறிச்சியில் இருக்கிற எங்கள் வீட்டைத் துல்லியமாகப் பார்க்கிறார். வீட்டிலுள்ள பூஜை அலமாரி தெரிகிறது அவருக்கு. கரட்டுப்பட்டியிலிருந்து நம்மூருக்கு வரவேண்டுமென்றால், குறைந்தது நாலைந்து மணிநேரம் ஆகிவிடுகிறது நமக்கு. அவருக்கு அப்போதே அங்கேயே, சொல்லப்போனால் அவர் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே இருக்கிறது பூலாங்குறிச்சி.
      ”அதாவது, பூலாங்குறிச்சி, கரட்டுப்பட்டி என்று இரண்டு இடங்கள் கிடையாது அவருக்கு. நாலு மணிநேரம் என்ற இடைவெளியும் கிடையாது. அமெரிக்காவையும் இதே மாதிரிப் பார்த்துவிட முடியும் அவரால் என்றுதான் தோன்றுகிறது.
      ”அப்படியானால் அவர் சஞ்சரிக்கும் பிரதேசம் எது, அந்தப் பிராந்தியத்தின் வெளிவிளிம்பு எது?” (பக்.202-203).

      இதே ஞானப்பார்வையை முன்வைக்கும் இன்னொரு முக்க்கியமான இடத்தையும் பார்க்கலாம். இப்புதினத்தில் வரும் சித்தர்களில் ஒருவர் முத்துச்சாமி (கதைப்படி, ஒரே சித்தர்தான் நான்கு நபர்களாக வருகிறார்!). தான் ஞான சித்தி அடைந்த அனுபவம் பற்றி அவர் தனது பால்ய ஸ்நேகிதனும் தற்போதைய சீடருமான ஹாலாஸ்யம் ஐயர் என்பவரிடம் பேசுகின்ற ஒரு தருணத்தில் பின்வருமாறு சொல்கிறார்:

      ”ஆலாஸ்யம், ஞாபகத்தில் இரண்டு வகை இருக்கிறது. முதல் வகை ஞாபகத்தில், நான் சோழவந்தானில், வைகைக் கரையில், ஒரு சாயங்காலத்தில் இருக்கிறேன். இது ஒரு புற நிர்ப்பந்தம். மாற்ற முடியாதது. எந்நேரமும் ஏதாவதொரு பொழுதில்தான் இருந்தாக வேண்டும். சரீரத்தின், அதை ஆதாரமாகக் கொண்ட பிரக்ஞை நிலையின் அடிப்படை அமைப்பு அப்படி.

      ”இன்னொரு ஞாபகம் இருக்கிறது. அதி சுதந்திரமானது. இருந்த இடத்தில் இருந்தவாறே எங்கும் இருக்கலாம். எப்போதிலும் இருக்கலாம். இங்கே, இப்போது என்ற சிறைக் கம்பிகள் உருகி ஓடிவிட்ட பிறகு மீந்திருக்கும் மைதானம் அது.” (ப.171).

      ஈரேழு ஆண்டுகட்கு முன்பு என்று நினைவு. இளம் பேராசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்றில் கலந்துகொண்டேன். உளவியல் மருத்துவர் ஒருவர் ஊக்குநராக வந்து உரையாற்றினார். அவரது பேச்சு தியானம், உள்ளுணர்வு, ஹைப்போதாலமஸ், சக்கரங்கள் என்றவாறு சுற்றிவந்தது. குழந்தைக்கு மிட்டாய் கிடைத்தது போல் ருசித்த உரையாக அமைந்துவிட்டது. நிகழ்வின் முடிவில் பொறிஞரும் பயிற்சியாளருமான எஸ்.ஏ.டபிள்யூ.புகாரி தொகுப்புரையும் நன்றியுரையும் கலந்தது போல் பேசினார். “இந்த நிகழ்வு சூஃபிச் சிந்தனை கொண்டவர்களுக்கு மிகவும் ருசியாக இருந்திருக்கும்” என்று அவர் சொன்னார். ஆனால், அந்த மருத்துவர் பேசியவை அனைத்தும் இந்து ஞான மரபு மற்றும் பௌத்தம் சார்ந்ததொரு நோக்கில்தான். அதை நவீன மருத்துவக் கண்டறிதல்களுடன் ஒத்திசைத்துப் பேசியதுதான் அவரது பொழிவின் சிறப்பம்சம். யுவன் எழுதியிருக்கும் இந்நாவல் குறித்தும் நான் அதையே நவில்வேன். இந்நாவலில் சூஃபித்துவச் சிந்தனைப் போக்குக் கொண்டார்க்குத் தூண்டலாகும் அம்சங்கள் உள்ளன.

