Sunday, October 22, 2017

ஞானி என்னும் தேனீ



Image result for rose in a sufi turban

     ஞானி ஒரு தேனீ. இந்த உருவகம் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. இது தரும் அர்த்த அலைகளை அவர் பல இடங்களில் விரித்து எழுதியிருக்கிறார்.

      ”பூக்களில் எத்தனையோ வகை. ஆனால் தேன் ஒன்றுதான். இது தேனீக்குத்தான் தெரியும். தேனீயாகிறவன் ஞானியாகிறான்” என்கிறார் அவர் (”பூவாலயம்” நூல்: பூப்படைந்த சப்தம்)

      ‘பித்தன்’ என்னும் தனது அற்புதமான சிறு மா நூலில் அவர் சொல்கிறார்,

      அவன் தேனீ
      அதனால்
எல்லாப் பூக்களிலும்
வித்தியாசம் பார்க்காமல்
தேன் எடுப்பவன்

இதே நூலின் உள்ளே “அறிக்கை” என்னும் கவிதையில் இந்த உருவகத்தை மேலும் விரிவாகச் சொல்கிறார்.

மதவாதி
’என் தோட்டத்துப்
பூவில் மட்டும்தான்
தேன் இருக்கிறது’
என்கிறான்

என்று அப்துல் ரகுமான் சொல்கிறார். வரட்டு மதவாதத்தின் மடமையைத் தெளிவாகக் காட்டும் வரிகள் இவை. ஏனெனில், பூ என்றாலே அதில் தேன் இருக்கத்தான் செய்யும்.

“என் தோட்டத்தில் மட்டும்தான் பூக்கள் இருக்கின்றன” என்று ஒருவன் வாதாடினால்கூட அதில் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கலாம். பிற தோட்டங்களில் ஏன் பூக்கள் விளையவில்லை என்று சிந்திக்கலாம். அப்படி வாதாடுவதைக் காட்டிலும், “என் தோட்டத்துப் பூவில் மட்டும்தான் தேன் இருக்கிறது. பிறர் தோட்டத்துப் பூக்களில் தேன் இல்லை” என்று சொல்வது கடைந்தெடுத்த மடமைதான் அல்லவா?

நானோ தேனீயாக இருக்கிறேன்

பூக்களின் வேறுபாடுகளைத்
தேனீ
லட்சியம் செய்வதில்லை

தோட்டத்து வேலிகள்
அதைத் தடுப்பதில்லை

எல்லாப் பூக்களிலும்
தேன் உண்டு
என்பதும்
தேன் என்பது ஒன்றுதான்
என்பதும்
தேனீக்கு மட்டுமே
தெரிகிறது

என்கிறார் அப்துல் ரகுமான். பூக்களின் வேறுபாடுகள் தேனீக்கு முக்கியமில்லை. பூக்கள் நிறத்தாலும் அளவாலும் வடிவத்தாலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் அவற்றில் சுரக்கும் தேன் ஒன்றுதான் என்றும் அதன் சுவை ஒன்றுதான் என்றும் தேனீக்குத் தெரியும். 

Related image
       
     தோட்டத்து வேலிகள் தேனீயைத் தடுப்பதில்லை. ஏனெனில் தோட்டத்து வேலிகள் அதனைத் தடுப்பதற்காகப் போடப்பட்டவை அல்ல. அவை கால்நடைகளையும் நாய் பூனை இத்தியாதி (சித்த) சேட்டை புரியும் துட்ட விலங்குகளையும் கவனத்தில் வைத்து வேயப்பட்டவை. எனவே, தேனீ வேலி தாண்டிவிட்டது என்று குற்றஞ் சுமத்த முடியாது. அனைத்துப் பூவிலும் ஞானத் தேனைச் சுவைக்கும் தேனீயாக இருக்கும் ஞானிக்குச் சமய எல்லைகள் தடையாக இரா.

