Tuesday, October 10, 2017

கவிக்கோ கவிதைகளில் விரியும் ஞான மரபுகள் - part2.



ஞான மரபுகள் சங்கமித்து எழுந்த நூற்கள்

கவிக்கோ அவர்கள் அனைத்துச் சமயங்களின் ஞான மரபுகளையும், இன்னும் சொல்லப் போனால் நாத்திகம் பேசுகின்ற தத்துவ மரபுகளையும்கூட உள்வாங்கிச் சிந்தித்தவர் என்பதில் அவருக்கு முன்னோடியாக நாம் ஓஷோவை மட்டுமே சொல்ல முடியும். உலகின் ஞான மரபுகள் அனைத்தையும் சார்ந்து அவர் தனது சொந்த நூலகத்திலே ஒரு லட்சம் நூற்களை வைத்திருந்தார். அவை அனைத்தையும் படித்து முடித்தவர் என்றும் சொல்லப்படுகிறது. அவர் தனது சீடர்களிடம் ஆற்றிய உரைகள் எழுத்துப்பெயர்ப்புச் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் ஏறத்தாழ அறுநூற்றைம்பது நூற்களாக வெளிவந்திருக்கின்றன.

ஓஷோவின் நூற்களைப் படிப்பவர்கள்கூட சொல்கின்ற ஒரு முதன்மையான குற்றச்சாட்டு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார், அவர் ஆத்திகரா அல்லது நாத்திகரா என்றுகூட தெளிந்து முடிவுகட்ட முடியாதபடிக்கு முரணாகப் பேசுகிறார் என்பது. ஓஷோவைப் பற்றி டாட்கர் ருத்ரன் அவர்கள்கூட சொன்னார், “ஓஷோ முரண்படப் பேசிப் பேசியே முரண்பட்டவர் போல் தோன்றுகிறார்” என்று. ஆனால் அதெற்கெல்லாம் அடிப்படையாக அவரது ஞானத் தெளிவு இருந்தது என்பதை அவ்வளவு எளிதாக ஒருவர் அறிந்துவிட முடியாது. அதற்கு மிகக் கடினமான மனவுழைப்புத் தேவைப்படுகிறது.

ஓஷோவுக்குப் பிடித்த அதே ’முரண்’ என்னும் சிந்தனை உத்தி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதை அவரின் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசித்த யாவரும் அறிவார்கள். 
Related image

முரண்பாடாகப் பேசுவது என்பது வேறு. முரண் என்பதை ஓர் உத்தியாகக் கொண்டு அதன் வழியாக உண்மை உரைப்பது என்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்பவர்கள் ஓஷோ, கவிக்கோ போன்றவர்களின் ஆக்கங்களைச் சுவைத்துப் பயன்பெற முடியாது.

கவிக்கோ ஆரம்பக் காலம் முதற்றே தனது படைப்புக்களில் பயன்படுத்தி வரும் ஓர் அற்புதமான உத்தி முரண் என்பது. அழகியல் நோக்கில் அதை அவர் எப்படிப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு ஓர் உதாரணம் காட்டுகிறேன்.

”அவளைப் பார்க்கிறேன். பகலால் செய்த முகம், இரவால் செய்த கூந்தல். அவளின் கண்ணைப் பார்க்கிறேன். வெள்ளை வானில் கறுப்பு நிலா”.

காதலைச் சொல்ல முரணை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதற்கும் ஓர் உதாரணம் காட்டுகிறேன். அந்தக் கட்டுரையின் தலைப்பே “என் வண்டு முள்ளை மொய்க்கிறது” என்று முரணழகு காட்டுகின்றது. அதனுள் அவர் எழுதுகிறார்:

“அவள் முதல் பார்வை வீசினாள்; முள் தைத்தது. மறு பார்வை வீசினாள்; மலர் விழுந்தது.
அவள் அதிசயமானவள். முள்ளை மலரால் எடுத்துவிட்டாள்.
அந்த முள்ளும் அதிசயமானது. அதில் தேன் இருந்தது.”