      ”கால இயந்திரம்” என்றொரு சிறுகதை. சுஜாதா எழுதியது. காலத்தில் முன்னும் பின்னும் பயணிப்பதைச் சாத்தியமாக்கும் கருவி ஒன்றினை விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்திருப்பார். அவரது நண்பன் ஒருவனை அதில் அமர வைத்து அனுப்புவார். அவன் ஈராயிரத்தைனூறு ஆண்டுகட்கு முன்னே போய் தொல்காப்பியரைச் சந்திப்பான். இப்படியெல்லாம் போகும் அக்கதையில் காலம் என்பதை பிரபஞ்சவெளியின் நான்காம் பரிமாணம் என்பதாக ஐன்ஸ்டீன் சொன்னதைக் கொண்டு “ஐந்தாம் பரிமாணத்தில் வாழும் ஒருவர்க்கு நான்காம் பரிமாணத்தில் முன்னும் பின்னும் நகர்தல் சாத்தியமே” என்று அந்த விஞ்ஞானி விளக்குவார். நம்மைவிடப் புலன்கள் குறைந்த ஜீவராசிகளுக்கு முப்பரிமாணம் என்பதை உணரும் தன்மைகூட இருக்காது என்பதையும் சுட்டிக்காட்டுவார். யுவனின் புதினத்தில் இந்தப் புள்ளியை ஹாலாஸ்யமிடம் சித்தர் முத்துச்சாமி சொல்கிறார்:

      ”ஆலாஸ்யம், சாரைப்பாம்பின் பாஷையில் உயரம் என்ற பதமே கிடையாது. காரணம், அதன் தரிசனத்தில் நீளமும் அகலமும்தான் உண்டு. அப்படியிருக்க, உயரம் என்ற அனுபவமே சந்தேகத்துக்குரியது என்று சாரைப்பாம்பு சொன்னால், அதைத் தமாஷ் என்றுதான் கொள்ளவேண்டும். சாரையின் தர்க்க ஸாஸ்திரத்தில் உயரம் என்ற ஸங்கதி கிடையாது என்பதால், பூலோகத்தில் உயரம் என்ற அனுபவமே இல்லை என்று அர்த்தமாகிவிடுமா?” (ப.94)
 Related image

      இதை வாசித்தபோது இதே விஷயத்தை இன்னொரு இடத்தில் முன்பு எங்கோ வாசித்த நினைவு மண்டையில் நமநமவென்றது. அது நத்தையை வைத்து இதே தத்துவத்துக்கான விளக்கம். ’நத்தையின் உலகம் இருபரிமாண அனுபவத்தால் ஆனது. எனவே அது பேசினால் மூன்றாவது பரிமாணத்தை மறுக்கும்’ என்னும் கருத்தாக அது என் நினைவில் இப்போது உருக்கொள்கிறது. அல்லாமா இக்பால் ஆற்றிய ஆறு உரைகளின் தொகுப்பு “Six Lectures on the Reconstruction of Religious Thought in Islam” என்னும் பெயரில் நூலாகியது. அந்நூலுக்குள் எங்கோ கிடக்கிறது இவ்விளக்கம்.

      பல காலகட்டங்களில் நிகழும் நிகழ்வுகளின் கோர்வையாக நகரும் யுவனின் புதினத்தில் முகலாய மன்னர் ஜஹாங்கீரின் ஆட்சிக் காலகட்டமும் ஒன்று. அதில், மவுண்ட்பேட்டன் என்னும் ஆங்கிலேய வணிகன் ஒருவனின் பார்வையில் இந்தியா வருணிக்கப்படுகிறது. அவனிடம் ஒரு மவுல்வி சொல்கிறார், “ஆமாம், பறவைகள் அரசாள வந்திருந்தால், மனிதர்கள் காட்சிப் பொருளாகியிருப்பார்கள். மனிதர்களின் சம்போகம் பற்றி மயில்கள் குறிப்பு எடுத்திருக்கும். மயில்கள் புணர்வது பற்றி பாதுஷா எழுதியிருப்பது போல.” (ப.138)