      ஒரு பூவின் தேன்
      தேனீக்குப் போதாது

என்கிறார் கவிக்கோ. அவர் எழுதிய நூற்கள் அவர் கட்டிய தேனடை. அதில் நாம் பல்வேறு பூக்களில் இருந்து திரட்டப்பட்ட தேன் துளிகளைக் காண்கிறோம். எல்லாம் ஒரே சுவையில் பிறங்குகின்றன. அவற்றின் அடையாளங்களைக் குறிப்பிடாமல் அழித்துவிட்டால் ஒரே பூவின் தேன் என்பதாகத்தான் நினைப்போம்.

Image result for kurinji flower in munnar
      
      குறிஞ்சிப் பூ அளவால் மிகவும் சிறியது. ஊதா நிறம் உள்ளது. அது பூக்கும் செடியும் குட்டையானது. பன்னிரு ஆண்டுகட்கு ஒருமுறை அபூர்வமாகப் பூப்பது. யாரும் எளிதில் அணுக இயலாத ஆழ் மலைச் சரிவுகளில் பூத்துக் கிடப்பது. அங்கே தேனீ மட்டுமே மீண்டும் மீண்டும் செல்கிறது. சிறு சிறு துளியாகத் தேனெடுத்து வந்து ஒரு பெரிய தேனடைக்குள் நிரப்பி வைக்கிறது. இந்த உவமையைச் சங்க காலத்துத் தமிழ்ப் பெண் ஒருத்தி தானும் தனது தலைவனும் கொண்ட காதலுக்கு உவமையாகச் சொல்கிறாள்.

      சாரல்
      கருங்கோல் குறிஞ்சிப்
      பூக்கொண்டு
      பெருந்தேன் இழைக்கும்

என்று அவள் சொல்வதாக தேவகுலத்தார் பாடுகிறார் (குறுந்தொகை:3). கவிக்கோவின் நூல் ஒவ்வொன்றும் அத்தகைய தேனடைதான். உலகின் சிறந்த நூற்களுள் அரிதின் தேடித் திரட்டி வைத்த ஞானத் தேனடை.

      ‘ஞானி ஒரு தேனீ’ என்னும் உருவகத்தில் இன்னொரு ஆழமான கருத்தும் தொனிக்கிறது, எண்ண எண்ண இனிக்கிறது.

      பூக்களில் தேன் எடுக்கும் சிற்றுயிர்கள் பல உள்ளன. வண்ணத்துப்பூச்சி, வண்டு, தட்டான், குளவி, ஈ ஆகியன அதில் அடங்கும். தேன்சிட்டு போன்ற சிறு பறவைகளும் பூக்களில் தேன் குடிக்கின்றன. எனினும் தேனீ இவை எல்லாவற்றையும் விட வேறானது. அது மட்டுமே பூவின் அமிழ்தத்தை (nectar) மருத்துவ குணமும் இனிமையும் கொண்ட தேனாக (honey) மாற்றுகிறது.

      இதையே நாம் ஞானிக்கும் பொருத்திப் பார்க்கலாம். சமய நூற்கள் என்னும் பூக்களை பல வகைப்பட்ட நபர்கள் வாசிக்கின்றனர். ஆனால் அந்நூற்கள் நுவலும் தத்துவங்கள் யாரிடம் ஞானமாக மாறுகிறதோ அவர்களே ஞானிகள்.

      மலரின் மார்பில் சுரந்த அமிழ்தம் தேனீயிடம் மட்டும் தேனாக மாறுவது எப்படி? இதைப் புரிந்து கொண்டால் அந்த உருவகமே ஞானியைப் பற்றியும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

Image result for honey bee 
 
      தேனீயின் வயிற்றுக்குள் இரண்டு பைகள் இருக்கின்றன. ஒன்று எல்லா உயிரினங்களுக்கும் இருப்பது போன்ற இரைப்பை. மற்றது, தேன் பை. அந்தத் தேன் பையில்தான் மலரில் அது மாந்தும் அமிழ்தம் வைக்கப்படுகிறது.