இந்த முரண் என்னும் உத்தி முழு வீச்சில் வெளிப்பட்டிருப்பது அவருடைய ’பித்தன்’ என்னும் கவிதை நூலில்தான். அதிலிருந்து ஓர் உதாரணம் காட்டவேண்டும் என்றால் அந்நூலின் கவிதைகளில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட “புத்தகம்” என்னும் கவிதையின் முன்பகுதியைச் சொல்லலாம்:

“பித்தன்
மழைக்காகப்
பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினான்
குழந்தைகளின் கையிலிருந்த
புத்தகங்களைப் பார்த்து,
’புத்தகங்களே
சமர்த்தாயிருங்கள்.
குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்’ என்றான்.”

ஆலாபனையும் பித்தனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. அவை இரட்டைப் பிள்ளைகள். ”எனக்குள் இருவர் இருக்கின்றனர். ஒருவன் பாடகன். மற்றொருவன் பித்தன்” என்று கவிக்கோ ‘ஆலாபனை’ நூலின் முன்னுரையில் சொல்கிறார். இந்த இருவருக்கும் இரு ஆன்மிக ஆளுமைகளை ஒப்புமை கூற வேண்டும் என்றால் அவருடைய ஆலாபனையின் பாடகன் மௌலானா ரூமியை நினைவூட்டுகிறான், அவருடைய பித்தன் ஓஷோவை நினைவூட்டுகிறான் என்று சொல்லலாம்.

பித்தனின் முன்னுரையாக அவர் எழுதும் கவிதையில் பித்தனை அவர் இப்படி அறிமுகப்படுத்துகிறார்,
“என் ‘ஆலாபனை’யின் பாடகன்
’நேர்’களின் ரசிகன்.

பித்தன்
‘எதிர்’களின் உபாஸகன்.

எந்த நதியானாலும்
எதிர் நீச்சலே போடுபவன்.

காரணம், அவன்
உண்மையின்
பின் பக்கத்தைப்
பார்த்துவிட்டவன்.

அதனால்
அறிவுச் சிறையிலிருந்து
விடுதலை அடைந்தவன்.

அவன்
இருளால்
ஒளி பெற்றவன்

மர்மங்களின் ரசிகன்.

அதனால்
‘இருளிலிருந்து ஒளிக்கு’ என்ற
முழக்கத்திற்கு எதிராக
‘ஒளியிலிருந்து இருளுக்கு’
என்று முழங்குபவன்.

உலகம் பார்க்காத
இருண்ட பக்கங்களின்
அழகை அறிந்தவன்.

அவன்
புறப்படுகிறவன் அல்ல;
திரும்புகிறவன்.

அவன்
’இல்லை’யின் தூதுவன்.

’இல்லை’ அவனது
மகா வாக்கியம்;
ஒற்றைச் சொல் வேதம்.

சீழ் நிரம்பிய
கொப்புளங்களை
முலை என்று சப்பும்
குழந்தைகளைப்
பரிகசிப்பவன்.

தீபங்களை
ஏற்ற அல்ல;
அணைக்க வந்தவன்.

எழுப்ப அல்ல
உறங்க வைக்க
வந்தவன்.

அவன் தேனீ;
அதனால்
எல்லாப் பூக்களிலும்
வித்தியாசம் பார்க்காமல்
தேன் எடுப்பவன்.

எந்தக் கூண்டிலும்
அடைபடாதவன்.

உண்மைக்குப்
பல முகங்கள் உண்டு
என்பதை அறிந்தவன்

அத்தனை முகங்களுக்கும்
முத்தம் தருபவன்.

முரண்கள்
கள்ளக் காதலர்கள்
என்பதைக்
கண்டுபிடித்தவன்.”

Related image

இந்த முன்னுரை முழுக்கவும் அப்படியே ஓஷோவுக்குப் பொருந்திப் போகிறது என்றே நான் கருதுகிறேன். இந்தக் கவிதையின் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் அவருடைய கட்டுரைகளில் பல இடங்களிலிருந்து விளக்கங்களை நாம் எடுத்துரைக்க முடியும். அதனால் இவ்வரிகள் கவிக்கோவின் ஆளுமையைக் காட்டுவதாகவே நாம் காண வேண்டும் என்று சொன்னாலும், கவிக்கோவை விட இவ்வரிகள் ஓஷோவைத்தான் முழுமையாகக் குறிக்கின்றன என்பதே என் துணிபு. அதற்கு இந்தப் ‘பித்தன்’ நூலிலேயே ஒரு சான்று காட்டலாம். ’அறிக்கை’ என்னும் கவிதையில் அவர் இப்படி எழுதுகிறார்:

“’உன் கொள்கை என்ன?’
என்று பித்தனைக் கேட்டேன்.