      இதற்கு ஒப்பானதொரு கருத்து மௌலானா ரூமி அவர்களின் மஸ்னவி காவியத்தில் இடம்பெற்றுள்ளது. வீரன் ஒருவன் சிங்கத்தை வேட்டையாடிக் கத்தியால் குத்திக் கிழிப்பதாக ஓவியன் ஒருவன் படம் தீட்டுகிறான். கூண்டுக்குள் அடைக்கப்பட்ட ஒரு சிங்கத்திடம் அப்படம் காட்டப்படுகிறது. அதைப் பார்த்த சிங்க மனதிற்குள் எண்ணிக்கொள்கிறது, “அப்பனே! இது மனிதனின் கற்பனை. எனவேதான் இப்படி இருக்கிறது. இதுவே சிங்கத்தின் கற்பனையாக இருந்தால் சிங்கம் ஒன்று மனிதனைக் கீறிக் கிழித்துக் குதறுவதாக வரைந்திருக்கும்.”

      யுவனின் புனைவுலகின் இன்னொரு சிறப்பம்சமாக இதனை நான் காண்கிறேன். அதாவது பிற உயிரினங்களின் வாழ்க்கையை மனிதர்களாகிய நமது வாழ்க்கையைப் போன்றே பாவித்துப் பேச அவருக்கு இலகுவாக முடிகிறது. இது மிகவும் நல்ல விஷயம். ஆன்மிகத்துக்கு உகந்ததொரு பண்பாக இதனைச் சொல்லலாம். ”விருந்தாளி” என்னும் அவரது சிறுகதையில் ’காக்காய்’ ஒன்று கூறும் சங்கதிகளைப் படித்தால் அப்படியே மனித வாழ்க்கையை அது பகடி செய்வதை உணரலாம். அது மாதிரியான ஓர் பத்தியை இப்புதினத்தில் கண்டேன். காட்டில் குட்டிகள் ஈன்ற புலி ஒன்று தனது வாழ்க்கைப்பாடைப் பற்றிக் கூறுகிறது. அது அப்படியே மனிதர்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கிறது:

      ”பெண்ணாக இருப்பதில் எவ்வளவு சிரமங்கள். குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். சாப்பாடு கொண்டு தரவேண்டும். புதுக்குகையை இன்னும் சுத்தம் செய்யவில்லை. முன்பு வசித்த கரடி ஏகப்பட்ட அசுத்தம் செய்து வைத்திருக்கிறது. தரை முழுவதும் எலும்புத் துண்டுகளும், மயிர்ப் பிசிறுகளுமாய்க் கிடக்கிறது. அந்தக் கரடியை விரட்டுவ்தற்குள் பெரும்பாடாகிவிட்டது.” (ப.251).

      செய்யதுக்குப் பழநியப்பன் எழுதும் கடிதத்தின் முடிவில் ஓர் அற்புதமான அழகான கேள்வியை யுவன் முன்வைக்கிறார்: “விழித்து நடமாடிக்கொண்டிருக்கும் நேரத்திலும் நம் எல்லோருக்கும் பொதுவான உறக்கத்தில் இருக்கிறோமோ செய்யது?” (ப.207). நவீனத் தமிழிலக்கிய உலகில் பெரிதும் பேசப்பட்ட “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” என்னும் வரிக்கு இணையான வரி இது.

      இக்கேள்விக்கு ’ஆம்’ என்று விடை தருகிறது ஒரு நபிமொழி. பொது நினைவு (collective consciousness) என ஒன்று இருப்பின் பொதுவுறக்கம் (collective sleep) எனவும் ஒன்று இருக்கத்தானே செய்யும்? மட்டுமன்று, பொதுக் கனவு (collective dream) என்பதும் இருக்கும். நமது உறக்கம் என்பது தனித்தனி நபர்களின் தனித்தனி அனுபவங்களாக இருப்பதால் பொதுவுறக்கம் மற்றும் பொதுக்கனவு என்பது நாம் விழித்திருக்கும் நிலையாகத்தான் இருக்க முடியும். வெகுஜன ரசனையில் சிலாகிக்கப்படுவன, அரசியல் மதம் கலைகள் போன்றன எல்லாம் பொதுக்கனவுதான். அக்கனவை உதறி பொதுவுறக்கத்திலிருந்து எழ வேண்டுமெனில் அக்கனவில், அதாவது வெகுஜன ரசிப்பில் நாம் ஈடுபடக்கூடாது என்றாகிறது. அந்த பொதுவுறக்க நிலை என்பது மனிதனின் உடல் விழித்தும் அகம் தூங்கியும் இருக்கும் நிலையாகும். அந்நிலை பற்றி நபிகள் நாயகம் சொன்னார்கள், “மனிதர்கள் உறக்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மரணிக்கும்போது விழித்துக்கொள்வார்கள்.”