      பிற உயிரிகள் தன் உணவுக்காக மட்டுமே மலரில் தேன் உண்ணுகின்றன. ஆனால் தேனீ அதனைத் தன்னுள்ளே தனியிடத்தில் தேக்கி வைக்கிறது. அதுபோல், ’வயிறு வளர்ப்பதற்காக’ மத நூற்களின் தத்துவங்களை வாசிப்பவர்களிடம் அந்தத் தத்துவங்களே ‘மலம்’ ஆகிவிடுகின்றன. 

      ஆனால், ஞானியோ சமய நூற்கள் தரும் செய்திகளைத் தனது உள்ளத்தில் வைத்து உணர்கிறார். அவரது இதயம்தான் அவரின் தேன் பை.

      தேனீயின் வயிற்றுக்குள் உள்ள தேன் பை ஒரு வேலையைச் செய்கிறது. அதாவது, மலரில் எடுத்த அமிழ்தம் (nectar) கடினமான சிக்கலான அமைப்புக் கொண்ட சர்க்கரையாக (complex sugar) உள்ளது. தேனீயின் தேன்-பையில் சுரக்கும் நொதியம் (enzyme) அதனை எளிய சர்க்கரைகளாக உடைக்கிறது. அதுவே தேன். இந்த செயற்பாட்டை அறிவியல் ”உள்மாற்றம்” (inversion) என்று அழைக்கிறது.

      அதுபோல், ஞானி சமய நூற்களில் இருந்து உள்வாங்கும் சிக்கலான தத்துவங்கள் அவரின் அகத்தில் பொங்கும் உள்ளுணர்வால் ஞானமாக மாறுகின்றன. உள்ளுணர்வு அல்லது உள்ளுதிப்பு என்பதே ஞானியில் நிகழும் ’உள்மாற்றம்’ (inner transformation) ஆகும்.

      அந்த உள்ளுணர்வின் உதிப்பினை சூஃபி ஞானிகள் ”இல்ஹாம்” என்னும் கலைச்சொல்லால் அழைக்கின்றனர்.

      ஞானிகள் தரும் ஞானத் தேன் நம் அகத்திற்கு இன்சுவை நல்கிச் சுகம் தருவது மட்டுமல்லாது அறியாமை என்னும் அகப்பிணியை நீக்கும் அருமருந்தாகி நலமும் நல்குகின்றது.

      இங்கேதான் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. அதாவது, சில ஈக்கள் தாமும் தேனீதான் என்று வாதாடுகின்றன. அதில் இன்னும் சில ஈக்கள் தேனீயாக வேடமிட்டு உலவுகின்றன. அவை சமயக் கிரந்தங்கள் என்னும் பூக்களில் உள்ள அமிழ்தத்தைத் தாமும் உட்கொள்கின்றன. ஆனால் தேனீயின் ”அக அமைப்பு” அவற்றுக்கு இருப்பதில்லை. எனினும் அவை தாமும் தேன் தருவதாகப் பீற்றிக்கொண்டு வாந்தி எடுக்கின்றன. அதுவே தேன் என்றும் விளம்பரப் படுத்துகின்றன. அவற்றை உண்போர்க்கு அகப்பிணி இன்னும் பெருகி முற்றுகிறது.

      இத்தகைய ஈக்களை மனிதர்களிலும் காண்கிறோம். அவற்றிடம் ’நான்’ என்னும் ஆணவ மலத்தின் துர்நாற்றம் ஓங்கியிருக்கும். அவை ’ஞானி’ அல்ல, ’நான்-ஈ’. அந்த ஈக்கள் ஞானப் பிரசங்கம் புரிகின்றபோது அந்த வாந்தியின் நாற்றத்தால் நமக்குக் குமட்டுகின்றது. 

      எனவே, தோற்றத்தை வைத்துத் தேனீயா அல்லது ஈயா என்று முடிவு செய்ய வேண்டாம். ஒருவேளை அது தேனீ வேடமிட்ட ஈயாக இருக்கக் கூடும். அது தருவது தேனா அல்லது வாந்தியா என்பதை வைத்து அது தேனீயா அல்லது ஈயா என்று முடிவு செய்க. ஏனெனில் தேனீயாக வேடமிட்டிருந்தாலும் ஈயால் தேன் தர இயலாது.