‘கொள்கையின்மை’
என்றான் பித்தன்.”

இதனைத் தொடர்ந்து, சத்தியத்தைப் பற்றிய கொள்கையை ஏற்றுக்கொள்வதன் அபாயம் பற்றிப் பித்தன் பேசுகிறான். இது அப்படியே ஓஷோவின் மிகப் பிரபலமான கருத்து ஒன்றினைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஜென் பற்றிய உரையொன்றில் அவர் சொல்கிறார் “உனக்கு ஒரு நம்பிக்கை அமைப்பைத் தரும் எவரும் உன்னுடைய எதிரிதான். ஏனெனில் அந்த நம்பிக்கை அமைப்பே உன் கண்களுக்குத் தடையாகிவிடும். உன்னால் உண்மையைப் பார்க்க முடியாது. உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற ஆர்வமே மறைந்துவிடுகிறது.”

கோ சுவான் என்னும் தாவோயிச ஞானியைப் பற்றிப் பேசும்போது ஓஷோ சொல்வார், “நான் எல்லா லட்சியங்களுக்கும் எதிரானவன், நான் எல்லாக் கொள்கைகளுக்கும் எதிரானவன். ஏனென்றால் அவை எல்லாம் உங்களுடைய மனம் வலிமை பெற உதவுகின்றன. ஆனால் நீங்கள் உங்கள் மனத்திற்கு அப்பால் செல்ல உங்களுக்கு உதவுவதே இங்கே என் பணி” (நூல்: “Tao: The Golden Gate”, Vol.2).

’பித்தன்’ நூலின் தலைப்பு கலீல் ஜிப்ரானுடைய நூற்தலைப்பு என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 1918-இல் அவர் எழுதிய “The Madman” என்னும் நூல் வெளிவந்தது. தன்னுடைய முகமூடிகளைத் தான் இழந்துவிட்டதால் உலகின் பார்வையில் தான் ஒரு பித்தன் ஆகிவிட்டதாக அந்த நூலை அவர் தொடங்குகிறார்.

”பிரளயம்” என்னும் கவிதையில் கவிக்கோவின் பித்தன் இப்படிப் பேசுகிறான்:

“’இல்லை’யின்
தூதுவன் நான்.

‘இல்லை’ என்
மகாவக்கியம்.

’இல்லை’ என்
ஒற்றைச் சொல் வேதம்.”

இந்த வரிகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கவிக்கோ எழுதிய “இல்லையிலும் இருக்கிறான்” என்னும் கட்டுரையை நாம் படிக்க வேண்டும். அதில் அவர் சொல்லும் கருத்துக்கள் மதவாதிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கலாம். அதில் அவர் சொல்கிறார்:

“உண்மையில் ஆத்திகம், நாத்திகம் என்று பேதம் பாராட்டுவது பாமர நிலையாகும். ஞானியர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் சமமாகவே மதிக்கின்றனர். அவர்கள் இறைவன் இல்லை என்போரை ஏசுவதில்லை. அப்படியும் சொல்ல இடமிருக்கிறது என்றே கூறுகின்றனர்.”

தொடர்ந்து அவர் ‘இல்லை’ என்னும் கருத்து தருகின்ற ஞானங்கள் என்னென்ன என்பதையெல்லாம் ஆன்மிக நோக்கில் விளக்கிச் செல்கிறார். அதில் அவர் இஸ்லாத்தின் மூல மந்திரமான கலிமாவிற்கும் வந்து சேர்கிறார். அங்கே சொல்கிறார்:

“இஸ்லாத்தின் மகாவாக்கியம் ‘இல்லை இறைவன்’ என்றே தொடங்குகிறது. அதாவது உலகம் எதை எதை இறைவன் என்று நினைத்து வணங்குகிறதோ அவையெல்லாம் இறைவன் இல்லை என்று பொருள். இவ்வாறு விலக்கிய பிறகு எது எஞ்சுகிறதோ அதுவே இறைவன். ‘இல்லை இறைவன்; இறைவனைத் தவிர’ என்பது முழுமையான மகா வாக்கியம். ‘இல்லை இறைவன்’ என்பதில் இல்லையே இறைவன் என்ற பொருளும் இருக்கிறது.”
    