Image result for sufi master soul

      லௌகீகம் என்பதற்கு மாற்று நிலையை நாம் பொதுவாக ஆன்மிகம் என்றுதான் பேசுகிறோம். ஆங்கிலத்திலும் அது spirituality எனப்படுகிறது. அதாவது உடல் உள்ளம் உயிர் / ஆன்மா (body mind and soul) என்னும் மூன்று பரிமாணங்களை அல்லது அடுக்குகளை பற்றிப் பேசப்படுகிறது. சூஃபிகள் இம்மூன்றையும் தாண்டியதுதான் உண்மையான நாம் என்று சொல்கிறார்கள். உடல் என்னும் கூட்டினைக் களைந்தால் கிடைப்பது உள்ளம். அதற்குள் இருப்பது உயிர் அல்லது ஆன்மா. அதற்கும் அப்பால் இருக்கிறது ‘ரகசியம்’. இவற்றை முறையே ஜிஸ்மு, கல்பு, ரூஹு மற்றும் சிர்ரு என்று சூஃபிகள் கூறுவர். இந்தச் சிர்ரு என்னும் ரகசியம் பற்றி முத்துச்சாமி சுட்டிக்காட்டுகிறார்:

      ”எல்லாரும், உடம்பு வெறும் சட்டைதான். ஆன்மாதான் அடிப்படையான சரீரம் என்பதாகச் சொல்கிறார்கள். நமக்கு அதில் உடன்பாடில்லை. ஆன்மாவும் வெறும் உள்ளாடைதான். அதற்கும் முந்தின ஆழ்நிலையொன்று இருக்கிறது. இது நமக்கு எப்படித் தெரியவந்தது தெரியுமா? ஒரு சந்தர்ப்பத்தில், ஒரே சமயம் நான்கு இடங்களில் நான்கு வெவ்வேறு நபர்களாய் இருந்தோம்.” (பக்.236-237).

      ஆன்மீகவாதிகளை ஞானிகளை முன்வைத்து மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகளுள் ஒன்று ‘அவர்கள் இத்தனை சக்தி வாய்ந்தவர்கள் எனில், அற்புதங்கள் நிகழ்த்த வல்லவர்கள் எனில் ஏனிந்த உலகை அவர்கள் சீர்திருத்தி செம்மை செய்துவிடக்கூடாது? ஏன் தீமைகளை அழித்து நன்மையை நிலைநாட்டக் கூடாது?” என்பது. இதே கேள்வியை மாணவன் ஒருவன் என்னிடம் வேறு மாதிரி ஒருமுறை கேட்டான், என்னால் மறக்கமுடியாத கேள்வி அது, “இறைநேசருக்கு இவ்வளவு ஆற்றல் இருக்கும் என்றால் அவர் ஏன் ஒபாமா போல் ஆகக்கூடாது?” (அப்போது பாரக் ஒபாமா அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார். ’உலகில் மிகவும் (அதிகாரச்) சக்திவாய்ந்த  மனிதர் அமெரிக்க ஜனாதிபதியே’ (The most powerful man in the world is the president of U.S.A) என்று பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டுள்ள கருத்தினை ஒப்புக்கொண்டிருக்கும் ஒரு போலிப் புத்திதான் இப்படிக் கேட்கிறது.) “அவர் ஏன் ஒபாமாவைப் போல் ஆக வேண்டும்?” என்று கேட்டுவிட்டு நான் அவனிடம் சொன்னேன், “இது மாதிரி கேவலமான எண்ணங்கள் எல்லாம் இறைநேசர்களின் மனத்தில் உதிக்காது!”