      ”ஞானி என்று சொல்லிக்கொள்ளும் எல்லாரிடமும் கையைக் கொடுத்துவிடாதே. ஞானியராக வேடமிட்ட பல சாத்தான்கள் உலவுகின்றன” என்று எச்சரிக்கின்றார் சூஃபி மகான் மவ்லானா ரூமி. 

Friday, October 20, 2017

அங்கைத் துளி




இறைவன் மிகப் பெரியவன்”. இந்தப் பொருள் அமைந்த அரபி மொழி வாசகம் “அல்லாஹு அக்பர்“ என்பது.

ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகை என்னும் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்பது இஸ்லாம் வகுத்துள்ள முறை. வைகறை நண்பகல், பிற்பகல், அந்தி மற்றும் இரவு என்னும் ஐவேளைக்கும் தொழுகைக்கு வருமாறு பள்ளிவாசலிலிருந்து பக்தர்களுக்கு அழைப்பு ஒலிக்கப்படுகிறது. அதன் ஆரம்ப வாசகமாக ”அல்லாஹு அக்பர்” என்பதே அமைந்திருக்கிறது. தொழுகையின் ஆரம்ப வாசகமும் அதுவே.



Related image

வைகறைத் தொழுகைக்கான அழைப்பில் மட்டும் இடையே ஒரு வாசகம் அதிகமாகச் சேர்த்துச் சொல்லப்படுகிறது. “தூக்கத்தை விடத் தொழுகை மேலானது” (அஸ்ஸலாத்து ஃகைரும் மினன் நவ்ம்) என்பது அந்த வாசகம். வைகறையில் மக்கள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள் என்பதால் அவர்களை எழுப்புவதற்காக இந்த வாசகம் ஒலிக்கப்படுகிறது. பள்ளியறையை விட்டுப் பள்ளிவாசலுக்கு வருமாறு பக்தர்களுக்குப் பரமனே பாடுகின்ற பள்ளியெழுச்சி இது!

இறைவன் மிகப் பெரியவன் என்று சொல்வது மற்றதெல்லாம் சிறியவை என்னும் கருத்தையும் உணர்த்தி நிற்கின்றது. இறைவன் எவ்வளவுப் பெரியவன்? என்னும் வினாவையும் அது எழுப்புகின்றது.

கடுகை விடவும் பாறை ஒன்று பெரியதாக இருக்கிறது. ஆனால் இரண்டுக்குமே அளவு இருக்கிறது. கடுகை விடவும் பாறை பத்தாயிரம் மடங்கு பெரியதாக இருக்கலாம். அப்படி வைத்துக்கொண்டால், அந்தப் பாறையை விட ஒரு மலைக்குன்று லட்சம் மடங்கு பெரியதாக இருக்கும். எனவே, கடுகை விட அந்த மலைக்குன்று பத்தாயிரலட்சம் மடங்கு பெரியது என்றாகிறது. அந்த மலைக்குன்றை விட இப்பூமி பத்து கோடி மடங்கு பெரிதென்று சொன்னால் அந்தக் கடுகை விட இப்பூமி நூறாயிரலட்சங்கோடி மடங்கு பெரிதென்று ஆகிறது. எப்படியோ, பூமி மிகப் பெரிது என்றபோதும் கடுகுக்கும் ஓர் அளவு இருக்கிறது. பூமிக்கும் ஓர் அளவு இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டு உரைக்க முடிகிறது.

அதுபோல் இறைவனைப் படைப்புக்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது அவனது தகுதிக்கும் இறைப்பண்புக்கும் அழகல்ல. இறைவன் மனிதனை விட இத்தனை மடங்கு பெரியவன் என்று ஒப்பிட்டுரைக்க ஒல்லுமா? மனிதனுக்கு அளவு உண்டு. இறைவனுக்கும் ஓர் அளவு இருக்கும் எனில் ஒப்பிட்டுப் பார்த்து இவ்வளவு மடங்கு பெரியவன் என்று சொல்லலாம்.