  கவிக்கோவை ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கு ஒன்று தெரியவரலாம். அதாவது இல்லை என்னும் மறுப்பினுள்ளும் அவர் இறைவனையே காண்கிறார். இந்த ஞானம் கவிச்சக்கரவர்த்தி கம்பனிடமும் இருந்தது. ’இரணியன் வதைப்படல’த்தில் அதை அவன் வெளிப்படுத்துகிறான். ’இறைவன் இல்லை’ என்று சொல்லும் இரணியனிடம் அவனது மகன் பிரகலாதன் சொல்வதாக அந்த வரி வருகிறது: “நீ சொன்ன சொல்லினும் உளன்”.

கவிக்கோவின் நாற்பொருள்

       கவிக்கோ அவர்களின் எழுத்துக்களில் நாம் மீண்டும் மீண்டும் சந்திக்கின்ற பொருண்மைகள் எவையெவை என்று அலசிப் பார்த்ததில் அவரது நாற்பொருள் என்று சொல்லத்தக்க அளவில் பூ, பெண், இசை, இறைவன் ஆகிய நான்கும் அமைந்திருப்பதாகக் காண்கிறேன். இந்நான்கினையும் இணைக்குமொரு சரடாகக் காதல் இருப்பதைப் பார்க்கிறேன்.

Related image

      பூ, பெண், இசை, இறைவன் ஆகிய இந்த நான்கு புலனங்களையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகக் காணுகின்ற பார்வை, காட்டுகின்ற புலப்பாடு அவரது எழுத்துக்களில் விரவிக் கிடக்கின்றன. அவரது நூற்களை கவனமாக வாசித்தால் நான் சொல்வதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இங்கே விரிவாகப் பேசுவதற்கு நேரமின்மையால் ஒரு சில மேற்கோள்களை மட்டும் உங்களுக்கு எடுத்துக்காட்ட விழைகிறேன்.

      ”பூப்படைந்த சப்தம்” என்னும் நூலிலே உள்ள முதலிரு கட்டுரைகளை அவதானித்தால் இந்த நான்கு பொருண்மைகளுமே இருக்கின்றன. “பூப்படைந்த சப்தம்” என்னும் முதற்கட்டுரை இசையைப் பற்றிப் பேசுகிறது. அதில் அவர் சொல்கிறார்:

      ”இசையில் ஓர் அமானுஷ்யம் இருக்கிறது. அதில் படைப்பின் ரகசியமும் இறைவனின் மர்மமும் மறைந்திருக்கின்றன. / இசையை அறிகிறவன் படைப்பின் ரகசியத்தை அறிகிறான். இறைவனின் மர்மத்தை அறிகிறான்”

      இதே கட்டுரையில் இன்னோர் இடத்தில் சொல்கிறார்: “இசை இறைவனுடைய வேதம். அதில் எல்லா ஞானங்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன”

      இப்படியாக இசையை இறைவனுடன் தொடர்புடைய ஒன்றாகக் காட்டுகின்ற கவிக்கோ அவர்கள் அதனை “பூப்படைந்த சப்தம்” என்று வருணிக்கின்றார். பூப்படைதல் என்னும் சொல்லே பூவையும் பெண்ணையும் தொடர்புறுத்திப் பார்க்கின்றதொரு தமிழ்ச்சொல்லாடல். அச்சொல்லினை இங்கே இசைக்குச் சொல்லியிருப்பதன் மூலம் பூ பெண் இசை என்னும் முப்பொருளையும் தொடர்புறுத்திப் பார்க்கின்றதாகவும் ஆகிறது.
      