      யுவனின் புதினத்தில் மேற்சொன்ன கேள்வியை ஒத்ததொரு வினாவை முத்துச்சாமியிடம் பழநியப்பன் கேட்கிறார்: “இத்தனை விஷயம் சொல்கிறீர்கள். இவ்வளவு கருணை இருக்கிறது. இந்திய தேசம் முழுக்க இந்த மாதிரி ஞானிகளுக்கும், சித்தர்களுக்கும் குறைச்சலேயில்லை. ... ... ... ... நீங்கள் எல்லாரும் சேர்ந்தால் இதையெல்லாம் சரிசெய்துவிட முடியாதா?” (ப.273).

      இக்கேள்வியின் பொருட்டு முத்துச்சாமி முதலில் பழநியப்பனைக் கடிந்து கொள்கிறார். ஏனெனில் ஆன்மிகத்தை உணர்ந்த சாதகனுக்கு இது மாதிரியான உணர்ச்சிவசக் கேள்விகள் உதிக்கலாகாது. பிறகு உதாரணம் ஒன்று சொல்லிப் பகடியாடுகிறார். அதன் பின் அக்கறையான பதிலையும் அளிக்கிறார். அப்பதிலை நாம் சிக்கெனப் பிடித்துக்கொள்ளலாம்:

      ”சொல்கிறோம். நீர் கேட்பது மிக மிக நியாயமான கேள்வி. ஒரு தர்க்கத்தின், ஒரு தரிசனத்தின், குழந்தைகளும் பேரக் குழந்தைகளுமே இந்தச் சிக்கல்கள் எல்லாம். இவற்றை அதே பிராந்தியத்தில் வைத்துத் தீர்ப்பதில் அநேகர் ஈடுபட்டிருக்கிறார்கள். செம்மையாகவோ குளறுபடியாகவோ அவரவர் வழியில் செய்தும் வருகிறார்கள். இது ஒரு வகை. ஆனால், நீர் சொல்கிற சிக்கல்களைப் பூண்டோடு அழிக்க வேண்டுமென்றால், இவற்றின் அடிப்படையான ஆதி தர்க்கத்தை வேரறுக்க வேண்டும். தரிசனத்தின் அந்தரங்கத் தடங்களில் மாற்றம் உண்டாக்க வேண்டும். இந்த இரண்டாவது வகைச் சேவையில் ஈடுபட்டிருக்கிற பணியாட்கள்தாம் நாமும் நம்மைப் போன்றவர்களும்.” (ப.274).

      “Paradigm shift of consciousness” என்று நவீன உளவியலாளர்களும் ஆன்மிகவாதிகலும் பேசுகின்ற ஒரு பணியைத்தான் இப்பதிலில் யுவன் சுட்டிக்காட்டுகிறார். ஆன்மிக மரபுகளின் பேராளுமைகள் காலந்தோறும் செய்து வந்திருக்கும் பணி இதுவே. எனவே, புறத்தில் நிகழும் உலக மாற்றங்கள் பற்றி அவர்கள் அக்கறை அற்றவர்களாகத் தோன்றுகிறார்கள். நாகரிக வளர்ச்சிக்குப் பங்காற்றாத சோம்பர்களாகக் காட்சி தருகிறார்கள். மதம் என்பதே சோம்பேறிகளின் சொகுசுக்காக உருவாக்கப்பட்டது என்னும் கண்ணோட்டம் அதனாற்றான் உருவாயிற்று. ”சூஃபிகள் சோம்பேறிகள். தம்மைச் சுற்றிலும் இறைவன் வேலை செய்வதை அவர்கள் அவதானித்தபடி இருக்கிறார்கள்” என்கிறார் மௌலானா ரூமி!

Image result for sufi master soul

      அடிப்படைத் தேவைக்கான குறைந்த அளவில் மட்டுமே இவ்வுலகை எடுத்துக்கொண்டு பற்றற்று இருக்கும் நிலையையே சூஃபிகள் ஸுஹ்து (துறவு) என்றூ சொல்கிறார்கள். அந்நிலை குறித்து சூஃபி குரு அபூ அலீ தக்காக் அவர்கள் சொல்கிறார், “துறவு என்பது ‘இதில் நானொரு தர்மாஸ்பத்திரி கட்டுவேன்’ என்றோ ‘ஒரு பள்ளிவாசல் கட்டுவேன்’ என்றோ சொல்லாமல், உலகம் இருக்கும்படியே அதை நீ விட்டுவிடுவதாகும்.” (’அர்ரிசாலத்துல் குஷைரிய்யா’, அத்தியாயம்#6).