இறைவன் மிகப் பெரியவன் என்று ஒப்பீட்டு ரீதியாக ஏற்றுயர்படியில் (superlative) சொல்லப்பட்டுள்ளது. எனினும், இறைவனுக்கு ஓர் அளவு மட்டுக் கிடையாது. அவன் எல்லையற்றவன், அளவற்றவன். எனினும், பாமரர்க்கும் இறைச் செய்தி சேர வேண்டும் என்னும் கருணையால்தான் இப்படி ஒப்பீட்டுயர்வாகச் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி அவனது அலகிலா அருளும் அளவிலா அன்பும்தான்.

இறைவனைப் பெரியன் என்றும் பெரியோன் என்றும் வருணிப்பதைத் தமிழில் சைவ மற்றும் வைணவச் சமய நூற்களில் காண்கிறோம்.

இறைவன் எவ்வளவு பெரியவன் என்னும் கேள்வி கடைந்நிலை பக்தர்களின் மனங்களில் எழுகையில் அதற்கு அவர்களின் அறிவு எவ்வளவுக்குக் கற்பனை செய்து வியக்க ஏலுமோ அவ்வளவு என்று ஞானிகள் உரைக்கின்றனர். எப்படியோ இறைவனின் மேன்மையை, மகத்துவத்தை மக்கள் உணர்வதுதான் நோக்கம் என்பதால் குழந்தைக்குத் தாய் சொல்வது போல் அப்படிச் சொல்கின்றனர்.
 
Related image 
 
இறைவன் எவ்வளவு பெரியவன் என்பதற்கு மாணிக்கவாசகர் ஒரு மனச்சித்திரம் தருகிறார். இந்தப் பிரபஞ்சத்தின் விரிவை முதலில் நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். உருண்டை வடிவுள்ளதாகக் கோளங்களும் கிரகங்களும் விண்மீன்களும் அன்ன பிறவும் விரவிக் கிடக்கின்றன. அவை நூற்றொரு கோடிக்கும் மேலே இருக்கும் என்று சொல்கிறார். அந்த அண்டசராசரங்கள் எல்லாம் இறைவன் முன் தூசு துகள்கள் போல் சிறியவையாம். எதைப்போல என்பதற்கும் உவமை ஒன்று உரைக்கிறார்:

”நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல் நுழை கதிரின் துன் அணுப் புரையச்
சிறியவாகப் பெரியோன்”.

வீட்டின் ஜன்னலில் உள்ள விரிசலின் வழியே சூரியச் சுடர் உள்ளே வந்து விழுகிறது. அந்த வெய்யிற் கதிரில் பார்த்தால் சிறு சிறு தூசித் துகள்கள் அலைவது தெரியும். இறைவனுக்கு முன் முழுப்பிரபஞ்சமும் அப்படிப்பட்ட ஒரு துகள் போல் சிறியதாகிவிடும். அவ்வளவு பெரியவன் இறைவன் என்று அவர் சொல்கிறார்.
  Related image



இத்தாலி நாட்டில் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்துவப் பெண் ஞானியான சியனாவின் புனித கேத்தரீன் சொல்வதையும் பார்ப்போம்:

”இறைவனின் பாதம்
மிகவும் பரந்து விரிந்தது

இப்படிச் சொல்லலாம்,
இப்பூமி முழுதுமே
அவனது விரலொன்றின் பகுதி

இப்பூமியின் காடுகள் எல்லாம்
அவனது ஒற்றை முடியின்
வேரிலிருந்து வருவன

அப்படியிருக்க
எதுதான் சன்னிதி இல்லை?

நான் மண்டியிட்டு வழிபட இயலாத,
அவனது பிரசன்னத்தால்
புனிதமாகாத
இடம்தான் ஏது?”