 ”பூவாலயம்” என்பது அந்நூலிலுள்ள இரண்டாம் கட்டுரை. அதிலே அவர் பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கும் ஒரு வரி மிக வியப்பானது. “பெண் அழகாகத் தெரிவதன் காரணம் அவள் பூவை ஞாபகப்படுத்துவதால்தான். / மேலும் அவளும் ஒரு பூவாகவே இருக்கிறாள் – சதைப்பூ!” என்று எழுதுகிறார். இந்த வரியைக் கவிக்கோவைத் தவிர வேறு யாராவது எழுதியிருந்தால் பெரும் பிரச்சனை ஆகியிருக்கலாம். மாதர் சங்கங்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்திருக்கலாம். ஆனால் கவிக்கோ எழுதுகிறார் என்றால் அவர் எந்தத் தளத்திலிருந்து எழுதுகிறார், அவருடைய சிந்தனை இயங்குகின்ற தளம் மிக மேலானது, ஞானமில்லாமல் எழுதமாட்டார், அவர் இப்படிச் சொல்கிறார் என்றால் அதில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கும் என்றெல்லாம் தமிழுலகம் புரிந்து வைத்திருப்பதால்தான் அப்படி அவர் எழுதியதை யாரும் எதிர்க்கவில்லை. கவிக்கோ இப்படிச் சொல்லுகின்ற இந்தப் பார்வையும்கூட தமிழ் கண்ட அறிவர்களிடம் முன்பே இருந்திருக்க வேண்டும். அதனாற்றான், பெண்களைப் ”பூவையர்” என்று குறிப்பிடுகின்ற சொல்லாடல் தமிழில் உள்ளது.

      பெண்ணைச் சதைப்பூ என்று பூவுடன் தொடர்புறுத்தி இங்கே சொன்னதைப் போலவே, ‘ரகசியப்பூ’ என்னும் நூலில் ஓரிடத்தில் அவர் பெண்ணை இசையுடன் தொடர்புறுத்திச் சொல்லும் வரியும் நினையத்தகும்:

      ”நீ
      இசையின்
      சதை வடிவம்”

      பெண்ணையும் இறைவனையும் அவர் தொடர்புறுத்திப் பேசுகின்ற அற்புதமான ஒரு ”கஸல்” வரி “மின்மினிகளால் ஒரு கடிதம்” என்னும் நூலில் தொடக்கமாக அமைந்திருக்கிறது. அவர் சொல்கிறார்:

      ”இறைவா!
      நம் சங்கமத்திற்காகத்தான்
      பெண்ணிடம்
      ஒத்திகைப் பார்த்துக்
      கொண்டிருக்கிறேன்”

      பெண் என்னும் பொருண்மையே இறைவனுக்கான ஒரு குறியீடு என்பதாக அவர் கண்டிருக்கிறார், சூஃபிகள் ’நாயகி-நாயக’ பாவனையில் இறைவனைக் காதலி என்றழைக்கும் மரபினை அவரின் இதயம் சரியான நோக்கில் உள்வாங்கியிருக்கிறது என்பதை இந்நூலின் முன்னுரையில் அவர் எழுதுகின்ற வரிகள் நமக்குக் காட்டும்:

      ”இந்த வயதில் காதல் கவிதைகளா என்று கேட்டார்கள். இந்த வயதில்தான் காதல் கவிதைகள் மாமிச அழுக்கில்லாமல் தூய்மையாக உதிக்கின்றன. / மேலும் இந்தக் காதல் வெறும் பெண் காதல் அல்ல; அனைத்தையும் பெண்ணாகக் கண்டு கட்டித் தழுவிக் கொள்ளும் காதல். / இந்தக் காதலில் இறைவனும் காதலியாகிவிடுகிறான். / தன்னை மறப்பதே ஞானம். காதல் இதைச் சாத்தியமாக்குகிறது. / உண்மையில் காதல் என்பது இறைவனைச் சுவைப்பதுதான்.”

      இந்த வரி இன்னொரு வரியை நினைவூட்டுகிறது. ”ரகசியப்பூ” என்னும் நூலில் அவர் இப்படி எழுதுகிறார்:

      ”கவிதையில்
      பெண் ருசி
      இருக்கிறது”

      ”பூவாலயம்” என்னும் கட்டுரையில் பூவுடன் பெண்ணைத் தொடர்புறுத்திப் பேசுகின்ற அதே நேரம் பூவையும் இறைவனையும் தொடர்புறுத்திக் காட்டுகின்ற வரிகளையும் காண்கிறோம். “ஒவ்வொரு பூவும் ஓர் ஆலயம். / செயற்கை ஆலயம் அல்ல; இயற்கை ஆலயம். / மனிதர்கள் கட்டிய ஆலயமல்ல, இறைவன் தனக்குத் தானே எழுப்பிக்கொண்ட ஆலயம். / அழகானவனுக்கான அழகான ஆலயம். / பூ என்றால் அழகு; அழகு என்றால் உண்மை; உண்மை என்றால் இறைவன்.” என்று அவர் சொல்கிறார்.