      சூஃபிகள் மற்றும் மார்க்க மேதைகளின் இந்தப் போக்கினை குறை கூறுகின்ற பார்வைகள் உண்டு. வஹ்ஹாபிஸக் கடுங்கோட்பாட்டாளர்களின் மனநிலையில் அத்தகைய எதிர்விமர்சனக் கருத்துக்கள் புறப்பட்டு வந்திருக்கின்றன. இது குறித்து டாக்டர். அப்துல் ரஹ்மான் தூயீ தனது ”The Sciences of the Quran – A Study in Methodology and Approach” என்னும் நூலில் இருபத்தி மூன்றாவது அத்தியாயமான “The Source of Islamic Turaath” (இஸ்லாமியப் பாரம்பரியத்தின் தோற்றுவாய்”) என்பதில் எழுதியிருப்பதைக் கவனிக்கவும்:

      “பாக்தாதின் மாபெரும் சூஃபி குரு அப்துல் காதிர் ஜீலானீ அவர்களைக் குறைகூறுகின்ற மதியீனர்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர். அவருடைய காலத்தில் அப்பாசிய கலீஃபாக்கள் இஸ்லாமிய அரசாட்சி செலுத்தி வந்தார்கள் என்னும்போதும், அவர் தனது நேரத்தையெல்லாம் உபன்யாசம் செய்வதிலேயே கழித்துவிட்டார் என்றும் இஸ்லாமிய ஆட்சி அமைய அவர் ஒன்றுமே செய்யவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

      ”அல்லாஹ்வின் இந்தச் சிறந்த நேசர் செய்திருக்கும் மகத்தான பணி என்னவென்று உனக்குத் தெரியுமா? ஆஃப்ரிக்கா இப்போதும் அவருக்குக் கடன்பட்டுள்ளது. ஏனெனில் அவரது ஞானப்பாட்டையின் (தரீக்கா) வழியாகத்தான் அங்கே இஸ்லாம் பரவிற்று. இந்தியா, இந்தோனேசியா மற்றும் பல நாடுகளிலும். அவரால் உயிரூட்டப்பட்ட செத்த இதயங்கள் எத்தனை என்றும் வழிகேட்டை விட்டும் இணைவைத்தலை விட்டும் அவரது முயற்சியால் காப்பாற்றப்பட்டு இஸ்லாத்திற்கு வந்த நபர்கள் எத்தனை என்றும் அல்லாஹ்வே அறிவான்.

      ”அப்பாசியக் கலீஃபாக்கள் நபியின் புனிதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர் அறிவார். அவர்கள் அறபிகள், ஹாஷிமிகள். குர்ஆனைத் தெளிவாகப் புரிந்தவர்கள். பிறகும், இஸ்லாத்தின் கிலாஃபத்துக்குப் பொருத்தமுற அவர்களால் ஏன் நடந்துகொள்ள முடியவில்லை? அதிகாரம் மற்றும் செல்வத்தின் மீதான பற்றே அவர்களது தோல்வியின் மூல காரணம் என்பதை அவர் உறுதியாக உணர்ந்தார். எனவே ஒட்டுமொத்தச் சமூகத்தின் அற மற்றும் ஆன்மிகச் சீர்திருத்தமே முதற்பணி என்று முனைந்தார்.” (பக்.461-462).

      யுவனின் புதினத்தில் இன்னொரு அற்புதக் காட்சி. முத்துச்சாமி ஒரு சித்தராகப் பரிணமிக்கும் முன் அவரது சீடப்பருவத்தில் நடந்தது. அவர் தனது குரு சிகாமணியுடன் பாணதீர்த்தம் போயிருக்கிறார். இவர் ஆற்றில் இறங்கிக் குளித்துக்கொண்டிருக்கிறார். சிகாமணி ஒரு பாறையில் அமர்ந்து பார்த்தபடி இருக்கிறார். அப்போது முத்துச்சாமி நீர்ச்சுழலில் சிக்கிக்கொள்கிறார். அது அவரை மூழ்கடித்து உள்ளே இழுத்துச் செல்லுவதும் மீண்டும் மேலே கொண்டுவருவதுமாய் இருக்கிறது. மேலே வரும்போது அவர் கைகளை அசைத்து, காப்பாற்றுமாறு உதவி கேட்கிறார். உயிர் போகும் தருணம் நெருங்கிவிட்டது என்று அவர் உணரும்போது சிகாமணி அவரைக் காப்பாற்றுகிறார். முத்துச்சாமி கண் திறந்து பார்க்கும்போது “ரொம்பப் பயந்துவிட்டாயோ?” என்று கேட்கிறார் அவர். சிரிக்கிறார். சிரித்தபடியே நீருக்குள் இறங்குகிறார். கழுத்து வரை நீரில் நின்றுகொண்டு ஒருமுறை முத்துச்சாமியைப் பார்த்துச் சிரிக்கிறார். அதன் பின்? யுவன் எழுதியிருப்பதையே வாசியுங்கள்:

Related image 
photo by rajan parrikar.