Related image 

இயற்கையை ஆழ்ந்து அவதானிக்கும் எவரும் இறைவனின் மகத்துவத்தை உணராமல் இருக்க முடியாது போலும். மாணிக்கவாசகர் சொன்னது போலவும், கேத்தரீன் சொன்னது போலவும் டார்ஜீலிங் மலைகளின் அழகை ஆழ்ந்து அவதானித்த ரஸ்கின் பாண்ட் “மழைத்துளி” என்னும் அழகான அற்புதமான கவிதையில் இறைவன் பெரியோன் என்னும் தனது வியப்பை நமக்குப் பறிமாறுகிறார்:

தன்னில் முழுமையான இந்த இலை
மரமொன்றின் ஒரு பகுதி மட்டுமே

தன்னில் முழுமையான இம்மரம்
கானகத்தின் ஒரு பகுதி மட்டுமே

அந்தக் காடோ
இந்த மலையில் தொடங்கிக்
கடல் வரை ஓடிக்கிடக்கிறது

தன்னில் முழுமையான அக்கடல்
ஒரு மழைத்துளியைப் போல்
ஓய்ந்துகிடக்கிறது
இறைவனின் உள்ளங்கையில்.
     
  இந்த மேற்கோள்களில் எல்லாம் இறைவனின் கை என்றும் பாதம் என்றும் பேசப்படுபவை குறியீடுகளாக அமைவன. அவை இறைவனின் அலகிலா அருளையும் அளவிலா அன்பையும் சுட்டுகின்றன. இறைவனின் உள்ளங்கை அளவற்று விரிவது. அதில் இப்பூமியில் உள்ள கடல்களைப் போல் கோடானு கோடி கடல்கள் சேர்ந்தாலும் ஒரு மழைத்துளி போன்றே தெரியும். ஏனெனில் அவனது அருளுக்கு எல்லை இல்லை.



Monday, October 16, 2017

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 7



Image result for sufi lonely meditation
1:143 சுவையொன்றை வருணித்தல்
      நான் கூறும் அறிதல் என்பதென்ன என்றும் நான் குறிப்பிடும் காதல் எவ்விதமாய் உணரக்காணும் என்றும் ஒருவர் என்னைக் கேட்டார். நான் சொன்னேன், ”உமக்குத் தெரியவில்லை எனில் நான் என்ன சொல்வது? உமக்குத் தெரியும் எனில், நான் என்ன சொல்வது?”

      காதலை அறிதலின் சுவைக்கு எவ்வொரு விளக்கமும் இல்லை. அதைப் பற்றிய எந்தக் குறிப்பும் எவருக்கும் அந்தச் சுவையை ஒருபோதும் தராது.

1:144-145 ஒரு முகத்தின் அழகு

      ”நீயன்றி சக்தி இல்லை” என்று சொல், நீயே அந்த அர்ப்பணமாய் ஆகும் வரை. மீண்டும் மீண்டும் செய்தல் உன் மனப்பழக்கத்தை வலுப்படுத்தும். பொறுமையான பயிற்சியே கல்லை மாணிக்கம் ஆக்குகின்றது. அறிதல் அன்பில் வேர் பிடிக்கிறது. அன்பு தூய்மையில். ஒவ்வொரு நாளும் மகத்துவத்தில் ஏதேனுமொரு பணி செய் (காண்க:55:29).

      காதலின் இயல்பு பற்றிக் கேட்கப்பட்டால் நான் ஒன்றும் சொல்வதில்லை. அர்ப்பணமாகிவிட்ட ஆயிரக்கணக்கான இறைத்தூதர்களின் ஆன்மாக்களை நான் சுட்டிக் காட்டுகிறேன். காதலைப் பற்றிப் பேசுவது அதன் சாராம்சத்தைக் கலங்கச் செய்கிறது. காதலரிடையே பகிர்வது யாதாகினும் அதனைச் சொல்லிவிட முடியாது. அஃதொரு வாழும் மர்மம். வார்த்தைப் பரிமாற்றம் இன்றி அதனை உணர்ந்து சுவைத்திடு. அதனை உன் ஆன்மாவில், உன் இதயத்தில், உன் ஆளுமையில் திளைத்திடு. அச்சுவையை உன் முழு உடலாலும் சுவை. அதை நாவில் சுவைத்திடு. ஆனால் பேசுவதால் அல்ல.