பூ ஓர் ஆலயமாக இருப்பதை மேலும் மேலும் விரித்துரைத்துச் சென்று அக்கட்டுரையின் இறுதியில் அவர் சொல்கிறார்: “பூவின் பக்தன் பூவாகிவிடுகிறான். அவன் முள்ளாக இருப்பதில்லை. / ஓ! இந்த மனிதர்கள் ஏன் இந்த அழகான பூ மதத்தை விட்டு விட்டு முள் மதங்களை எடுத்துக் கொண்டார்கள்? / பூக்களில் எத்தனையோ வகை. ஆனால் தேன் ஒன்றுதான். / இது தேனீக்குத்தான் தெரியும். / தேனீயாகிறவன் ஞானியாகிறான்.”

இறுதியாகச் சொன்ன இந்த பூ – தேன் என்னும் குறியீடு, மதம் – ஞானம் என்னும் பொருளைச் சுட்டுவதற்காகக் கவிக்கோ அடிக்கடி உரைக்கின்ற ஒன்று. ”பித்தன்” நூலிலும் ”அறிக்கை” என்னும் கவிதையில் இதைப்போன்றே அவர் சொல்லியிருக்கிறார்:

“மதவாதி
‘என் தோட்டத்துப்
பூவில் மட்டும்தான்
தேன் இருக்கிறது’
என்கிறான்

நானோ தேனீயாக இருக்கிறேன்.

பூக்களின் வேறுபாடுகளைத்
தேனீ
இலட்சியம் செய்வதில்லை.

தோட்டத்து வேலிகள்
அதைத் தடுப்பதில்லை.

எல்லாப் பூக்களிலும்
தேன் உண்டு
என்பதும்
தேன் என்பது ஒன்றுதான்
என்பதும்
தேனீக்கு மட்டும்
தெரிகிறது.

ஒரு பூவின் தேன்
தேனீக்குப் போதாது.”

அன்பர்களே! தேனடையை அறுத்தெடுத்துப் பிழியும்போது நாம் தேனைத்தான் அடைகின்றோம். அந்தத் தேனில் பூக்களின் முகவரிகள் இருப்பதில்லை. எந்தச் செடியில் கொடியில் மரத்தில் பூத்த மலர்களின் தேன் என்று வேறுபடுத்திப் பார்ப்பதற்கு வழியில்லை. கவிக்கோ அவர்களின் கவிதைகளின் தொகுதியை நாம் தேனடை என்று சொல்லலாம். பல்வேறு ஞானமரபுகளில் அவர் திரட்டி வந்த தேன் அதில் இருக்கிறது. அந்த ஞானமரபுகள் என்னும் பூந்தோட்டங்கள் எவை எவை என்பதைக்கூட அவர் மறைத்தவர் அல்லர். அவரின் கட்டுரை நூற்களில் அவற்றின் முகவரியை அவர் நமக்குச் சொல்கிறார். நாமும் தேனீக்களாக வேண்டும், பேதங்கள் பாராது தேன் திரட்டவேண்டும் என்பது அவரின் அவா. அதற்காகத்தான் அந்த ஞானமரபுகளின் முகவரிகளை அவர் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பாரதி சொல்வான், “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் / பூமிதனில் யாங்ஙனுமே பிறந்ததில்லை. உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்று. கம்பன் வள்ளுவன் இளங்கோ என்னும் அந்தப் பட்டியலில் நான்காவதாக பாரதியையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்லப்படுவதுண்டு. அந்தத் தகுதி பாரதிக்கு இருக்கிறது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அவ்வகையில், பாரதிக்குப் பின் ஐந்தாவதாகக் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை நாம் சேர்த்துக்கொள்ளலாம். அந்தத் தகுதி அவருக்கு உண்டு என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.


   (end.)   

No comments:

Post a Comment