      ”சிகாமணியின் தலை நீருக்குள் புதைகிறது. தலை மறைந்த இடத்தில் மிகப் பெரிய காற்றுக் கொப்புளம் தோன்றி இருந்து மறைகிறது.

      ”சிகாமணி மறைந்துவிட்டார். கரைக்குத் திரும்பவில்லை அவர். திரும்பவேயில்லை...” (ப.276)

      இதைப் படிக்கச் சற்று திகிலாகத்தான் இருக்கிறது. நம் கண் முன் இப்படி ஒருவர் இலகுவாகச் செத்துக்காட்டினால் எப்படி உணர்வோம்? அந்த அதிர்ச்சி நம்மைப் புரட்டிப் போட்டுவிடாதா? தன் சீடனில் அப்படியான ஓர் ’அகப்புரட்சி’ நிகழ்வதற்காக ஒரு குரு தனது மரணத்தை உவந்து அடைகிறார் எனில் அவர்தான் எத்தனை வாத்ஸல்யம் மிக்கவர்! 

      இந்த நிகழ்வை யுவன் உண்மையிலேயே கற்பனையில்தான் எழுதினாரா இல்லையா தெரியாது. ஆனால் இதனையொத்த நிகழ்வு மாபெரும் சூஃபி மகான்களில் ஒருவரான ஃபரீதுத்தீன் அத்தார் அவர்களின் வாழ்வில் நடந்தது. அத்தார் என்றால் மருந்து மற்றும் அத்தர் வியாபாரி என்று பொருள். அவற்றை விற்பனை செய்யும் கடையொன்றை அவர் வைத்திருந்தார். ஒரு நாள், வழக்கம் போல் அவர் தனது கடையில் அமர்ந்திருந்தபோது அங்கே வந்த சூஃபித் துறவி ஒருவர் அவரிடம் கேட்கிறார், “ஏ தம்பி, இவ்ளோ சரக்கு வச்சிருக்கிறியே கடையில, இதையெல்லாம் தூக்கிக்கினு நீ எப்பிடி ஆன்மிக வழியில புறப்படுவ?”. அந்தப் பாமர சூஃபியின் கேள்வி அத்தாருக்குச் சற்றே ஹாஸ்யமாகவும் இருந்திருக்கக்கூடும். எனவே அவர் அந்த சூஃபியிடம் “நீங்கள் எப்படி ஐயா புறப்படுவீர்?” என்று வேடிக்கையாகக் கேட்கிறார். ”இதோ இப்பிடித்தான்” என்று சொன்ன அந்த சூஃபி அவரின் கடைக்கு முன்னால் தரையில் படுத்துத் தனது கம்பளியால் முழுவதும் போர்த்திக்கொள்கிறார். அப்படியே படுத்திருக்கிறார். ஓர் ஆட்டம் அசைவு இல்லை. சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த அத்தாருக்கு லேசாக பயம் பீடித்தது. இறங்கி வந்து துணியை விலக்கிப் பார்த்தால் ஆள் பிணமாகிக் கிடக்கிறார்! அந்தச் சம்பவம் அத்தாரின் அகத்தை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. உடனே கடையை விட்டும் வெளியேறி ஞான குருவைத் தேடிப் புறப்பட்டுவிட்டார் எனறு வரலாறு சொல்கிறது.