      ஆன்மா பருவுடலுக்குள் நுழைதல் போல் உனது காதற் சுயம் கடவுளுக்குள் நுழையட்டும். ஒரு முகத்தின் அழகென்பது மர்மத்தின் தோற்றமாகும், உள் நுழைதலாகும்.

Image result for sufi doing ordinary job 
 
1:145-146 ஊர்ஜிதம் இல்லை

      ”கூறுக: அல்லாஹ்வை அன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவை அறியமாட்டார்” (27:65).

      அப்பிரதியுடன் நான் இக்கேள்வியை முன்வைக்கிறேன்: உனக்கோ அல்லது எவருக்குமோ எவ்விதப் பயனையும் தராத பணியைச் செய்வது பற்றி நீ எப்படி உணர்கிறாய்? உன் கதவுக்கு வெளியே நீ கிளம்புகையில் ஓர் இலக்கினைப் பற்றிய உறுதி உன்னிடம் இருக்கிறது அல்லவா? எப்போதாவது நீ வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டினுள் போய் எந்த நோக்கமும் இல்லாமல் எந்தக் காரணமும் இல்லாமல் அப்படியே அமர்ந்திருப்பதுண்டா?

      என்ன விளைவு வரும் என்பதை அறியாமலேயே அவ்வப்போது நீ வேலையைத் திட்டமிடுகிறாய். முளை விடும் என்னும் உத்தரவாதமின்றியே நீ விதைகள் தூவுகிறாய். லாபம் தரும் என்பது பற்றிய ஊர்ஜிதம் ஏதுமின்றியே நீ வணிக ஒப்பந்தத்திற்கு இசைகிறாய். தாம் முன்னோக்கிச் செல்லும் புள்ளியைப் பலரும் இங்கே அடைவதில்லை. அதற்காக அவர்கள் முயற்சியை முடித்துக்கொள்கிறார்கள் என்று அர்த்தமல்ல.

      மறைவில் நாம் ஆற்றும் வேலையில் இருந்தே ஊர்ஜிதம் பிறக்கிறது. ஆனால் நாமதை அறிய முடியாது. அவ்விடத்திற்கான பயணமும் அவ்விடத்தில் தூவப்படும் விதைகளும் ஒருபோதும் ஏமாற்றம் அளிக்காது. தீர்க்கதரிசிகளும் ஞானிகளும் துறவிகளும் நமக்கு அவர்களின் நம்பிக்கையில் சிறிதேனும் தரமுடியும், நாம் அவர்களுடன் இணைந்து உழைத்தால்.
 Image result for death in islam
1:146-147 நோக்கங்களுக்கு அப்பால்
     
 நான் இறந்தபின், இவ்வுடல் உலர் புழுதி ஆகும்போது, நிகழும் மாற்றங்களில் நீ எப்படி இயங்குகின்றாய் என்பது பற்றி என்னை அறியாமையில் வைக்க வேண்டாம். உன் செயல்களை நான் நேசிக்கிறேன். எனது உணமைத் தோழனே! உன்னில்தான் எல்லாம் நிகழ்கிறது என்பதை நானறிவேன். இயங்குதலை நான் காணும்போது என் சுயம் உன்னுடன் நகர்ந்து செல்வதை நான் பார்க்கிறேன், ஒவ்வொரு குறிப்பையும் அவற்றின் ரத்தம் புரந்து ஓர் ஆழ்ந்த வியப்பில் அவற்றை அவற்றின் தெய்வீக ரட்சகனின் முன் சிரம்பணியச் செய்கையில். (காண்க 17:109).