      புதினத்தில் இன்னொரு சம்பவம். அருணாச்சலம் செட்டியார் என்பவரின் ஆஸ்டின் காரில் முத்துச்சாமியுடன் பழநியப்பனும் செட்டியாரும் சோழவந்தானுக்குப் பயணப்படுகிறார்கள். பாண்டியராஜபுரம் விலக்கில் ரயில்வே கேட் மூடியிருக்கிறது. கேட்களுக்கு உள்ளே தண்டவாளத்தில் ஒரு காளை மாடு நிற்கிறது. அதன் குளம்பு தண்டவாளத்தில் சிக்கியிருக்கிறது. அதன் கழுத்துக் கயிற்றைப் பிடித்து மாட்டுக்காரக் கிழவன் இழுத்துக்கொண்டிருக்கிறான். மாடு மிரண்டு திமிறி அதன் கால் ஒடிந்துவிட்டது. தொலைவில் ரயில் வருவதற்கான அதன் கூவலும் கேட்கிறது. இனி காப்பாற்ற இயலாது என்னும் நிலை. அவ்விடத்தில் யுவன் எழுதுகிறார்:

      ”ஸ்ரீமுத்துச்சாமி அவசரமாகக் காருக்குள் ஏறிக்கொண்டார். முகமும் முன்னங்கைகளும் கடுமையாக வியர்த்துவிட்டன. காளையின் அவஸ்தையை அகலத் திறந்த கண்களால் வெறித்துப் பார்த்தவாறிருந்தார். ஓரிரு கண்ணீர் முத்துக்கள் வழிந்து சொட்டின.” (ப.277).

      பிறவுயிர் படும் துன்பத்தைத் தன்னில் உணர்வதை Empathy என்ப. இந்நிகழ்வை படித்தபோது எனக்கொரு சூஃபி ஞானி நினைவுக்கு வந்தார். ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்கள். வண்டியிழுக்கும் மாட்டினை இடையன் கோல் கொண்டு அடித்தபோது ஜுனைது கதறினார். “நீர் ஏங்காணும் கத்துறீர்?” என்று அவன் கேட்க தனது மேலாடையை உயர்த்தி முதுகைக் காட்டினார். பிரம்படியின் தடம் தடித்துச் சிவந்திருக்கிறது. பதறிப்போன மாட்டுக்காரனிடம் சொன்னாராம், “ஐயா, எனது குருநாதர் சொல்லித்தந்த ஞான பாடத்தை அவதானித்துக்கொண்டிருந்தேன். மாட்டைப் பார்த்தபோது நானும் அதுவும் வேறல்ல என்றாயிற்று. அப்போது நீங்கள் அதை அடித்ததால் அந்த அடியை நான் பெற்றுக்கொண்டேன்!” 
 Image result for ashoka serial

       14.08.2017 திங்கட் கிழமை மதியம் 1:35. வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து “குள்ளச் சித்தன் சரித்திரம்” புதினத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நூலின் பின்னுள்ள குறிப்புப் பக்கங்களில் அவ்வப்போது குறிப்பெழுதிக்கொண்டுமிருக்கிறேன். மகன் தொலைக்காட்சியில் NXT சேனலில் ”அசோகா” என்னும் தொடரைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். சத்தம் உயரும்போதெல்லாம் எனக்குக் கொஞ்சம் சடைவாக இருக்கிறது. “சவுண்ட கம்மிப் பண்ணுப்பா” என்று அவ்வப்போது அதட்டிவிட்டுத் தொடர்ந்து படிக்கிறேன். புதினம் முடிய இன்னும் மூன்றே பக்கங்கள்தான் உள்ளன. 285-வது பக்கத்தில் வைத்து ஒரு நபரைக் கதைக்குள் கொண்டு வருகிறார் யுவன். ”உஜ்ஜயினி ஸ்ரீஸ்ரீஸ்ரீ தேஜோமயானந்த ஸரஸ்வதீ ஸ்வாமிகள்.” அவரின் பெயரை இதோ பின்னால் குறிப்பில் நான் எழுதத் தலைப்படுகிறேன். “உஜ்...” என்று எழுதிக்கொண்டிருக்கிறது பென்சில். “உஜ்ஜயினின் ராஜாவை அழைத்து வர...” என்று அலறுகிறது தொலைக்காட்சி! எனக்கு ஒரு கணம் தூக்கிவாரிப் போட்டது. தொடரில் வரும் மீர் என்னும் பாத்திரம் பேசிய வசனம் அது. மனம் சமனமுற்ற போது உள்ளுணர்வு பேசிற்று: “பிள்ளாய், நீயும் உன் மகனும் புதினமும் தொலைக்காட்சியும் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று பிரிந்தன அல்ல என்றறி. அனைத்தும் ஓர் ஏகத்தில் உள்ளதே என்றறி!”


     

No comments:

Post a Comment