      மரங்களும் அவை கொண்டிருக்கும் கனிகளும், சுகம் தரும் எந்தத் தொடுதலும், புலன்களின் வழி வருகின்ற எதுவும் அறிவில் தாக்கம் செய்கிறது. ஆனால் எனக்கு இன்னும் வேண்டும். புலன்களுக்கு அப்பாலும் உள்ளேயும் இயங்குகின்ற நோக்கங்களை விட்டும் இன்னும் எத்தனைக் காலம் என்னை நீ தடுத்து வைப்பாய்? தவிப்பு இனியும் வேண்டாம், பணிவான ஒப்படைதல் இனியும் வேண்டாம். பிரசன்னத்தின் உள்ளே என்னை எரிய விடு.

1:147-148 அரைத் தூக்கத்தில் ஓர் அரசன்
     
 உறக்கத்திலிருந்து உன்னுள் எழுகிறேன். நான் திரும்பி உன்னை என் அணைப்பில் பற்றுகிறேன், அரைத் தூக்கத்தில் ஓர் அரசன் தான் தனியாக இருப்பதாக நினைத்துப் பின் தனது மனையாளைத் தன்னருகே கட்டிலில் கண்டு, அவளின் கூந்தலை முகர்ந்து, தனக்கொரு துணை இருக்கிறாள் என்பதை நினைவுகொள்வது போல்.

      மேலும் மெல்ல விழித்து அவன் பேசத் தொடங்குகிறான். எனவே, நான் உன்னுள் விழிக்கின்றேன். அந்த இன்பம், கிசுகிசுத்தல், வியப்பில் நாம் நடைபோடும் நேரங்களின் நேர்த்தி. நான் நெருங்குகிறேன். ”என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மைக் கேட்கும்போது நிச்சயமாக நான் அருகிலிருக்கிறேன்” (2:186).

      பிறகு நான் நினைவு கூர்கிறேன், இறை பிரசன்னத்தில் மூசா நபியவர்கள் மூர்ச்சை அடைந்ததை, ஏசுவின் முகத்தை, ஞானியர் திறக்கும் மர்மங்களை, முஹம்மது (ஸல்...) அவர்களின் உறுதியை, தமது பாடல்களில் காதலர் கலந்து ஒன்றாவதை. மேலும் எனக்குத் தெரியும், இக்கால்களுக்கு நீ வழங்கியிருக்கும் வியப்பினை நடப்பதற்காகவே நான் இக்கால்கள் கொடுக்கப்பட்டிருக்கிறேன்.

Image result for beautiful monk 
 
1:150 இறப்பதன் தன்மையும் இன்னும் தோன்றாததன் மகத்துவமும்

      உடலின் இச்சைகளை மறுக்கும் எவனும் தனது ஆன்மாவில், மற்றும் தனது இதயத்தில், மற்றும் தனது இறைநம்பிக்கையில் இருந்து வரும் ஓர் ஆழ்ந்த ஏக்கத்தை நிறைவேற்றுகிறான். தொழுகையின் அர்த்தம் இதுவே: இன்னமும் தோன்றாததன் (அதாவது மறைவின்) மகத்துவத்தை அனுபவிக்க நாம் மாம்சத்தின் இச்சைகளைக் கட்டுப்படுத்துகிறோம். ஐவேளைத் தொழுகையில் நின் நெற்றி நிலத்தைத் தொடுவது இவ்வெண்ணத்தை ஒப்புகிறது. ஆனால் நீயோ அதற்கு எதிரானதை செய்துவிட்டாய். நினது ஆன்மாவின் ஆழத்திலிருந்து வரும் குரலை உதாசீனப்படுத்திவிட்டு உன் உடலின் தூண்டல்களுக்கு மதிப்பளித்துவிட்டாய்.

      உனக்கு இரண்டு அஸ்திவாரங்கள் இருக்க முடியாது. ஒன்று நீ உனது இதயம் மற்றும் ஆன்மாவில் நின்று செயலாற்று. இல்லையெனில் உனது வாழ்க்கை உனது நஃப்ஸ் என்னும் மிருக மனத்திலிருந்து, உனது காமக் குரோத மாச்சர்யங்களில் இருந்து வெளிப்படும். அவை எல்லாம் இறப்பனவற்றின் தன்மைகள், இறையருளைப் பெற அடிபணியாவற்றின் தன்மைகள்.